செவ்வாய், 7 ஜூன், 2011

பறப்பசங்க போடற நாடகம்’தலித் மக்களை அவமதிக்கின்ற இழிமொழிகள்

திராவிடர்கள் என்றால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்; தென்னிந்தியாவில் வசிப்பவர்கள் என்று ஆயிரத்தெட்டு விளக்கங்கள் இருக்கின்றன. ஆனால் விழுப்புரம் உள்ளிட்ட சில பகுதிகளில் அன்று திராவிடர்கள் என்றால் ஒரே அர்த்தம்தான். பறையர்கள் அல்லது பள்ளர்கள்.
பனைமரத்துக்கு நிழலில்லை; பறையனுக்கு ஒழுக்கமில்லை, சுரைக்காய் பூவும் பறையனின் பாடலும் சுவையின்றியே இருக்கும், பெளர்ணமி நாளில் பறையன் கூட உழமாட்டான் என்பன போன்ற ஆபாசமான, தலித் மக்களை அவமதிக்கின்ற இழிமொழிகள் உலவிய காலகட்டம் அது. பறையர்களை வீட்டுக்குள் விடமாட்டார்கள்; தொடமாட்டார்கள்; சராசரி மனிதனாகக்கூட மதிக்கமாட்டார்கள்.
சாதிக்கொடுமைகள் உச்சத்தில் இருந்த அந்தக் காலகட்டத்தில்தான் கருணாநிதி உள்ளிட்டோர் நாடகம் போட விழுப்புரத்துக்கு வந்திருந்தனர். நாடகக் குழுவின் பெயரில் திராவிட என்ற பதத்தைப் பார்த்ததுமே முகம் சுளித்தனர் மேல்சாதியினர். போதாக்குறைக்கு நாடகத்தில் கடவுள் வாழ்த்துக்குப் பதிலாக நாட்டு வாழ்த்து. திராவிடம்.. திராவிடம் என்று தொடங்கும் அந்தப் பாடல் அந்தப் பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
பெரியாருடன் பட்டுக்கோட்டை அழகிரி
திராவிட நடிகர் கழகத்தினரின் நாடகங்கள் நாடகம் நமக்கானது அல்ல; அவர்கள் சாதியைச் சேர்ந்தவர்கள்தான் பார்க்கவேண்டும் என்று முடிவுசெய்த மேல்சாதியினர், அந்த நாடகத்தை ஒற்றை வாக்கியத்தில் ஒதுக்கித்தள்ளினர்.
‘பறப்பசங்க போடற நாடகம்’
குறைப்புரிதல் கொண்ட பெரிய மனிதர்களுக்கு மத்தியில் நம்முடைய நாடகம் எடுபடாது என்பது குழுவினருக்குப் புரிந்துபோனது. நிறைய நட்டம் ஏற்பட்டுவிட்டது. இனியும் இங்கிருப்பதில் அர்த்தம் இல்லை. உடனடியாகக் கூடாரத்தைக் காலிசெய்துவிட்டு புதுச்சேரிக்குப் புறப்பட்டனர்.
புதுவை கெப்ளே தியேட்டர் அவர்களுக்காகக் காத்திருந்தது. நம்பிக்கையுடன் ஒத்திகையில் ஈடுபட்டனர். பழனியப்பன் அல்லது சாந்தா. அந்தக் குழுவினரிடம் இருந்த நம்பிக்கைக்குரிய நாடகம் அது. கருணாநிதி எழுதியது. பிரசார நாடகம். விழுப்புரம் மக்களைப்போல அல்லாமல் புதுவை மக்கள் பழனியப்பனை நன்றாக ரசித்தனர். அந்த நாடகத்தில் சிவகுரு என்ற பாத்திரம் கருணாநிதிக்கு. நாடகம் இருபத்தைந்து நாள்கள் நடந்தது. அத்தனையும் வசூல் தினங்கள். சொந்த செலவு போக வீட்டுக்குக் கொஞ்சம் பணம் அனுப்ப முடிந்ததில் கருணாநிதிக்கு மகிழ்ச்சி. எதிர்காலம் குறித்த நம்பிக்கை ஒளி தெரிந்தது.
திராவிடர் கழகப் பிரசார நாடகம் என்பதால் புதுவையில் இருந்த திராவிடர் கழக அபிமானிகள் கருணாநிதி உள்ளிட்ட நாடகக் குழுவினருடன் நெருக்கம் காட்டினர். நாடகத்தில் வரும் பிரசார வசனங்களைப் போலவே பத்திரிகையிலும் எழுதினால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நினைத்தார் காஞ்சி கல்யாணசுந்தரம். இவர் தொழிலாளர் மித்திரன் என்ற பத்திரிகையை நடத்தியவர். கருணாநிதியை அணுகினார். அடிக்கரும்பைக் கொடுத்து அப்படியே சாப்பிடச் சொன்னதுபோல இருந்த்து கருணாநிதிக்கு. உற்சாகமாக எழுதத் தொடங்கினார்.
சுதந்தரத்துக்கு முன்பு இந்தியாவில் இரண்டு புனித பிம்பங்கள் இருந்தன. ஒன்று, காந்தி. மற்றொன்று, காங்கிரஸ். அந்த இரண்டையும்தான் குறிவைத்தார் கருணாநிதி. விமரிசனக் கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். முதல் கட்டுரையின் பெயர், அந்தப் பேனா. காணாமல் போன காந்தியின் பேனா பற்றிய கட்டுரை. காந்தியின் அணுகுமுறை மற்றும் காங்கிரஸ் காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமரிசனம் செய்தது. அடுத்தது, காந்தி வைசிராய் ஆனால்? அதுவும் அதே ரகம்தான்.

கருத்துகள் இல்லை: