புதன், 23 நவம்பர், 2011

5 அதிகாரிகளுக்கு ஜாமீன்- டிபி ரியால்டி, யுனிடெக், ஆர் காம் பங்குகள் கிடுகிடு உயர்வு

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் வழக்கில் ஐந்து நிறுவன அதிகாரிகளுக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து இவர்கள் சார்ந்த டிபி ரியால்டி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், யுனிடெக் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலையில் இன்று கிடுகிடு உயர்வு காணப்பட்டது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்வழக்கில், முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவுடன் கூட்டு சேர்ந்து முறைகேடாக ஸ்பெக்ட்ரம் பெற்றதாக இந்த ஐந்து பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் இயக்குனர் வினோத் கோயங்கா, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவன அதிகாரிகள் ஹரி நாயர், கெளதம் தோஷி, சுரேந்திர பிபாரா மற்றும் யூனிடெக் வயர்லெஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா ஆகியோர் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தை அணுகியிருந்தனர். இவர்களுக்கு ஜாமீன் வழங்க சிபிஐ கடும் ஆட்சேபனை தெரிவித்திருந்தது. இருப்பினும் இந்த ஐந்து பேருக்கும் இன்று ஜாமீன் கிடைத்து விட்டது.
இதையடுத்து இவர்கள் சார்ந்த நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு இன்று கிடுகிடுவென உயர்ந்தது.
தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து 10.30 மணியளவில் டிபி ரியால்டி நிறுவனத்தின் பங்கு 20 சதவீதம் உயர்ந்தது. கடந்த 6 மாதங்களில் இந்த நிறுவனத்தின் பங்குகள் 15 சதவீத சரிவைக் கண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்வான் டெலிகாம் நிறுவன இயக்குநராக உள்ள வினோத் கோயங்காதான் டிபி ரியாலிட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல யுனிடெக் நிறுவனத்தின் வர்த்தகமும் 6 சதவீத உயர்வைக் கண்டுள்ளது. கடந்த 6 மாதங்களில் இது 25 சதவீதத்திற்கும் மேலான சரிவைக் கண்டிருந்தது.
மேலும் முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் பங்கு விலையும் மும்பை பங்குச் சந்தையில் இன்று 4 சதவீத உயர்வைக் கண்டது. இந்த நிறுவனத்தின் கெளதம் தோஷி, சுரேந்திர பிபாரா, ஹரி நாயர் ஆகியோர் விடுதலையாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: