புதன், 12 அக்டோபர், 2011

ஜெயிலில் இருந்து, பெயிலில் வந்த நேரு, திருச்சி வெயிலில் ஜொலிக்கிறார்!



திருச்சி, இந்தியா: கடந்த 25 ஆண்டுகளில் தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற எந்தத் தொகுதியிலும் காண முடியாத அதிசயம் ஒன்றை, நீங்கள் தற்போது திருச்சி மேற்கு தொகுதியில் காணமுடியும். மற்றைய கட்சிகள் எவையும் கண்டுகொள்ளாமல் விட்டிருக்க, தமிழகத்தின் இரு பெரிய கட்சிகளான அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் மட்டும் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.

கிட்டத்தட்ட எல்லாக் கட்சிகளும் தனித்தனியே போட்டியிடும் இந்த இடைத் தேர்தலில், சிறிய கட்சிகள்கூட தமது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.
ஆனால், மற்றைய கட்சிகள் வேட்பாளரை நிறுத்தியதுடன் சரி. மேற்கொண்டு பிரச்சாரத்தில்கூட அதிக கவனம் செலுத்த இல்லை. “போட்டி அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் இடையில்தானே.. நாம் எதற்காக சிரமப்பட வேண்டும்?” என்று ஒதுங்கிக் கொண்டன.
அதற்கு வசதியாக உள்ளாட்சித் தேர்தலும் வந்திருப்பதால், மற்றைய கட்சிகள் எல்லாம் அதில் பிசி!
அ.தி.மு.க.வும், தி.மு.க.வும், மற்றையவர்களைப் போல, டேக்-இட்-ஈசியாக இருக்க முடியாத நிலைமை. நடப்பது இவர்களுக்கு இடையிலான பலப்பரீட்சை. அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை, ஆட்சிக்கு வந்து நான்கு மாதத்தில் நடக்கும் இடைத்தேர்தல். சட்டசபை தேர்தலின் போது மக்கள் அளித்த ஆதரவு இன்னமும் தம்மிடமே உள்ளது என்று காட்டவேண்டிய கட்டாயம்.
தி.மு.க.வின் நிலை, கடந்த 4 மாத கால அ.தி.மு.க. ஆட்சியை மக்கள் ரசிக்கவில்லை என்று காட்ட வேண்டுமென்றால், இந்த இடைத் தேர்தலில் ஜெயிக்க வேண்டும்.
இப்படியாக இரு தரப்புக்கும் தனித்தனி அஜென்டா இருந்தாலும், இருவருக்கும் பொதுவாகவும் ஒரு சவால் உள்ளது. அதுதான், முக்கியமானது. கூட்டணிக் கட்சிகள் எவற்றின் உதவியும் இன்றி, தம்மால் தனித்து நின்று வெற்றி பெற முடியும் என்று காட்ட வேண்டிய சவால் அது!
இந்தச் சவாலில் ஜெயிக்கத்தான் இரு கட்சிகளும் அல்லாடுகின்றன.
தி.மு.க.வைப் பொறுத்தவரை, இடைத் தேர்தலில் ஜெயித்தால் பம்பர் பரிசு. அதன்பின் அவர்களது அரசியலே ஒரு பெரிய திருப்பம் திரும்பும்! ஒருவேளை ஜெயிக்க முடியாமல் தோற்றால்கூட, சட்டமன்றத் தேர்தலில் கிடைத்தளவு வாக்குக்களைப் பெற்றாலே, அதையும் வெற்றி என்று சொல்லிக் கொள்ளலாம்.
கடந்த சட்டசபைத் தேர்தலில் நேரு தோற்றது வெறும் 7,000 ஓட்டுகள் வித்தியாசத்தில்தான். அதாவது, நேருவைவிட அதிகமாக 7,000 ஓட்டுக்களை அ.தி.மு.க. பெற்றது, தே.மு.தி.க. மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் துணையுடன்தான்!
இப்போது அடுத்த பிரேக்-டவுனைப் பாருங்கள் – இதே தொகுதியில் அதற்கு முந்திய முறை தேர்தல் நடைபெற்றபோது, தே.மு.தி.க. தனித்துப் போட்டியிட்டது. அவர்கள் அப்போது நிறுத்திய சொந்த வேட்பாளருக்குப் பெயர், செந்தூரேஸ்வரன். அந்தத் தேர்தலில் அவர் வாங்கிய ஓட்டுகள் எவ்வளவு தெரியுமா? சுமார் 13,000!
எந்தவொரு அரசியல் அலையும் அடிக்காத நேரத்தில், தே.மு.தி.க. எந்தவொரு கூட்டணியிலும் இல்லாத நேரத்தில் வாங்கிய ஓட்டுக்கள் அவை. அதை தே.மு.தி.க.வின் குறைந்தபட்ச வாக்கு வங்கி என்றும் எடுத்துக் கொள்ளலாம். இந்த 13,000 ஓட்டுக்களையும் சேர்த்துத்தான், 7,000 ஓட்டுக்களில் அ.தி.மு.க. கடந்த தேர்தலில் ஜெயித்துள்ளது. அது இல்லாவிட்டால், 6,0000 ஓட்டுக்களால் தோல்வியடைந்திருக்கவும் ஒரு சான்ஸ் உள்ளது!
இதேபோல, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் திருச்சியில் ஆகா ஓகோ என்று இல்லாவிட்டாலும், ஏதோ விரலுக்கு ஏற்ற வீக்கம்போல ஒவ்வொரு வாக்கு வங்கி உள்ளன. அந்த ஓட்டுக்களும் அ.தி.மு.க.வுக்கு விழாது.
மறுபக்கத்தில் தி.மு.க.வுக்கு விழுந்த ஓட்டுக்களில் காங்கிரஸ் ஓட்டுக்களும் உள்ளன என்பது உண்மைதான். ஆனால், அதில் இரண்டு பாக்டர்களைப் பார்க்க வேண்டும். முதலாவது, காங்கிரஸ் கட்சி, இடைத் தேர்தலில் போட்டியிடவில்லை. இரண்டாவது, அதிகாரபூர்வ கூட்டணி இல்லை என்றாலும், தி.மு.க.-காங்கிரஸ் இடையே திரை மறைவில் திருச்சியில் ஒரு கூட்டணி சைட்-ட்ராக்கில் ஓடுகின்றது!
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழ் சினிமாவில் வில்லனால் அபாயம் வரும்போது கதாநாயகன் கடைசி நிமிடத்தில் வந்து குதிப்பதுபோல ஜெயிலில் இருந்து பெயிலில் வந்து குதித்திருக்கிறார் தி.மு.க. வேட்பாளர் கே.என்.நேரு. இது தி.மு.க.வுக்கு பெரிய பூஸ்ட்!
கட்சிகளில் வாக்கு வங்கிகளின் கணிப்புகள் சரியாகவும், மாறாமலும் இருந்து, தேர்தலும் எவ்வித கடைசி நிமிட மாறுதலுக்கு உள்ளாகாமல் நடந்தால், தி.மு.க.வுக்கு திருச்சி மேற்கில் சான்ஸ் அடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

கருத்துகள் இல்லை: