சனி, 15 அக்டோபர், 2011

ஸ்பெக்ட்ரம் ஊழலில் ப.சிதம்பரம், சேலத்தில் வசமாக சிக்கினார்!!

தமிழகத்தில் காங்கிரஸ்காரர்கள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள். வெளியே உள்ள எதிரிகளைப் பற்றி அவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. போதும் போதும் என்னும் அளவுக்கு, உள் வீட்டிலேயே எதிரிகளை கூடவே வைத்திருக்கும் பாக்கியசாலிகள் அவர்கள்.
பொதுவாக காங்கிரஸ்காரர்களுக்கே இந்த சிறப்பு அம்சம் இருந்தால், தமிழகத்தில் அவர்களுக்கு எல்லாம் மகா தலைவராக உள்ள தங்கபாலு ஐயாவுக்கு இந்த சிறப்பு அம்சம் எவ்வளவு உச்சத்தில் இருக்க வேண்டும்?
அவருக்கு வஞ்சகம் செய்யாமல் வாரிக் கொடுத்திருக்கிறார் கடவுள். “2ஜி ஊழல் குற்றச்சாட்டு குறித்து ப.சிதம்பரம் மீது உரிய நேரத்தில், உரிய நடவடிக்கை எடுப்பார் சோனியா” என்று சேம்-சைட்-கோல் போட்டு அதிர வைத்திருக்கிறார் இந்த தங்கத் தலைவர்.
தமிழகத்தை ஒரு வழி பண்ணாமல் விடுவதில்லை என்ற வைராக்கியத்துடன், தமிழகம் முழுவதும் சூறாவளி (!) சுற்றுப் பயணம் செய்து, தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார் தலைவர். பிரச்சாரத்தின் நிறைவு நாளான இன்று, அண்ணனின் பாதக் கமலங்கள் சேலத்தில் பதிந்தன.

வந்த இடத்தில் ஏதாவது வம்பு செய்துவிட்டுப் போகலாமே என்ற நல்ல எண்ணத்துடன் செய்தியாளர்களை அழைத்து, கருத்து கூறியிருக்கிறார் அவர். அப்போது அவரிடம் 2ஜி ஊழல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அவ்வப்போது பொழுது போகாவிட்டால், பத்திரிகை படிக்கும் பழக்கம் அவருக்கு உள்ளதால், இந்த விஷயம் பற்றி லேசாக அவருக்கு தெரிந்திருந்தது.
“மத்திய உட்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது கூறப்படும் 2ஜி ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி உரிய நேரத்தில், உரிய நடவடிக்கையை எடுப்பார். மும்பையில் ஆதர்ஷ் ஊழல் குறித்து செய்திகள் வெளியான உடனேயே, அதுவும் குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படாத நிலையிலேயே, மகாராஷ்டிர முதல்வரை பதவி விலகச் சொன்னவர் அல்லவா சோனியா? அதேபோல சிதம்பரம் விஷயத்திலும் நடாத்திக் காட்டுவார் சோனியா அம்மையார்” என்றார் தங்கபாலு.
நம்ம தங்கபாலு, தற்போது வகிப்பதாகக் கூறப்படும் பதவி – தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்!

விறுவிறுப்பு.காம்

கருத்துகள் இல்லை: