வியாழன், 24 நவம்பர், 2011

கனிமொழி கோரிக்கை ஏற்பு-நாளையே ஜாமீன் மனுவை விசாரிக்கிறது டெல்லி ஹைகோர்ட்

2ஜி வழக்கில் கைது செய்யப்பட்ட 5 கார்பரேட் அதிகாரிகளுக்கு நேற்று ஜாமீன் வழங்கப்பட்டது. இதையடுத்து தனது ஜாமீன் மனுவை விரைந்து விசாரிக்குமாறு திமுக எம்.பி. கனிமொழி சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த மனு மீது நாளை காலை 10.30 மணிக்கே விசாரணை நடக்கவுள்ளது. முன்னதாக இந்த மனு வரும் டிசம்பர் 1ம் தேதி விசாரிக்கப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது.
2ஜி வழக்கில் கைதான திமுக எம்.பி. கனிமொழி கடந்த 6 மாதங்களாக திகார் சிறையில் உள்ளார். அவரது ஜாமீன் மனுக்கள் 4 முறை டெல்லி பாட்டியாலா சிபிஐ விசாரணை நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. இந்நிலையில் அவர் மீண்டும் ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை வரும் டிசம்பர் மாதம் 1ம் தேதி நடக்கும் என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.இந்நிலையில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவுடன் கூட்டு சேர்ந்து முறைகேடாக ஸ்பெக்ட்ரம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் இயக்குனர் வினோத் கோயங்கா, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவன அதிகாரிகள் ஹரி நாயர், கௌதம் தோஷி, சுரேந்திர பிபாரா மற்றும் யூனிடெக் வயர்லெஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா ஆகியோருக்கு நேற்று ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அவர்களுக்கு ஜாமீன் கிடைத்த சில மணி நேரத்திலேயே தனது ஜாமீன் மனுவை விரைந்து விசாரிக்குமாறு கனிமொழி சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதே போல 2ஜி வழக்கில் கைதாகி திகார் சிறையில் உள்ள தொலைத்தொடர்புத் துறை முன்னாள் செயலர் சித்தார்த் பெகுரா, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குநர் சரத் குமார், பாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் கரீம் மொரானி, குசேகாவ்ன் நிறுவனத்தின் இயக்குநர்கள் ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால் ஆகியோரும் தங்களின் ஜாமீன் மனுக்களை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

இவர்களது கோரிக்கையை டெல்லி உயர் நீதிமன்றம் இன்று ஏற்றுக் கொண்டது. இந்த மனுக்கள் மீது நாளை காலை 10.30 மணிக்கு விசாரணை நடக்கும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதற்கிடையே இதே 2ஜி வழக்கில் கைதாகி திகாரில் உள்ள ஆ. ராசா இதுவரையிலும் ஜாமீன் கோரவில்லை. இந்த வழக்கில் இவர் ஒருவர் மட்டுமே சிறைவாசத்தைக் கண்டு அஞ்சாமல் தொடர்ந்து சட்டரீதியான மோதல்களில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: