புதன், 26 அக்டோபர், 2011

கலைஞர் வீட்டில் பூப்பறிக்காத மனுசன், போயஸ் கார்டனில் மாங்காய் பறிப்பாரா

விழுப்புரம், இந்தியா: உள்ளாட்சித் தேர்தலில் செம அடி வாங்கியதில் வாய் திறக்காமல் முடங்கியுள்ள டாக்டர் ராமதாஸ், சைலன்டாக மற்றொரு சிக்கலைச் சந்திக்க உள்ளார். இவரது கட்சி பா.ம.க., மற்றொரு உடைவுக்கு தயாராகின்றது என்கின்றன, உள்வீட்டுத் தகவல்கள்.
ஏற்கனவே சட்டசபைத் தேர்தலுக்குப்பின் ஒரு தடவை உடைந்த கட்சி பா.ம.க. என்பதை வெளியே தெரியாதபடி பூசி மூடுவதில் டாக்டர் ஓரளவுக்கு வெற்றி பெற்றிருந்தார். ஆனால், அந்த வெற்றியே, அவரது உள்ளாட்சித் தேர்தலில் தோல்விக்கு அடித்தளம் போட்டது என்பது, அவரது கட்சியினருக்கே தெரியும்.
சட்டசபைத் தேர்தலுக்கு பின் எழுந்த விமர்சனங்களை அடக்குவதற்காக, கட்சிக்குள் இருந்து சிலரை நீக்கினார் டாக்டர்.
அவர்களும் வெளியே வந்தவுடன், டாக்டருக்கு எதிராக வாய்ஸ் கொடுத்தனர். ஆனால், ஓரிரு நாட்களில் அவையெல்லாம் அடங்கிப் போயின.
அதற்கு காரணம், வன்னியர் சமுதாய மட்டத்தில் டாக்டர் செய்த சில நகர்வுகள் என்று சொல்லப்பட்டது. எதிர்ப்பாளர்கள் அதற்கு மேலும் வாய் திறக்காதபடி, சமுதாயத்துக்கு உள்ளேயே சில முட்டுக்கட்டைகளை வெற்றிகரமாக போட்டார் அவர் என்கிறார்கள். அது, தற்காலிக வெற்றி ஒன்றை அவருக்கு கொடுத்தது, கட்சி உடைந்தது வெளியே தெரியாத வகையில்!
ஆனால், அப்போது வெளியேறிய ஆட்கள் உள்ளாட்சித் தேர்தலில் டாக்டருக்கு எதிராக சைலன்டாக வேலை செய்தார்கள். இதனால், பா.ம.க.வின் வாக்கு வங்கியில் இருந்து ஓட்டுக்கள் கொத்து கொத்தாக காணாமல் போய், தேர்தலில் ஒரேயடியாக கவிழ்த்து விட்டது.
இப்போது, அதே பழைய எதிர்ப்புக் குரல்கள், உட்கட்சிக் கலகங்களை தூண்டிவிட தொடங்கியுள்ளார்கள் என்பது எமக்கு கிடைத்த தகவல். விழுப்புரம் பகுதியில், பா.ம.க. ஆதரவாளர்களை சிறுசிறு குழுக்களாக சந்தித்து விமர்சனங்களை மு்வைப்பதாகத் தெரிகின்றது.
பெரும்பாலும் வன்னியர் சமுதாய இளைஞர்கள் இந்த எதிர்ப்பு கூட்டங்களில் கலந்து கொள்கிறார்கள்.
“தி.மு.க.வுடன் கூட்டணியில் இருந்தபோது, எமக்கு என்ன குறை வைத்தார்கள் அவர்கள்? ஏதாவது குறை இருந்தாலும், கலைஞரை உடனே நேரடியாக சந்தித்து சொல்லும் வசதி இருந்ததல்லவா? அ.தி.மு.க.வுடன் சேரலாம் என்று அந்த முகாமை விட்டு வெளியே வந்த டாக்டரை யாரும் தோட்டத்துப் பக்கமே அணுக விடவில்லை.
கலைஞர் வீட்டில் பூப்பறிக்க முடியாத இந்த மனுசனால், போயஸ் கார்டனில் மாங்காய் பறிக்க முடியுமா? இப்போது, அங்கும் இல்லை, இங்கும் இல்லை என்று வீதியில் நிற்கிறோம். பா.ம.க.வுக்கு இனி எதிர்காலம் கிடையாது. அடுத்து என்ன செய்வது என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்” இப்படி நேர்த்தியான முறையில் பாயின்ட் மேல் பாயின்டாக எடுத்து வைக்கப்படுகின்றதாம், விழுப்புரம் ஏரியாவில் நடைபெறும் அதிருப்திக் கூட்டங்களில்.
“இருந்து பாருங்கள், போகிற போக்கில் கட்சி மற்றொரு பிளவை விரைவில் சந்திக்கும்” என்று அடித்துச் சொல்கிறார்கள் இதில் மும்மரமாக உள்ள ஆட்கள்!
ஏதோ, நமக்கு தெரிய வந்ததைச் சொல்லி விட்டோம். வைத்தியர் ஐயா, ஆக்ஷன் பிளீஸ்!

• படித்தது, பிடித்திருக்கிறதா? நண்பர்களிடம் “விறுவிறுப்பு.காம்” பற்றி கூறுங்களேன்!

கருத்துகள் இல்லை: