வெள்ளி, 28 அக்டோபர், 2011

விஜய்க்கு ஏன் இப்படி ஒரு விபரீத ஆசை : வேலாயுதம் விமர்சனம்





டகம் சம்பந்தப்பட்ட படம் என்பதால், டைட்டில் கார்டில் ஜெயா டிவிக்கு நன்றி என்பதில் தொடங்கி,  ஜெயா டிவி, ஜெயா நியூஸ் என்று படம் முழுக்க  ஜெயா மயம்தான்.
 என் கட்சி ஒரேகட்சி.....என்று சின்ன இடைவெளி விட்டு ’தங்கச்சி’ என்று அரசியல் வெடிக்கிறார் விஜய்.  இன்னும் நிறைய வெடிக்கின்றன.
இந்த மண்ணை ஆண்டாரு..மக்களை ஆண்டாரு...அடுத்து மாநிலத்தையே..... என்று கிரேன் மனோகர் சொல்லிக்கொண்டிருக்கும் போது, அதற்கு மேல் சொல்ல வேண்டாம் என்று விஜய் சைகை செய்ய, நீங்க வேண்டாம்னு சொல்லுறதால சொல்லல என்று நிறுத்திக்கொள்கிறார்.
’’சிரிப்பை நாமளே வெளிப்படுத்துறோம், அழுகையை நாமளே வெளிப்படுத்துறோம்,  ஆனா... கோபத்தை வெளிப்படுத்த மட்டும்  பொதுவா ஒருத்தன் வரணும் என்று எதிர்ப்பார்கிறோம்.   ஒவ்வொருத்தரும் கோபத்தை வெளிப்படுத்தணும்.   தேர்தலின் போது கோபத்தை வெளிப்படுத்துங்க.   ஆட்சி மாற்றம் வரும்’’ என்று க்ளைமாக்ஸில் சரவெடி கொளுத்துகிறார் விஜய்.
இது போதாது என்று க்ளைமாக்ஸ் காட்சியில் பல்லாயிரக்கணக்கான விஜய் மக்கள் இயக்க கொடிகள்.
’’உழைச்சு சாப்பிடுறவனோட வியர்வை,தாய்ப்பாலைவிட சிறந்தது’’, ’’உங்க நாட்டுல வாழுற முஸ்லீம்களை விட ,எங்கள் நாட்டுல வாழுற முஸ்லீம்கள் பாதுகாப்பா இருக்காங்க’’, ’’சும்மாவே காட்டு காட்டுனு காட்டுவோம்,இதுல நீ காட்டு காட்டுனு வேற சொல்ற..’’ என்று படத்தில் நிறைய பஞ்ச் அடிக்கிறார் விஜய்.
படத்தின் துவக்க காட்சிதான்,  நாம விஜய் படத்துக்கு வந்தோமா? விஜயகாந்த் படத்துக்கு வந்தோமா? என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.   அட, ஆமாங்க, ஹெலிகாப்டர் வானில் பறக்கிறது. பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான் எல்லை என்று ஏதோ ஒரு பாலைவனத்தை காட்டுகிறார்கள்.  அங்கு விமானம் தரை இறங்குகிறது.  விமானத்தில் இருந்து தீவிரவாதிகளும் உள்துறை அமைச்சர் உலகநாதனும் இறங்குகிறார்கள்.
பக்கா கிரிமினல் அமைச்சரிடம்,  ’’எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறோம். சென்னை முழுவதும் குண்டு வெடிக்க வேண்டும்’’ என்று பேரம் பேசுகிறார்கள்.
’’என் பேங்க் அக்கவுண்டுல 5 ஆயிரம் கோடி ஏறுதுன்னா, சென்னையை சுடுகாடா ஆக்குறேன்’’ என சவால் விடுகிறார் உலகநாதன்.  இந்த சவாலை எல்லாம் முறியடிக்கிறார் வேலாயுதம்.

கிராமத்தில் வசித்து வரும் பால்கார இளைஞன் வேலாயுதத்திற்கு எல்லாமே தங்கை சரண்யா தான்.  தங்கை சரண்யா மேல் வேலாயுதம் உயிரையே வைத்திருக்கிறார்.  ‘’நீ அம்மா முகத்தை பார்த்ததே இல்லையில்ல... இப்ப பாரு..’’ என்று தங்கையை கண்ணத்தோடு அணைத்துக்கொண்டு கண்ணாடியை காட்டுகிறார்.
இப்படி தங்கச்சி செண்டிமெண்ட் வேலாயுதமாக இருக்கும் விஜய்,  எப்படி தமிழகமே கடவுளாக போற்றும் வேலாயுதமாக மாறுகிறார்? என்பதுதான் கதை.
ஒரு நிருபரின் கற்பனைப்பாத்திரம் நிஜ உருவமெடுத்து அதர்மத்தை அழிப்பது வேலாயுதம். இது பத்து வருடங்களுக்கு முன்பு  நாகார்ஜூன், ஷில்பா ஷெட்டி, சவுந்தர்யா, ரகுவரன், பிரகாஷ் ராஜ் நடிக்க, மறைந்த இயக்குநர் திருப்பதிசாமியின் இயக்கத்தில் வெளிவந்த ‘’ஆசாத்’’ தெலுங்கு படத்தின் முழு நீள தழுவல்.
மூலக்கதை திருப்பதிசாமி என்று மட்டும் டைட்டில்கார்டில் போடுகிறார் டைரக்டர் ராஜா.

கருத்துகள் இல்லை: