புதன், 23 நவம்பர், 2011

டெலிகாம் அதிகாரிகளுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன்- கனிமொழிக்கும் ஜாமீன் கிடைக்க வாய்ப்பு!

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் 5 தொலைத் தொடர்புத்துறை நிறுவன அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் இயக்குனர் வினோத் கோயங்கா, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவன அதிகாரிகள் ஹரி நாயர், கெளதம் தோஷி, சுரேந்திர பிபாரா மற்றும் யூனிடெக் வயர்லெஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா ஆகியோருக்கு இன்று ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவுடன் கூட்டு சேர்ந்து முறைகேடாக ஸ்பெக்ட்ரம் பெற்றதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவர்களுக்கு ஜாமீன் வழங்க சிபிஐ கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. இவர்களை விடுவித்தால், சாட்சிகளை அழித்துவிடுவர் என்று சிபிஐ தரப்பில் வாதம் செய்யப்பட்டது. ஆனால், அதையும் மீறி இவர்களுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
இந்த ஐந்து பேரும் கடந்த 7 மாதங்களாக சிறையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இவர்களது ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து இவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இதில் தான் இவர்களுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.
இதனால் திமுக எம்பி கனிமொழி, கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ரெட்டி ஆகியோருக்கும் ஜாமீன் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இவர்களுக்கு ஜாமீன் வழங்க சிபிஐ எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே சிபிஐ விசாரணை நீதிமன்றத்தில் கனிமொழி, சரத்குமாரின் ஜாமீன் மனுக்கள் பலமுறை தள்ளுபடி செய்யப்பட்டுவிட்ட நிலையில், இவர்கள் தாக்கல் செய்துள்ள புதிய ஜாமீன் மனு வரும் டிசம்பர் 1ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: