புதன், 8 ஜூன், 2011

கனிமொழிக்கு ஜாமீன் மறுப்பு-ராசாத்தி அம்மாள் கண்ணீர்!

டெல்லி: திமுக தலைவர் கருணாநிதியின் மகளும், திமுக ராஜ்யசபா உறுப்பினருமான கனிமொழி மற்றும் கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டி ஆகியோரின் ஜாமீன் மனுக்களை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கி இந்த இருவரும் சிபிஐயால் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களது ஜாமீன் மனுக்களை ஏற்கனவே சிபிஐ சிறப்பு கோர்ட் நிராகரித்து விட்டது. இதைத் தொடர்ந்து இருவரும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் ஜூன் 3ம் தேதி தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் தீர்ப்பு வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தின் ஒரு மாத கால கோடை விடுமுறை அடுத்த நாள் தொடங்கியது. இதனால் ஒரு மாதத்திற்கு கனிமொழி வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் இன்று கனிமொழி, சரத்குமார் ரெட்டி ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி பரிஹோக் அறிவித்திருந்தார். அதன்படி இன்று தனது தீர்ப்பை அளித்தார் நீதிபதி பரிஹோக்.

அப்போது கனிமொழி மற்றும் சரத்குமாரின் ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலால் இருவரும் பலனடைந்திருப்பார்கள் என்பதற்கு பூர்வாங்கம் உள்ளது. எனவே இருவரையும் ஜாமீனில் விட முடியாது என்று நீதிபதி தெரிவித்தார்.

கண்ணீர் விட்டு அழுத ராசாத்தி அம்மாள்:

ஜாமீன் மனு நிராகரிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்ததும் கோர்ட்டுக்கு வந்திருந்த கனிமொழியின் தாயார் ராசாத்தி அம்மாள் அதிர்ச்சி அடைந்து அழ ஆரம்பித்து விட்டார்.

அவரை அருகில் இருந்த டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுக தலைவர்கள் ஆறுதல் படுத்தினர்.

ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து கனிமொழி தொடர்ந்து சிறையிலேயே அடைபட்டிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
 

English summary
The Delhi High Court Wednesday rejected the bail pleas of DMK MP Kanimozhi and Kalaignar TV chief Sharad Kumar, both named co-conspirators in the 2G spectrum case. Kanimozhi, the daughter of DMK chief Karunanidhi and Sharad Kumar have been in Tihar Jail since May 20 when a special Central Bureau of Investigation court here dismissed their bail pleas.

கருத்துகள் இல்லை: