சனி, 11 ஜூன், 2011

பாசிச ஜெயா அரசுக்கு நீதிமன்றம் மூலம் ஆப்பு வைத்திருக்கிறது ம.க.இ.க சார்ந்த மனித உரிமை பாதுகாப்பு மையம்.

தி.மு.க அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வியை இரத்து செய்த பாசிச ஜெயா அரசுக்கு நீதிமன்றம் மூலம் ஆப்பு வைத்திருக்கிறது ம.க.இ.க சார்ந்த மனித உரிமை பாதுகாப்பு மையம். இதன்படி பழைய சமச்சீர் கல்வியை அமல்படுத்துமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் விவரங்கள் வருமாறு,
சமச்சீர் கல்வி தரமில்லை என்று சாக்கிட்டு அதை இரத்து செய்து அமைச்சரவை மூலம் உத்தரவிட்டு சமீபத்தில் அதை சட்டமாக்கியும் முடித்துவிட்டார்கள். அமைச்சரவை உத்தரவு வந்த போதே மனித உரிமை பாதுகாப்பு மையம் களத்தில் போராடியதோடு சட்டப் போராட்டத்தையும் கையிலெடுத்தது.
இதே நேரத்தில் சி.பி.எம் சார்ந்த பிரின்ஸ் கஜேந்திர பாபு என்ற தனியார் மெட்ரிக் பள்ளி உரிமையாளர் சமச்சீர் கல்விக்காக தி.மு.க அரசு அச்சிட்ட நூல்களை அழிக்க கூடாது என்ற தடை உத்தரவை பெற்றார். வெளியே சி.பி.எம் கட்சி ஜெயா வீட்டில் தனது எம்.எல்.ஏக்களோடு கூருப் ஃபோட்டோ எடுத்துக் கொண்டு அக்கட்சியின் மாநில செயலர் பாசிச ஜெயாவை மயிலிறகால் வருடிக் கொண்டிருந்தார். அதாவது அம்மா பாத்து ஏதாவது செய்ய வேண்டுமென்று பல்லவி பாடிக் கொண்டிருந்தார்.
ஜூன் 7 ஆம் தேதி சமச்சீர் கல்வியை ஒழிக்கும் நோக்கத்திற்காக சட்டப்பேரவையில் சட்டத் திருத்தத்தை ஜெயலலிதா கொண்டு வந்த போது அதற்கு ஆதரவாக சி.பி.எம் சட்ட மன்ற உறுப்பினர்கள் வாகளித்துள்ளனர்

அதே நாளில் தான் சி.பி.எம் இன் மாணவர் அமைப்பான SFI , இளைஞர் அமைப்பான DYFI யும் தமிழகம் முழுவதும் சமசீர் கல்வியை இந்த ஆண்டே அமல் படுத்த வேண்டும் என்று போராடினர்.சி. பி. எம் .இன் இரட்டை வேடத்திற்கு இது ஒரு சான்று
வழக்கறிஞர் சியாம் சுந்தர் என்பவரும், திமுகவின் முன்னாள் கூடுதல் அடிஷனல் அட்கவேட் ஜெனரல் வில்சன் ஒரு மனுதாரருக்கு ஆதரவாகவும் வாதாடினார்கள்.
மனித உரிமை பாதுகாப்பு மையம் மற்றும் அது சார்ந்த கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம், விருத்தாசலம் சார்பில் ம.உ.பா.மையத்தின் இளம் வழக்கறிஞர்கள் விரிவான மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்கள். ம.உ.பா.மை சார்பாக வழக்கறிஞர்கள் காந்தி, புருஷோத்தமன், மோகன், தியாகு ஆஜராகினர். மேலும் ஒரு வழக்கறிஞர் படையே இதற்காக தீவிரமாக வேலை செய்து வந்தது.
இன்று நடந்த விவாதத்தில் நமது வழக்கறிஞர்கள் பாசிச ஜெயா அரசின் உள்நோக்கத்தை பட்டவர்த்தனமாக நிரூபித்தார்கள். முக்கியமாக 15ஆம் தேதி பள்ளிக்கூடம் திறக்கப்படும், அதற்குள் பழைய பாடத்திட்டம் அச்சடிக்கப்படும் என்ற அரசின் வாதத்தை பொய் என்று நிரூபித்தார்கள். அதன்படி பழைய பாடத்திட்டம் அச்சடிப்பதற்காக அரசு, அச்சக உரிமையாளர்களோடு செய்திருக்கும் ஒப்பந்தத்தை தாக்கல் செய்தார்கள். அதில் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் நூல்களை வழங்கினால் போதுமென்று அரசு கோரியிருந்ததை சுட்டிக்காட்டி வாதாடினார்கள்.
ஆக பதினைந்தாம் தேதி பள்ளி திறக்கப்படும், நூல்கள் கிடைக்கும் என்று பொய்யுரைப்பதை நிரூபித்தார்கள். மேலும் தி.மு.க அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி ஏன் தரமல்ல என்பது குறித்து இதுவரை அரசு ஒரு விசயத்தை கூட சொல்லவில்லை, விளக்கமளிக்கவில்லை என்பதையும் வாதிட்டார்கள். 200 கோடி ரூபாய் செலவிட்டு அச்சிடப்பட்ட நூல்களையும், அந்த திட்டத்திற்கான பிரயத்தனத்தையும் ஒன்றுமில்லை என சொல்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றும் வாதிட்டார்கள். மேலும் இதில் ஜெயா அரசி காழ்ப்புணர்வுடன் நடந்துகொண்டிருக்கிறது என்பதைத் தாண்டி வேறு காரணமில்லை என்றும் பேசினார்கள்.
இன்று இந்த வாதம் சென்னை உயர்நீதிமன்றத்தின் முதலாவது பெஞ்சில் தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் முன்னால் நடந்தது. இறுதியில் நீதிபதிகள் சமச்சீர் கல்வியை ரத்து செய்த புதிய சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்து, பழைய சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்கள். மேலும் 200கோடியை செலவழித்து விட்டு தற்போது அதெல்லாம் ஒன்றுமில்லை என சொல்வதற்கு எந்த காரணமுமில்லை என்பதையும், அரசின் உள்நோக்கம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டுமெனவும் வழக்கை ஒத்திவைத்தார்கள்.

தற்போது தமிழக அரசு சமச்சீர் கல்வியை அமல்படுத்தியே ஆக வேண்டும். பாசிச ஜெயா அரசு இதற்காக உடனே உச்சநீதிமன்றம் சென்று இந்த இடைக்காலத் தடைக்கு எதிராக வழக்கு தொடுக்கும். அதற்கென்று பெரிய வழக்கறிஞர்களை  நியமித்து, பெரிய செலவில் வாதாடும். எனினும் இந்த இடைக்காலத் தடை என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆகிறது.
மேலும் ம.க.இ.க சார்பு அமைப்புகள் இதை வெறுமனே சட்டப் பிரச்சினையாக மட்டும் அணுகவில்லை. தமிழகம் முழுவதும் சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டுமென்று மக்களை அணிதிரட்டி ஆர்ப்பாட்டமும் செய்து வருகிறது. இதன் அங்கமாகத்தான் இந்த வழக்கு போடப்பட்டது. சமச்சீர் கல்வி 

 வேண்டுமென பலர் வழக்குப் போட்டதை ஒன்றாக இணைத்தே உயர்நீதிமன்றம் விசாரித்திருக்கிறது. எனினும் ம.உ.பா.மை சார்ந்த மனுதான் விரிவாகவும், ஆதாரப் பூர்வாகமாகவும், ஆணித்தரமாகவும் இருந்தது. தற்போது அ.தி.மு.க அரசு உச்சநீதிமன்றம் செல்லும் என்ற நிலையில் மனித உரிமை பாதுகாப்பு மையமும் உச்சநீதிமன்றம் செல்லும் என்று அறிவித்திருக்கிறது. மக்கள் அரங்கிலும் சரி, சட்ட அரங்கிலும் சரி இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல ம.க.இ.க அமைப்புகள் தயாராகின்றன.
தி.மு.க போன்ற பிரதான எதிர்க்கட்சிகளே ஒன்றும் செய்ய இயலாது என்று கைவிரித்த நிலையில் ம.க.இ.க இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. ஏனெனில் பாசிச ஜெயாவுக்கு நாங்கள்தான் உண்மையான எதிரிகள், அதனால் எங்களது போராட்டமும் தொடரும்.
மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்!

கருத்துகள் இல்லை: