ஞாயிறு, 23 அக்டோபர், 2011

அலைக்கற்றை ஒதுக்கீடு டாடாக்கள், அம்பானிகள், ரெட்டி பிரதர்சின் கூட்டாளிகள் கைது செய்யப்படவில்லை

தொழில் முதலாளிகளைச் சிறையில் அடைத்தால் நமக்கு வெளிநாடு களிலிருந்து வரும் அன்னிய முதலீடும் குறைந்துவிடும் என்று மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறி யிருக்கிறார். இதனைக் கேள்வியுற்று உச்சநீதிமன்றம் வியப்பில் ஆழ்ந்திருக்கிறது.

அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் சில தொழில் முதலாளிகள் அல்ல - அவர்களுடைய மேலாளர்கள் -நிர்வாகிகள் கைது செய்யப்பட்டிருக் கிறார்கள். கர்நாடகாவின் கனிம வளத்தை 12 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கொள்ளையடித்த பெல்லாரி ரெட்டி பிரதர்ஸ் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். சத்தியம் ராஜு கைதுசெய்யப்பட்டி ருக்கிறார். அவ்வளவுதான்.


அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக டாடாக்கள் கைது செய்யப்படவில்லை. அம்பானிகள் கைது செய்யப்படவில்லை. ரெட்டி பிரதர்சின் கூட்டாளிகள் கைது செய்யப்படவில்லை. யானைக்காரன் மனைவி பூனைக்குட்டி பெற்றாள் என்பது போல ஏதோ ஒருசிலர் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள். உச்சநீதிமன்றம் சுத்தி யலை உயர்த்தியதால்தான் அந்த வெகு சிலரும் காராக்கிரகத்தில் அடைக்கப்பட்டி ருக்கிறார்கள். இன்றைக்கு அங்கே அடைபட்டிருக்கிறவர்கள் மீது ஏற்கனவே எத்தனையோ புகார்கள் வந்தன. மத்திய அரசு கண்டுகொள்ளவேயில்லை. அம்பானிகள் மீது எத்தனை எத்தனை புகார்கள் எழுந்தன? வெளிநாட்டு அமைப்புக் களையெல்லாம் உள்நாட்டு அமைப்புக்களாக்கி தொலைத்தொடர்பில் அவர்கள் பல நூறு கோடி கொள்ளையடித்தார்கள் என்று புகார். உயர்நீதிமன்றமே அபராதம் விதித்தது. கட்டியது போதும் என்று பல கோடிகளைத் தள்ளுபடி செய்தனர். பங்குச்சந்தை ஊழல்தான் அவர்களைக் கோடீசுவரர்களாக ஆக்கியது. இப்படி எவ்வளவோ புகார்கள். நியாயமாக அவர்கள் நிரந்தரமாக சிறையில் இருக்க வேண்டும். ஆனால் மன்மோகன்சிங் அரசின் செல்லப்பிள்ளைகளாக இருக்கிறார்கள்.

அலைக்கற்றை ஒதுக்கீடு, கர்நாடகா சுரங்க ஊழல்கள் தொடர்பாக பலர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடர்ந்தனர். அதன்பின்னர்தான் சிலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இவர்கள் கைது செய்யப்பட்டதற்கு நாங்கள்தான் காரணம் என்று சட்ட அமைச்சர் கருதுகிறாரா? அதனால் தான் அன்னிய முதலீடுகள் குறையும் என்று குறைபட்டுக் கொள்கிறாரா என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். சல்மான் குர்ஷித் அப்படிக் கூறியது உண்மை தானா என்றும் அவர்கள் மத்திய அரசு வழக்கறிஞரைப் பார்த்துக் கேட்டனர். சல்மான் அப்படிப் பேசியது உண்மைதான் என்பதனை வழக்கறிஞர் ஒப்புக்கொண்டார்.

தொழில் முதலாளிகளை வேண்டும் என்றே நாங்கள் சிறையில் அடைக்கிறோம் என்ற எண்ணத்தை சட்ட அமைச்சரின் வாதம் பிரதிபலிக்கிறது என்று நீதிபதிகள் சற்று கடுமையாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

என்றைக்கு மன்மோகன்சிங், மைய அரசில் நிதி அமைச்சராகவும் பின்னர் பிரதமராகவும் இடம் பெற்றாரோ அன்றைக்கே அவர் இந்தியாவின் தொழில்துறையை செல்வந்தர்களுக்கு அர்ப்பணித்துவிட்டார். கார்ப்பரேட் என்ற பல்முனை தொழிலகங்கள் தோன்றின. அந்தக் கார்ப்பரேட் நிறுவனங்களும் அதிகார வர்க்கமும் கை கோர்த் தன. ஊழல்கள் உற்பத்தியாயின. உண்மையில் இன்றைக்கு ஊழலில் திளைக்காத கார்ப்பரேட் நிறுவனங்களே இல்லை. ஊழல்களுக்காகத் தொழில் அதிபர்களை கைது செய்ய வேண்டுமென்றால் இன்றைக்கு இன்னொரு திகார் சிறையைத் திறந்தாக வேண்டும்.

இந்த கார்ப்பரேட் நிறுவனங்களைத் தேடி கூட்டு வியாபாரம் செய்ய அன்னிய முதலாளிகள் வருகிறார்கள். காரணம்... அவர்கள் நாட்டின் பொருளாதாரம் திவாலாகிக்கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் மட்டுமல்ல, பிரான்சு, ஜெர்மனி தவிர எல்லா ஐரோப்பிய நாடுகளும் மஞ்சள் கடுதாசி கொடுத்துக்கொண்டிருக்கின்றன.

இன்றைக்கு அமெரிக்க நியூயார்க் நகரில் தான் "வால் ஸ்ட்ரிட்' என்ற புகழ்பெற்ற பகுதி இருக்கிறது. இங்குதான் பங்குச் சந்தை உட்பட வங்கிகள், பள்ளிகொண்டிருக்கின்றன. அங்கே நடைபெறும் சூதாட்டங்கள்தான் விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு மூலகாரணம் என்று மக்கள் அந்தப் பகுதியை எதிர்த்துப் போராடுகிறார்கள். அந்தப் போராட் டம் அமெரிக்கா முழுமையும் காட்டுத் தீயாகப் பரவி வருகிறது.

அங்கே தலைதப்பி இப்படி ஓடி வருகிறவர் களுக்கு மன்மோகன்சிங் அரசு பட்டுக்கம்பள வரவேற்பு அளிக்கிறது. ஊழல் என்று உள்நாட்டுச் செல்வந்தர்களை கைது செய்தால் அன்னிய முதலாளிகள் அச்சப்படுவார்கள் என்பது மன்மோகன்சிங் அரசின் கருத்து. அதனைத்தான் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் எதிரொலித் திருக்கிறார்.

அப்படியானால் ஊழல் பெருமுதலாளிகள் மீது சி.பி.ஐ. விசாரணை கூடாது, நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது என்றுதானே அர்த்தம். அதற்கு ஏற்றாற் போல்தான் காரியங்கள் நடைபெறுகின்றன. ஆ.ராசா கைது செய்யப்பட்டபோது அவருடைய சகோதரிகள், சகோதரர்கள், நண்பர்கள் வீடுகளிலெல்லாம் சி.பி.ஐ. சோதனை நடத்தியது.

ஆனால் காலம் கடந்து மாறன் சகோதரர்களின் மாளிகைகளில் கால் எடுத்து வைத்தவர்கள் அரைமணி நேரத்தில் சோதனைகளை முடித்துக்கொண்டனர். ஆ.ராசாவுக்கு ஒரு நீதி, மாறன் பிரதர்சுக்கு ஒரு நீதியா? நடைபெற்றது கண்துடைப்பு சோதனை என்பதுதான் மக்களின் ஏகோபித்த கருத்து.

இந்தியாவின் கார்ப்பரேட் செல்வந்தர்கள் இதுவரை பல்லாயிரம் கோடி ரூபாய் வரி பாக்கி வைத்திருக்கிறார்கள். தேசத்தின் கஜானாவிற்கு வரவேண்டிய அந்தப் பெருந்தொகையை வசூலிக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. மாறாக ஆண்டுதோறும் வராத கடன் என்று அதனைப் படிப்படியாக தள்ளுபடி செய் கிறார்கள்.

இன்னொரு பக்கம் இதே தொழிலதிபர்கள் தேசியமயமாக்கப் பட்ட வங்கிகளில் பல்லாயிரம் கோடி கடன் வாங்கியிருக்கிறார்கள். அதற்கு அவர்கள் தவணைத் தொகையும் கட்டுவதில்லை. வட்டியும் கட்டுவதில்லை. எனவே குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் அந்தக் கடனும் தள்ளுபடி செய்யப்படுகிறது.

கொடுத்த கடனைத் திரும்பப் பெற தேசிய வங்கிகள் போராடிப் பார்க்கின்றன. வட்டி வேண்டாம், வாங்கிய கடனையாவது கட்டுங்கள் என்று கோருகின்றன. அத்தகைய வங்கிகளுக்கு மேலிடத்திலிருந்து எழுதப்படாத உத்தரவுகள் பறந்து வருகின்றன. அந்தத் தொழிலதிபரை தொடாதீர். சமரசம் காண்க என்று சரணாகதி செய்தி வருகிறது.

இப்படி இதுவரை வங்கிகளில் எந்தெந்த தொழிலதிபர்கள் எத்தனை கோடிகள் கடன் வாங்கியிருக்கிறார்கள்? அவர்களில் எத்தனை பேர் வட்டிகூட கட்டாத வள்ளல்கள் என்ற பட்டியலை வெளியிட முடியுமா? வெளியிட முடியாது. வட்டிக்கு ஆசைப்பட்டு பல நூறு கோடிகளை கடனாகக் கொடுத்த வங்கிகளின் நிலைமை என்ன? இரவல் சேலைக்கு ஆசைப்பட்டு இடுப்புச் சேலையை இழந்த பெண்மணியின் பரிதாப நிலைமைதான்.

தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ஒரு தொழிலதிபர் பல கோடிகள் கடன் வாங்கினார். அவர் திருப்பிச் செலுத்தவில்லை. எனவே அவருடைய சொத்தினை அந்த வங்கி ஏலத்திற்குக் கொண்டு வந்தது. அத்துடன் கடன் திரும்பச் செலுத்தாத அந்தச் செல்வந்தரின் புகைப்படத்தையும் பிரசுரித்தது. அவ்வளவுதான்.

இது என்ன அநியாயம் என்று ஒருவர் துடித்துப்போனார். ஏலம் விடலாமா? ஏலம்விட்டால் பங்குச்சந்தையில் அந்த நிறுவனப் பங்குகளின் விலை வீழ்ந்துவிடும். அதனால் தொழிலாளர்கள் வேலை இழக்கின்ற நிலை ஏற்படும் என்று வியாக்கியானம் செய்தார். அவர் வேறு யாருமல்ல... அன்றைய நிதியமைச்சர் இன்றைய உள்துறை அமைச்சர் சிதம்பரம்தான்.

சல்மான் குர்ஷித் வெளிநாட்டு முதலாளிகளுக்காக வாதாடுகிறார். சிதம்பரம் உள்நாட்டு முதலாளிகளுக்காக வாதாடுகிறார். மன்மோகன்சிங்கிற்கு ஏற்ற சீடர்கள்.

கூட்டுறவு வங்கிகளில் நகைகளை அடகு வைத்துக் கடன் வாங்குகிறோம். விவசாயப் பணிகளுக்காக கூட்டுறவு நிலவள வங்கிகளில் கடன் வாங்குகிறோம். திரும்பச் செலுத்த முடியவில்லை. வங்கிகள் நோட்டீஸ் விடுகின்றன. அதன்பின்னரும் கடனைக் கட்ட முடியவில்லை.

வங்கிகள் நகைகளை ஏலம் விடுகின்றன. இன்னார் அடகு வைத்த நகைகளை அவர்களால் திருப்பிப் பெறமுடியவில்லை, ஆகவே அவர்களுடைய நகைகளை ஏலம் விடுகிறோம் என்று ஏடுகளில் வங்கிகள் விளம்பரம் செய்கின்றன; ஏலம் விடுகின்றன.

ஆனால் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய கடனில் இதுவரை 50 ஆயிரம் கோடி வரை திருப்பிச் செலுத்தவில்லை. நகையை அடகு வைத்த குப்பனையும் சுப்பனையும் விளம்பர வெளிச்சம் போட்டு அம்பலப்படுத்துகிறவர்கள் இந்தப் பெருமுதலாளிகளின் புகைப்படங்களை வெளியிட வேண்டாம், பெயர்ப்பட்டி யலையாவது வெளியிடுவார்களா? வெளியிடவே மாட்டார்கள். காரணம்... அவர்களுடைய பாதுகாவலர்களே இவர்கள்தான். அதற்கு சல்மான் குர்ஷித்தும் சிதம்பரமுமே சாட்சிகளாகும்.

thanks nakkeran+KVKumar chennai

கருத்துகள் இல்லை: