திங்கள், 24 அக்டோபர், 2011

வடக்கில் காணிப்பதிவு ஏன்? திணைக்களம் விளக்கம்

வடமாகாணத்தில் தமிழர்களின் வாழ்வியல் பூமியில் காணிகளை மீள்பதிவு செய்வது தொடர்பாக வடமாகாணக் காணிப் பதிவுத் திணைக்களத்திடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் கூறிய விளக்கங்களை பின்வருமாறு:-
மேலை நாடுகளில் உள்ளதுபோல் அரசாங்கத்தின் பூரண உத்தரவாதமுடைய உரித்துச் சான்றிதழ்களை ஒவ்வொரு காணி உரிமையாளருக்கும் வழங்குவதே காணிப்பதிவு மேற்கொள்ளப்படுவதன் நோக்கம்.
1998ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட காணி உரித்துப் பதிவுச் சட்டத்தன்படி 2007ஆம் ஆண்டு முதன் முதலில் தென்னிலங்கையில் காணிப்பதிவு நடைபெற்றதாகவும், 2010ஆம் ஆண்டு தெற்கிலுள்ள 72 பிரதேசசபைகளில் இந்தப் பதிவுவேலை நடந்து முடிந்திருப்பதாகவும் வடமாகா காணித் திணைக்களத்தினர் குறிப்பிட்டனர்.2011ஆம் ஆண்டு ஜனவரி 12இல் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வடக்கிலுள்ள 5 மாவட்டங்களுக்கும் இந்தக் காணிப்பதிவு விஸ்தரிக்கப்பட்டு வடமாகாணத்தில் மொத்தமுள்ள 34 சபைகளில் தெரிவுசெய்யப்பட்ட 4 பிரதேச சபைப் பகுதிகளிலேயே முதலில் காணிப்பதிவு ஆரம்ப்பிக்கப்பட்டுள்ளது என்று காணிப்பதிவுத் திணைக்களம் கூறியுள்ளது.
பெரும்பாலான மக்களிடம் தற்போதுள்ள காணி உறுதிகள் ஆவணப் பதிவுச் சட்டத்தின் கீழ் ஆவணப்பதிவு செய்யப்படாதவை என்றும், மேலை நாடுகளில் உள்ளதுபோல் அரசாங்கத்தினுடைய பூரண உத்தரவாதமுடைய உரித்துச் சான்றிதழ்களை ஒவ்வொரு காணி உரிமையாளருக்கு வழங்குவதே காணிப் பதிவுகளின் நோக்கம் எனவும் காணிப் பதிவுத் திணைக்களத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
காணிப்பதிவை எதிர்த்து நாளை நீதிமன்ற வாசல் செல்கிறது கூட்டமைப்பு
வடக்கு கிழக்கு பகுதிகளில் அரசாங்கம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள காணிப் பதிவுகளை எதிர்த்து உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
இதன்படி நாளைய தினம் இந்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
வடக்கு கிழக்குப் பகுதிகளில் காணிப்பதிவு செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை கைவிடுமாறு கோரி தமிழ்க் கட்சிகள் அண்மையில் வவுனியாவில் உண்ணாவிரதம் இருந்தனர்.
எனினும் உண்ணாவிரதம் இருந்த அடுத்த நாள் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தமிழ்க் கட்சிகளின் உண்ணாவிரதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் திட்டமிட்டபடி காணிப் பதிவு இடம்பெறும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் நாளைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காணிப் பதிவை எதிர்த்து நீதிமன்ற வாசலுக்குச் செல்லவுள்ளது

கருத்துகள் இல்லை: