செவ்வாய், 11 அக்டோபர், 2011

ஸ்டெர்லைட் ஆலையை மூடத் தேவையில்லை- சுப்ரீம் கோர்ட் உத்தரவு


Sterlite Industries
டெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆடைய மூட உத்தரவிட்ட சென்னை உயர்நீதிதமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்த உச்சநீதிமன்றம் ஆலையை மூடத் தேவையில்லை என்று உத்தரவிட்டுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லைட் நிர்வாகம் மாசு ஏற்படுவதைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இதைக் கண்காணிக்குமாறு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் அது உத்தரவிட்டுள்ளது.தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியாகும் நச்சு மாசால் பெரும் பாதகம் ஏற்படுவதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி ஆலையை மூட உத்தரவிட்டது.

இதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தை அணுகியது. இந்த வழக்கில் வைகோ நேரடியாக ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கை நீதிபதிகள் ரவீந்திரன், ஏ.கே.பட்நாயக் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வந்தது.

கடந்த 6ம் தேதி நடந்த இறுதி விசாரணையின்போது, இன்று இடைக்கால தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். அதன்படி இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ஸ்டெர்லைட் நிர்வாகம் மாசுக் கழிவு நீர் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தவும், மாசைக் கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கண்காணித்து வர வேண்டும்.

இந்த நடவடிக்கைகளை 2 வாரத்திற்குள் எடுக்க வேண்டும். அதுவரை ஸ்டெர்லைட் ஆலையை மூடத் தேவையில்லை. அது தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தின் தடைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீடிக்கும் என்று கூறினர். மேலும் வழக்கின் இறுதி விசாரணை ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை: