வியாழன், 27 அக்டோபர், 2011

தமிழீழ பிரகடனம் 50 ஆயிரம் பொது மக்களை கொன்றழித்தது - பிள்ளையான்

pillaiyan2010101923ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட அந்த தமிழீழ பிரகடனம் முள்ளியவாய்க்காலில் 50 ஆயிரம் மக்கள் அழிக்கப்பட்டுள்ளதுடன் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், விதவைகள் பட்டினி கிடக்கின்றார்கள், கொட்டிலில் குழந்தைகள் பட்டினி கிடக்கின்றார்கள் அவர்களை அபிவிருத்தி செய்யாமல் இருந்துவிட்டு உரிமையினை பற்றி பேசுவதால் எதுவித பிரயோசனமும் இல்லையென தெரிவித்தார்.

லண்டன் அகிலன் பவுண்டேசன் அனுசரணையுடன் பட்டிருப்பு கல்வி வலயம் நடத்திய சாதனையாளர் கௌரவிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.பட்டிருப்பு கல்வி வலய பணிப்பாளர் திருமதி புள்ளநாயகம் தலைமையில் இடம்பெற்ற இந்த சாதனையாளர் கௌரவிப்பு விழாவில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான பூ.பிரசாந்தன், செல்வேந்திரன், இலண்டன் அகிலன் பவுண்டேசன் தாபகர் கோபாலகிருஸ்ணன், இலங்கை பணிப்பாளர் வி.ரி.மகேந்திரன் உட்பட அதிதிகள் கலந்துகொண்டனர்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய முதலமைச்சர்,இங்கு வந்துள்ள இலண்டன் அகிலன் பவுண்டேசன் தாபகர் கோபாலகிருஸ்ணன் நீங்கள் உரிமையை பற்றி கதைப்பதில்லை, அபிவிருத்தியை பற்றி மட்டும்தான் கதைப்பதாக என்னிடம் கூறினார்.

இங்கு வந்தபோது மூன்று மாதத்துக்கு பின்னர் ஏதோ நடக்கப்போவதாக கூறினார். என்ன நடக்கப்போகின்றது தமிழீழம் கிடைக்கப்போகின்றதா? இல்லை. என்ன சமஸ்டி கிடைக்கப்போகின்றது. அதில்தான் குழப்பங்கள் இருக்கின்றன.

உங்களிடம் ஒன்றை தெளிவாக சொல்கின்றேன். தமிழ் தேசிய கூட்டமைப்பை பின்பற்றுபவர்கள், அவர்களை தலைவர்களாக கொண்டவர்கள். மிக தெளிவாக கூறவேண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எங்களுக்கு சமஸ்டியை பெற்றுத்தரும், இதுதான் சமஸ்டி, தனிநாடாக பிரிந்துசெல்லக்கூடிய சமஸ்டி, அல்லது நாங்கள் எங்களுக்குள்ளேயே பணத்தை பெற்றுக்கொள்ளக்கூடிய சமஸ்டி, அல்லது கனடாவை போன்ற சமஸ்டி, அல்லது சுவிஸை போன்ற சமஸ்டி என்று ஏதாவது சொல்லவேண்டும்.

என்னைப் பொறுத்தவரையில் இந்த நாட்டில் இருக்கும் அதிகார பகிர்வுமுறைமை மாகாணசபை முறைமை அதனை பலப்படுத்தவேண்டும். இதுதான் இலங்கைக்குள் இருக்கும் உச்சகட்ட அதிகார பகிர்வுமுறைமை இதனை நாங்கள் எடுத்துள்ளோம்.

இது தொடர்பில் பிரச்சினைகள் இருக்கின்றன. அதனை பேசி தீர்த்துக்கொள்ள வேண்டியவர்களாகவும் நாங்கள் மாறியுள்ளோம். குறிப்பாக எமது மாகாணத்தில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களை திருப்திப்படுத்திக்கொண்டு அவர்களையும் சேர்த்துக்கொண்டு அதிகார பகிர்வை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் மிக தெளிவாக இருக்கின்றோம்.

ஸ்ரீ சட்டம் கொண்டுவரப்பட்டபோது பெரும் பிரச்சினையேற்பட்டது சிங்களவர்களின் எழுத்தை வாகனங்களில் பொறிக்கமாட்டோம் என்று எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரிதாக பிரச்சினையெழுப்பினார்கள். ஆனால் வெலிக்கந்தை தாண்டினால் அதனை பொருத்திக்கொண்டு சிங்கள அமைச்சர்களுடன் சேர்ந்து குலாவுவர். இது கடந்தகால வரலாறு. ஆனால் தற்போது அந்த ஸ்ரீ தொடர்பில் யாரும்பேசுவதில்லை. இன்று பல்வேறு எழுத்துக்களிலும் அது வந்ததால் அது தொடர்பில் பலர் மறந்துவிட்டனர்.

நாங்கள் நடைமுறைக்கு சாத்தியமான விடயங்கள் தொடர்பில் சிந்திக்கவேண்டும். ஏனென்றால் மிக நீண்டவரலாற்றில் 1923ஆம் ஆண்டு ஒரு யாழ் தலைவர் தமிழீழ பிரகடனம் தொடர்பில் பேசியிருந்தார். 1923ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட அந்த தமிழீழ பிரகடனம் முள்ளியவாய்க்காலில் 50 ஆயிரத்துக்கும் மேல் மக்கள் அழிக்கப்பட்டத்தன் பின்னர் நிறுத்தப்பட்டுள்ளது.

முள்ளியவாய்க்காலின் பின்னர் இங்கு யாரும் தமிழீழம் பற்றி பேசுவதில்லை. அந்த விடயங்களைக் கொண்டு மீண்டும் ஒரு முறை மக்களை குழப்பக்கூடாது என்றார்.
- அததெரண

கருத்துகள் இல்லை: