செவ்வாய், 22 நவம்பர், 2011

பால்...Bus...Gas...'மேடம், நீங்க சொன்ன மாதிரியே ஆயிடுச்சு. நாங்க நல்லாவே அனுபவிக்கிறோம்









''இன்னும் 5 ஆண்டுகளுக்கு தமிழக மக்கள் அனுபவிக்கப் போகிறார்கள்'' என்று தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி, அ.தி.மு.க. மாபெரும் வெற்றிவாகை சூடிய நிலையில் சொன்னார் நடிகை குஷ்பு.

தற்போது... பால் மற்றும் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டு, மின் கட்டணமும் விரைவில் உயரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில்... ''குஷ்பு சொன்னது சரியாத்தான் போச்சு... இன்னும் 5 வருஷத்துக்கு எப்படி தாக்குப் பிடிக்கப் போறோமோ...!'' என்று தமிழகம் முழுக்க தாய்மார்கள் கண்ணீர் மழையில் நனைந்து கொண்டிருக்கிறார்கள்.
இதைப்பற்றி குஷ்புவிடமே கேட்டபோது... ''முதல்வரோட அறிவிப்பு வெளியான நிமிஷத்துல இருந்தே... 'மேடம், நீங்க சொன்ன மாதிரியே ஆயிடுச்சு. நாங்க நல்லாவே அனுபவிக்கிறோம்’னு பலரும் போன் பண்ணி வருத்தப்படறாங்க.
காலையில பேப்பர்ல... 'டெய்லி எங்க வீட்டுக்கு ஒரு லிட்டர் பால் வாங்குவேன். இனி, அரை லிட்டர்தான் வாங்கி புள்ளைங்களுக்கு கொடுக்க முடியும்' என்று கண்ணீரோட ஒரு அம்மா சொல்லியிருக்காங்க.
இன்னொரு பொண்ணு, 'எனக்கு சம்பளம் ஆயிரத்து ஐந்நூறு ரூபாய். இதுல பஸ்ஸுக்கே 600 ரூபாய் போய்க்கிட்டிருந்தது. இனி, பஸ்ஸுக்கே ஆயிரம் போயிடும். 500 ரூபாய்தான் மிஞ்சும். இந்தப் பணத்துக்காக வேலைக்கு போயாகணுமானு யோசிக்க ஆரம்பிச்சுட்டேன்'னு சொல்லியிருக்காங்க.
இதையெல்லாம் படிச்சதும் மனசுக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சு.
சமச்சீர் கல்வியில் கைவெச்சாங்க, தலைமைச் செயலகத்தை மாத்தினாங்க, நூலகத்த ஆஸ்பத்திரியா மாத்த பார்த்தாங்க. இப்போ... பால், பஸ்ஸுனு நேரடியாவே மக்கள் தலையில கைவெச்சுட்டாங்க. மக்கள் மாற்றத்தை விரும்பினாங்க... ஏமாற்றமா முடிஞ்சு போச்சு'' என்று சொன்னார் குஷ்பு.

'ஏமாந்தது ஒருபக்கம் இருக்கட்டும். இந்த இக்கட்டான நிலைமையை சமாளிச்சு, குடும்பத்தை எப்படி ஓட்டறது?' என்று பஸ் மற்றும் பால் விலை உயர்வு வந்த நிமிடத்திலிருந்தே யோசிக்க ஆரம்பித்து, சூப்பர் சூப்பர் பிளான்களை போட்டு வைத்துவிட்ட நம் பெண்கள் சிலர், குமுறலோடு சேர்த்து அந்த பிளான்களையும் இங்கே பகிர்கிறார்கள்!

கவிதா (தனியார் பள்ளி ஆசிரியை - கோவை):
''வேலை பார்த்துட்டே படிக்கிறேன். கணவர், தங்க நகை கட்டிங் வேலை செய்றார். என்னோட ரெண்டு பசங்களும் பிரைவேட் ஸ்கூல்ல படிக்கறாங்க. டெய்லி பஸ்லதான் கூட்டிட்டு போவேன். போறதுக்கும் வர்றதுக்கும் சேர்த்து ஒரு ஆளுக்கு எட்டு ரூபாய் டிக்கெட். ரெண்டு பேருக்கும் 16 ரூபாய். காலையில கொண்டு விட்டு, சாயந்திரம் திரும்பவும் போய் கூட்டி வருவேன். அதுக்கு 16 ரூபாய் டிக்கெட். மொத்தம் 32 ரூபாய்தான். இது நேத்து வரைக்கும். இப்ப... போக வர ஒரு ஆளுக்கு 24 ரூபாய் ஆக்கிட்டாங்க. மொத்தமா 96 ரூபாய் வைக்க வேண்டியிருக்கும்.

நான் வேலை பார்க்கற ஸ்கூலுக்கு போறதுக்கு மூணு ரூபாயா இருந்த டிக்கெட், இப்ப எட்டு ரூபாய். அதுக்கு 16 ரூபாய் வைக்க வேண்டியிருக்கும். ஆக மொத்தம் 112 நூறு ரூபாய். ஏற்கெனவே, 38 ரூபாய் செலவு பண்ணிட்டிருந்த நிலையில... இதை எப்படி சமாளிக்க முடியும்?
பஸ் செலவை குறைக்க ஒரே வழி, ஒரு கிலோ மீட்டர் அல்லது ரெண்டு கிலோ மீட்டர் நடந்து, அங்க இருந்து பஸ் பிடிச்சு போகணும். ஆனா, அதுக்காக விடிகாலையில மூணு மணிக்கு எழுந்திரிக்கணும். வேற என்ன பண்றது?''
ஹேமலதா (தனியார் நிறுவன ஊழியை - திண்டுக்கல்):
''சமன்படுத்தப்பட்ட பாலை, இருபத்தஞ்சு ரூபாய் கொடுத்து தினமும் வாங்குறோம். இப்ப பத்து ரூபாய்க்கு மேல ஏத்தியிருக்காங்க போல. இப்படியே போனா... கட்டுப்படியாகாது. பாலுக்கு இணையானதுதான் முட்டை. அதனால, டெய்லி என் பையனுக்கு ரெண்டு முட்டை உடைச்சு ஊத்தி குடிக்க வெச்சுருவேன். ஆறு ரூபாய்ல விஷயம் முடிஞ்சுது. எங்க ரெண்டு பேருக்கும் கடுங்காப்பி ரொம்ப பிடிக்கும். அதுக்கு மாறிடுவோம்.''

முத்துமீனா வெங்கடாசலம் (ஆசிரியை - சென்னை):
''ரெண்டு பிள்ளைங்க, மாமியார், கணவர், நான்னு ஐந்து பேர் வசிக்கிற குடும்பம். பிரைவேட் கம்பெனி சூப்பர்வைஸரா இருக்கறார் கணவர். நான் டீச்சர் வேலைக்கு போறேன். அப்படியும்கூட ஸ்கூல் ஃபீஸ், மெடிக்கல் செலவுனு பணம் பத்த மாட்டேங்குது. இந்த லட்சணத்துல விலை ஏறிப்போச்சு. இனி, ரெண்டாயிரம் ரூபாய் கூடுதலா செலவாகும். அதை சமாளிக்கறது எப்படினு ராத்திரியே யோசிச்சுட்டேன்.

ஒரு ஃபங்கஷனுக்கு குடும்பத்தோட போற பழக்கம் எங்களுக்கு உண்டு. இனி, தவிர்க்க முடியாத நிகழ்ச்சிகள் தவிர, மத்ததுக்கு யாராவது ஒருத்தர் மட்டும்தான் போகணும்; ஆட்டோவுல போயிட்டு இருந்த குழந்தைங்களுக்கு சைக்கிள் வாங்கித் தரணும்; வீக் எண்ட் ஹோட்டல் செலவை சுத்தமா கட் பண்ணணும்... இப்படி நிறைய யோசனை இருக்கு. ஒண்ணொண்ணா அமல் படுத்த வேண்டியதுதான்.''

லலிதா பாலசுப்ரமணியன் (குடும்பத் தலைவி, திருச்சி):
''கரன்ட்ல கூட நாப்பது சதவிகிதம் விலையேத்தம் பண்ணப் போறாங்களாம். படிச்ச உடனேயே ஷாக்தான். கரன்ட் பில்லை குறைக்க இப்பவே ரெடியாகிட்டேன். டெய்லி வாஷிங் மெஷின்ல கொஞ்ச கொஞ்ச துணிகளா துவைச்சுடுவேன். இனி, வாரத்துல ஒரு நாள் ஒட்டுமொத்தமா துவைக்கப் போறேன். ஃப்ரிட்ஜ்ல ஏகப்பட்ட காய்கறி, பழத்தை வாங்கி அடுக்கி வைக்கிறத விட்டுட்டு, தினமும் வாங்கி பயன்படுத்தப் போறேன். சாயந்திரம் ஆறு மணியில இருந்து, தூங்கற வரைக்கும் எல்லா ரூம்லயும் லைட் எரியும். இனிமே, தேவைப்படுற இடத்துல மட்டும்தான் எரிக்க போறேன். பகல்ல மறந்தும்கூட லைட்டை எரிக்க மாட்டேன்.''

கவிதா (ஆசிரியை - விருதுநகர்):
''விருதுநகர்ல இருந்து டெய்லி பஸ்ல மதுரையில உள்ள ஸ்கூலுக்கு வந்து பாடம் எடுத்துட்டு போறேன். ஒரு நாளைக்கு ஐம்பது ரூபாய்தான் இதுவரைக்கும் செலவாச்சு. இப்ப எண்பத்தி ஆறு ரூபாய்னு ஆகிப்போச்சு. ஒரு மாசத்துக்கு இதுக்கே 2,500 ரூபாய் ஆயிடும். எந்த நேரத்துலயும் போய் வரலாம்னுதான் பஸ்ஸைத் தேர்ந்தெடுத்தேன். இனிமே ரிட்டர்ன் போறப்ப டிரெயினைப் பிடிக்கப் போறேன். அதுக்கு வெறும் 12 ரூபாய் 50 காசுதான்.''

உமா (குடும்பத் தலைவி - திருநெல்வேலி):
''எனக்கு பையன், பொண்ணுனு ரெண்டு பசங்க. வளர்ற பிள்ளைகளாச்சேனு பாலை டெய்லி அவங்களுக்கு கொடுத்துட்டு இருந்தேன். ஆனா, பாலை விட ஆரோக்கியமான உணவுகள் நிறைய இருக்குது. நான் சின்னப் பிள்ளையா இருக்கும்போது, வீட்டுல கருப்பட்டி காபிதான். அதுல இரும்புச் சத்து அதிகம், எலும்புகளுக்கும் நல்ல உறுதியைக் கொடுக்கும்.

பால் விலை கூடுதுனு அறிவிப்பு வந்ததுமே என் வீட்டுக்காரர் கருப்பட்டி வாங்கிட்டு வந்துட்டாரு. கேழ்வரகை பொடியாக்கி, தண்ணியில கரைச்சி வடிகட்டி, பனங்கற்கண்டையும் சேர்த்து காய்ச்சி, குழந்தைகளுக்கு கொடுத்தா... பாலைவிட கூடுதல் எனர்ஜி. சத்துக்கும் சத்தும் ஆச்சு, செலவை கண்ட்ரோல் பண்ணின மாதிரியும் ஆச்சு... என்ன சொல்றீங்க?''
thanks vikatan+aiswarya rajya lakshmi,dusseldorf

கருத்துகள் இல்லை: