சனி, 26 நவம்பர், 2011

வீட்டில் அடைத்து மாதக்கணக்கில் சீரழித்தனர்: மாயாவதி கட்சி எம்.எல்.ஏ.மீது பெண் புகார்

லக்னோ: உத்தர பிரதேசத்தில் ஆளுங் கட்சி எம்.எல்.ஏ. நீரஜ் மவுரியா மீது இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் கொடுத்துள்ளார். உ.பியில், பாலியல் புகாருக்கு ஆளாகும் 10வது பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. நீரஜ் என்பது குறிப்பிடத்தக்கது.


உத்தர பிரதேச மாநிலம் ஜலால்பூர் தொகுதி எம்.எல்.ஏ. நீரஜ் மவுரியா. ஆளும் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர். அவர் மீது ஷாஜகான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் கொடுத்துள்ளார்.

ஜுடிஷியல் மாஜிஸ்திரேட் பருல்பவார் முன்பு அந்த பெண் அளித்த வாக்குமூலம் வருமாறு,
கடந்த 2010ம் ஆண்டு நவம்பர் மாதம் நீரஜ் மவுரியாவின் ஆட்கள் என்னை கடத்திச் சென்று ஜலாலாபாத்தில் உள்ள அவரது வீட்டில் ஒரு மாதத்துக்கு மேலாக என்னை அடைத்து வைத்திருந்தனர். அப்போது எம்.எல்.ஏ.வும், அவரது கூட்டாளிகளும் என்னை பலமுறை கற்பழித்தனர். பின்னர் ஹரியானாவில் உள்ள ஒரு பண்ணை வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்று அங்கு எனக்கு வலுக்கட்டாயமாக போதை மருந்து கொடுத்தனர்.
தினமும் பலர் என்னை கற்பழித்தனர். இதில் நான் கர்ப்பமானேன். அப்படியும் அவர்கள் என்னை விடவில்லை. குழந்தை பிறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு வரை கற்பழித்தனர். எனக்கு ஆண் குழந்தை பிறந்தவுடன் என்னை அந்த பண்ணை வீட்டிலேயே விட்டுவிட்டு அவர்கள் சென்றுவிட்டனர்.

நான் அந்த வீட்டில் கைக்குழந்தையுடன் சில நாட்கள் தனியாக இருந்தேன். என் உடல்நிலை கொஞ்சம் தேறியதும் அங்கிருந்து வெளியேறி வீடு வந்து சேர்ந்தேன். எனது தந்தையை அழைத்துக் கொண்டு சென்று உள்ளூர் போலீசில் புகார் கொடுத்தேன். ஆனால் அவர்கள் புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, எம்.எல்.ஏ. நீரஜ் மவுரியா, அவரது கூட்டாளிகள் மற்றும் புகாரை பதிவு செய்ய மறுத்த போலீசார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

பாலியல் புகாரில் சிக்கியுள்ள 10வது ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. நீரஜ் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு உத்தரபிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் தனது கட்சி எம்.எல்.ஏ. ஒவ்வொருவராக பாலியல் புகாரில் சிக்குவது முதல்வர் மாயாவதியை கடுப்பாக்கியுள்ளது.

கருத்துகள் இல்லை: