புதன், 12 அக்டோபர், 2011

யுவராஜ், ஹர்பஜன் மீது சூதாட்ட புகார்! * இந்திய கிரிக்கெட்டில் அதிர்ச்சி


 மும்பை: கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சையில் இந்தியாவின் ஹர்பஜன், யுவராஜ் சிங் சிக்கியுள்ளனர். இவர்களுடன் தொடர்பு இருந்ததாக பிரபல சூதாட்ட "ஏஜன்ட்' மசார் மஜித் தெரிவித்துள்ளார். இதனை ஏற்க இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) மறுத்துள்ளது.
கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில், சூதாட்ட "ஏஜன்ட்' மசார் மஜீத்துடன் சேர்ந்து "ஸ்பாட் பிக்சிங்கில்' ஈடுபட்ட பாகிஸ்தான் அணியின் அப்போதைய கேப்டன் சல்மான் பட், முகமது ஆசிப், முகமது ஆமிர் பிடிபட்டனர். இதை லண்டனில் இருந்து வெளியான "தி நியூஸ் ஆப் தி வேர்ல்டு' என்ற பத்திரிகை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. இந்த குற்றத்துக்காக இவர்கள் ஒவ்வொருவருக்கும் 10, 7 மற்றும் 5 ஆண்டு தடை விதித்தது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,). கோர்ட்டில் விசாரணை:
இதுதொடர்பான விசாரணை லண்டனில் உள்ள "சவுத்வார்க் கிரவுன்' கோர்ட்டில் நடந்து வருகிறது. "ஏஜன்ட்' மசார் மஜீத்திடம், தற்போது விசாரணை நடந்து வருகிறது. இதில், பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் ஹர்பஜன், யுவராஜ், ஆஸ்திரேலியாவின் பாண்டிங், பிரட் லீ மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் ஆகியோரை சூதாட்டத்திற்காக அணுகியதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோர்ட்டில் மசார் மஜீத் தெரிவித்த தகவல்கள்:
கிரிக்கெட்டில் சூதாட்டம் பல நூற்றாண்டுகளாக நடந்து கொண்டு தான் உள்ளது. வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், இஜாஸ் அகமது, மொயின் கான் என, எல்லோரும் இதில் ஈடுபட்டுள்ளனர். ஏனெனில், அவர்களுக்கு பணம் தேவைப்பட்டது. தவிர, சல்மான் பட், கம்ரான் அக்மல், உமர் அக்மல், சோயப் மாலிக் உள்ள பல பாகிஸ்தான் வீரர்கள் எனது கட்டுப்பாட்டுக்குள் இருந்தனர்.
மோடியை தெரியும்:
ஐ.பி.எல்., தலைவராக இருந்த லலித் மோடி, மைக் கேட்டிங், ஜெப்ரி பாய்காட், முன்னாள் வீரர் இம்ரான் கான் ஆகியோர் எனது நல்ல நண்பர்கள். இதேபோல பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) தலைவர் இஜாஸ் பட்டுடன் பேசியுள்ளேன். 2010 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில், ஒருநாள் தொடரை விட்டுத்தருவதாக அவர் கூறினார். இதுகுறித்து இசாஸ் பட்டுடன் விவாதித்துள்ளேன்.
ஹர்பஜனை அணுகினேன்:
தவிர, சூதாட்டம் தொடர்பாக இந்தியாவின் ஹர்பஜன், யுவராஜ், ஆஸ்திரேலியாவின் பாண்டிங், பிரட் லீ, நாதன் பிராக்கென் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்லை அணுகியுள்ளேன். பாகிஸ்தானின் வீரர்கள் போல, ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர்களும் சூதாட்டத்துக்கு தயாராக இருந்தனர்.
"ரேட்' எவ்வளவு?
 போட்டியின் பல கட்டங்களில் "பிக்சிங்' செய்து கொள்ள முன்வந்தனர். ஒரு போட்டியில் 10 முறை வரை "பிக்சிங்' செய்ய சம்மதித்தனர். ரூ. 38 லட்சம் முதல், ரூ. 61 லட்சம் வரை ஒரு "ரேட்' வைத்திருப்பார்கள். "டுவென்டி-20' போட்டி என்றால், ரூ. 3 கோடியும், டெஸ்ட் என்றால், சூழ்நிலைக்கு தகுந்து ரூ. 8 கோடி வரை எதிர்பார்ப்பார்கள்.
இவ்வாறு விசாரணையில் மசார் மஜீத் தெரிவித்துள்ளார்.
பி.சி.சி.ஐ., மறுப்பு:
இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பும், கண்டனம் எழுந்துள்ளது. இதுகுறித்து பி.சி.சி.ஐ., வெளியிட்ட அறிக்கையில்," மஜீத்தின் குற்றச்சாட்டுக்கள் நம்ப முடியாதவையாக உள்ளது. இதுதொடர்பாக மேலும் விவாதிக்க தேவையில்லை,' என, தெரிவித்துள்ளது.
உண்மை இல்லை:
 பாண்டிங்கின் மானேஜர் ஹெண்டர்சன் கூறுகையில்,"" இதற்கு முன் மசார் மஜீத் குறித்து கேள்விப்பட்டதே இல்லை. இதில் எவ்வித உண்மையும் இல்லை,'' என்றார்.
----
                   சட்டப்படி நடவடிக்கை
சூதாட்ட புகார் குறித்து ஹர்பஜன் கூறுகையில்,"" மசார் மஜீத் என்பவர் யார்? எனக்கு அப்படி யாரையும் தெரியாது. இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்<,'' என்றார்.
----
                   சேவல் முட்டையிட்ட கதை
 யுவராஜ் தனது "டுவிட்டர் இணையதளத்தில்,""மஜீத்தை சந்தித்ததே இல்லை. இந்தியாவை பொறுத்தவரை சேவல் முட்டையிட்டது என்று யாராவது சொன்னால் கூட, அது பெரிய செய்தியாகி விடும். இது உண்மையா அல்லது பொய்யா என்பது பற்றி யாரும் கண்டுகொள்வதில்லை,''என, குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: