வெள்ளி, 14 அக்டோபர், 2011

ஷமீலாவா இப்படி செய்தார்?, நம்ப முடியவில்லை- உறவினர்கள், நண்பர்கள்

சென்னை: நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர் ஷமீலா. அவரது குடும்பத்தினர் எந்த சர்ச்சையிலும் சிக்காதவர்கள். ஆனால் ஷமீலாவின் செய்கைகள் குறித்து மகேஷ் குமார் எழுதியுள்ள கடிதம் எங்களுக்கு வியப்பளிக்கிறது. இதை நம்ப முடியவில்லை என்று ஷமீலாவின் உறவினர்கள், சிறு வயது முதல் ஷமீலாவை அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
இதன் காரணமாக மகேஷ் குமார் தரப்பு கடிதங்களை மட்டும் முழுமையாக நம்பாமல், ஷமீலா தரப்பு உண்மைகளையும் அறிய போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ஷமீலா மூணாறு விடுதியில் வைத்துக் கொலை செய்யப்பட்டார். அவரது காதல் கணவர் மகேஷ்குமார் தனது சொந்த ஊருக்கு வந்து தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன்பு அவர் சில கடிதங்களை எழுதி வைத்திருந்தார்.

அதில் ஷமீலா குறித்து அவர் போலீஸாருக்கு எழுதி வைத்த கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷமீலாவின் நடத்தை குறித்து விளக்கியுள்ள அவர், ஷமீலாவுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் 11 ஆண்கள் குறித்தும், அவர்களது முகவரிகள், தொலைபேசி எண்கள், என்னவெல்லாம் செய்தார்கள் என்பதையும் விளக்கியுள்ளார்.

ஆனால் ஷமீலா தரப்பில் வேறு மாதிரியாக பேசப்படுகிறது. ஷமீலாவின் பூர்வீகம் மதுரை ஆகும். அவரது தந்தை பெயர் சுந்தரம். தாயார் பெயர் ராணி. இவர்கள் பல காலத்திற்கு முன்பே ஈரோடு வந்து செட்டிலானார்கள்.

அங்குள்ள திருநகர் காலனி, சாமியப்பா தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்த சுந்தரம் ஜவுளித் தொழிலில் ஈடுபட்டிருந்தார். ஷமீலாவும், அவரது தங்கை ஷாலினியும் அங்குதான் பள்ளிப் படிப்பை முடித்தனர்.

பள்ளிப்படிப்பை முடித்த ஷமீலா, 2004ம் ஆண்டு மதுரை வந்து உறவினர் வீட்டில் தங்கி கல்லூரிப் படிப்பை முடித்தார். ஷாலினி தனது பிளஸ்டூவை முடித்ததும் சுந்தரம் மறுபடியும் மதுரைக்கே இடம் பெயர்ந்தார். அங்கு திருமங்கலத்தில் குடியேறினார். சில மாதங்களில் அவர் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.

ஷமீலாவுக்குப் பின்னர் பெங்களூரில் கால் சென்டரில் வேலை கிடைத்து அங்கு போனார். அப்போதுதான் மகேஷ்குமாருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இதற்கு ராணி ஒப்புதல் தரவில்லை. இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல் திருமணம் செய்து கொண்டார் ஷமீலா.

திருமணம் செய்து கொண்டு போனாலும் கூட தனது வீட்டினருடன் தொடர்ந்து பேசிக் கொண்டுதான் இருந்துள்ளார் ஷமீலா.

ஷமீலாவின் தற்போதைய நடத்தை குறித்த மகேஷ்குமாரின் கடிதம் அவர் சிறு வயதில் வசித்து வந்த ஈரோடு திருநகர் காலனி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அதேபோல ஷமீலாவின் உறவினர்களும் கூட இதை நம்ப மறுக்கின்றனர்.

தான் செய்த தவறுகளை மறைக்க மகேஷ்குமார் இதுபோல ஷமீலா குறித்து தவறாக கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டிருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

சிறு வயது முதலே ஷமீலாவையும் அவரது தங்கையையும் எங்களுக்குத் தெரியும். அவர்கள் அப்படிப்பட்டவர்களே கிடையாது. நல்ல குடும்பத்துப் பெண்கள். ஷமீலா நிச்சயம் அப்படிப்பட்ட பெண்ணாக இருக்க முடியாது. அவர் காதலித்துத் திருமணம் செய்தது மட்டுமே உண்மை. மற்றபடி இதுபோல தவறாகப் போகக் கூடிய பெண்ணாக நாங்கள் நம்பவில்லை.

உண்மையில் கல்யாணத்திற்குப் பின்னர் சில காலம் அவர்களது குடும்ப வாழ்க்கை நன்றாகத்தான் இருந்தது. ஆனால் பின்னர்தான் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு ஷமீலாவை, ஷாலினி சந்தித்தபோது தனது கணவர் சித்திரவதை செய்வதாக கூறி அழுதுள்ளார் ஷமீலா.

அதன் பிறகு அவர் ஷாலினியுடன் தங்கியிருந்தார். பின்னர் திருமங்கலம் போய் தாயாருடன் தங்கியிருந்தார். அப்போதுதான் மகேஷ்குமார் வந்து அழைத்துச் சென்றார். கோவிலுக்குக் கூட்டிப் போவதாகக் கூறிய அவர் மூணாறுக்குக் கூட்டிச் சென்று கொலை செய்து விட்டார். இதைத் திட்டமிட்டு அவர் செய்துள்ளார். அவர் பக்கம்தான் ஏதோ தவறு இருப்பதாக தெரிகிறது. தனது தவறுகளை மறைக்க ஷமீலா மீது பழியைப் போட்டு விட்டதாக கருதுகிறோம் என்கிறார்கள்.

மகேஷ்குமாரின் கடிதங்கள் மூலம் ஷமீலா குறித்த ஒரு மாதிரியான இமேஜ் பரவியுள்ள நிலையில் தற்போது ஷமீலா தரப்பில் மகேஷ் குமார் குறித்து கூறப்படும் கருத்துக்களும், ஷமீலா அப்படிப்பட்டவர் இல்லை என்று கூறப்படும் தகவலும், ஈரோடு போலீஸாரை சிந்திக்க வைத்திருப்பதாக தெரிகிறது. எனவே மகேஷ் குமார் கடிதங்களை மட்டும் அப்படியே எடுத்துக்கொள்ளாமல், ஷமீலா தரப்பிலும் முழுமையாக விசாரிக்க அவர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.

11 பேரையும் பிடிக்க தனிப்படை

அதேசமயம், மகேஷ் குமார் கடிதத்தில் கூறப்பட்டுள்ள 11 பேரையும் முதல் கட்டமாக தொடர்பு கொண்டு தீவிரமாக விசாரித்து, அவர்களுக்கும் ஷமீலாவுக்கும் என்ன தொடர்பு என்பது குறித்து தெளிவுபடுத்திக் கொள்ளவும், தேவைப்பட்டால் கைது நடவடிக்கையை எடுப்பதற்கும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து இந்த வழக்கை விசாரித்து வரும் வரப்பாளையம் காவல் நிலைய பொறுப்பு இன்ஸ்பெக்டர் இளங்கோவன் கூறுகையில், மகேஷ்குமார் கடிதத்தில் கூறியுள்ள 11 பேரையும் விசாரிக்க முடிவு செய்து சப் இன்ஸ்பெக்டர் காந்திமதி தலைமையில் தனிப்படை அமைத்துள்ளோம்.

11 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்படும். கடிதத்தில் கூறப்பட்டுள்ளவை உண்மைதானா என்பதை முழுமையாக பரிசோதித்துக் கொண்ட பின்னர், உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றார்.

கருத்துகள் இல்லை: