திங்கள், 21 நவம்பர், 2011

பஸ் கட்டண உயர்வை எதிர்த்து 'டிராபிக்' ராமசாமி வழக்கு-உயர்நீதிமன்றம் நாளை விசாரணை

பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக சேவகர் 'டிராபிக்' ராமசாமி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.
தமிழக அரசு முன்பு எப்பொழுதும் இல்லாத அளவுக்கு பேருந்து கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். இந்நிலையில் பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று பொது நலன் வழ்ககு தொடர்ந்தார். இதை வழக்கை அவசர வழக்காக கருதி உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு ராமசாமி கோரிக்கை விடுத்தார்.
அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.
இது குறித்து டிராபிக் ராமசாமி பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தில் சட்டத்தை சிறிதும் மதிக்காமல் பேருந்து கட்டணத்தை உயர்த்தியுள்ளதை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருக்கிறேன். இதை அவசர வழக்காக எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற எனது கோரிக்கையை நீதிபதிகள் ஏற்று நாளை விசராணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.

கட்டணத்தை உயர்த்துவதற்கு முன்பு மக்களுக்கு தெரிவித்திருக்க வேண்டும். பெட்ரோல் விலையை ஏற்றுகிறார்கள் என்றால் ஒரு நாளைக்கு முன்பே அது குறித்த செய்தி நாளிதழ்களில் வருகிறது. ஆனால் எந்தவித அறிவிப்பும் இன்றி பேருந்து கட்டணத்தை இரவோடு இரவாக உயர்த்தியிருக்கிறார்கள் என்றால் அது சட்டவிரோதமாகும். எனது மனுவில் இந்த கட்டண உயர்வை மக்கள் விரோதச் செயல் என்று குறிப்பிட்டுள்ளேன் என்றார்.

கருத்துகள் இல்லை: