செவ்வாய், 22 நவம்பர், 2011

நுழைவுக் கட்டணம் ரூ.50 எலைட் பார் தொடக்கம்


சென்னை : தமிழகத்தில் வரும் டிசம்பர் முதல் வாரத்தில் இருந்து எலைட் பார்கள் செயல்பட உள்ளன. நுழைவு கட்டணம் ரூ.50. வடமாநில நிறுவனம், அண்டை மாநில நிறுவனம் இவற்றை நடத்த முன் வந்துள்ளன. தமிழ்நாட்டில் மது விற்பனையை அரசே ஏற்று நடத்தி வருகிறது. தற்போது 6696 மதுக்கடைகள் உள்ளன. அவற்றில் ஆண்டுக்கு சுமார் 19 ஆயிரம் கோடி மது வகைகள், பீர், ஒயின் வகைகள் விற்பனையாகின்றன. இதன் மூலம் அரசுக்கு ரூ.15 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது.
தற்போது உயர்ரக மது வகைகள், விலை உயர்ந்த மது வகைகள், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மது வகைகளை விற்க எலைட் பார்கள் என்ற பெயரில் தனி மது விற்பனை நிலையங்களை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. தற்போது பல்வேறு பகுதிகளில் ஏசி வசதி செய்யப்பட்ட பார்களும் சாதாரண பார்களும் டாஸ்மாக் கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த பார்கள் ஆளும் கட்சியினருக்கு அல்லது அவர்களுக்கு  வேண்டியவர்களுக்கு தரப்பட்டுள்ளன.

தற்போது புதிதாக 600 எலைட் பார்கள் அமைக்கப்பட உள்ளன. இதில் முதல் கட்டமாக வரும் டிசம்பர் மாதம் 200 எலைட் பார்கள் தொடங்கப்பட உள்ளன. இவை பெரும் பாலும் பிரமாண்டமான ஷாப்பிங் சென்டர்கள், மால்களில் அமைக்கப்பட உள்ளன. அதிக அளவு இட வசதி, ஏசி வசதி, நவீன அறைகள், நட்சத்திர ஓட்டல் போன்ற பார்கள், உணவகங்கள் இதில் இடம் பெற உள்ளன.

 ஊரக பகுதிகளில் பரந்த நிலப் பரப்பில் எலைட் பார்கள் அமைக்கப்படும். நுழைவு கட்டணம் ஒரு நபருக்கு ரூ.50. நொறுக்கு தீனியும் வழங்கப்படும். சைட் டிஷ் உணவு வகைகளுக்கு செலவு தனி. குவார்ட்டர் ரூ.130க்கு மேற்பட்ட மதுவகைகள் பீர் வகைகள், வெளிநாட்டு மது வகைகள் விற்பனைக்கு கிடைக்கும். இதற்கான வரி கூடுதலாக வசூலிக்கப்படும். உணவு வகைகளுக்கு தனி கட்டணம். மது விற்பனை பிரிவு மட்டும் டாஸ்மாக் நிறுவன கட்டுப்பாட்டில் இயங்கும். பார்களை தனியார் நிறுவனங்கள் மூலம்  நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. வடமாநிலத்தை சேர்ந்த பெரிய நிறுவனமும். அண்டை மாநிலத்தை சேர்ந்த நிறுவனமும் பார்களை நடத்த அனுமதி கேட்டு தமிழக அரசும் சம்மதித்து விட்டதாக கூறப்படுகிறது.

தற்போது அண்ணா சாலையில் உள்ள ஸ்பென்சர்ஸ் ஷாப்பிங் காம்ப்ளக்சில் மாதிரி எலைட் பார் செயல்பட்டு வருகிறது. படிப்படியாக எலைட் பார்களை அதிகரித்து 1000 பார்கள் நடத்தவும் அரசு முடிவு செய்துள்ளது. இதற்கிடையே மது வகைகளின் விலைகளை விரைவில் 15 சதவீதம் உயர்த்தவும் அரசு திட்டமிட்டு அதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறதாம்.

கருத்துகள் இல்லை: