tamil.oneindia.com - Nantha Kumar R : டெஹ்ரான்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் சேர்ந்து மேற்கொண்ட போர் நடவடிக்கையால் மேற்கொள்ளப்பட்ட வான்வழி தாக்குதல்களால் ஈரான் பெரும் அழிவை சந்தித்துள்ளன. ஈரானின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கொல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் ஈரானின் இந்த பேரழிவுக்கு சீனாவை நம்பியதும், சீனாவின் வான்வெளி பாதுகாப்பு சாதனம் காலை வாரியதும் தான் முக்கிய காரணம் என்ற திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
ஈரானை குறிவைத்து அமெரிக்காவும், இஸ்ரேலும் பந்தாடி வருகின்றன.
iran-war-did-chinas-hq-9b-fail-iran-against-israel-us-attacks
இந்த தாக்குதலில் ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டுள்ளார். இதனால் ஆக்ரோஷமான ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. இஸ்ரேல் மட்டுமின்றி கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி, பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்காவின் விமான தளங்களை குறிவைத்து தாக்கி வருகிறது.
நேற்று தொடங்கிய இந்த போர் இன்று 2வது நாளாக நீடித்து வருகிறது. இப்படியான சூழலில் தான் சீனாவை நம்பி அமெரிக்கா, இஸ்ரேலிடம் ஈரான் அடிவாங்கி உள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சீனாவின் வான்வெளி பாதுகாப்பு அமைப்பை நம்பி ஈரான் வாங்கிய நிலையில் அது சரியாக செயல்படாமல் போனது தான் காரணம் என்று கூறப்படுகிறது.
அதாவது ஈரானை எடுத்து கொண்டால் ஏவுகணை தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குகிறது. நிறைய ஏவுகணைகளை ஈரான் தயாரித்து வைத்துள்ளது. ஆனால் ஈரானிடம் வான்வெளி பாதுகாப்பு சாதனம் கிடையாது. அதாவது எதிரி நாடுகள் ஏவும் ஏவுகணைகள், ட்ரோன்கள், போர் விமானங்களை முன்கூட்டியே அறிந்து வானிலேயே அழிக்கும் வகையிலான தொழில்நுட்பத்தில் ஈரான் பின்தங்கி உள்ளது. இந்த விஷயத்தில் ஈரான், ரஷ்யாவை நம்பியது. ரஷ்யாவும், சீனாவும் நெருங்கிய நட்பு நாடுகளாக இருந்தன.
Recommended For You
ஈரான் கோரதாண்டவம்.. கடலில் பற்றி எரியும் எண்ணெய் கப்பல்.. 14 இந்தியர்களின் கதி என்ன? உச்சமடைந்த போர்
இதனால் ரஷ்யாவிடம் இருந்து ஈரான் எஸ்-300பிஎம்யூ-2 வான்வெளி பாதுகாப்பு அமைப்பை வாங்கியது. இது ரஷ்யாவிடம் இருந்து வாங்கி நம் நாடு பயன்படுத்தி வரும் எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம் போல் செயல்படும். அதாவது எதிரிகளின் விமானங்கள், ஏவுகணைகள் தாக்க வரும்போது அதனை கண்காணித்து உடனடியாக தாக்கும்.
இதற்கிடையே தான் அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த ஆண்டு ஈரானில் உள்ள 3 அணுசக்தி நிலையங்களை குண்டுவீசி தாக்கியது. அந்த தாக்குதலின்போது இஸ்ரேலின் ஏவுகணைகளுக்கு எதிராக ரஷ்யாவின் S-300PMU-2 வான்வெளி பாதுகாப்பு அமைப்பு சரியாக செயல்படவில்லை. இஸ்ரேல், அமெரிக்காவின்போர் விமானங்கள், ஏவுகணைகளை அது கண்டுபிடித்து அழிக்கவில்லை. இதனால் ஈரான், ரஷ்யாவை விட்டு சீனாவின் பக்கம் சென்றது.
சீனாவிடம் இருந்து புதிய வான்வெளி பாதுகாப்பு சாதனத்தை வாங்கியது. எண்ணெய் ஆயுதம் ஒப்பந்தத்தின் கீழ் இதனை ஈரான் வாங்கியது. அதாவது ஈரான் தனது நாட்டில் இருந்து சீனாவுக்கு கச்சா எண்ணெய் வாங்கும். அதற்கு பதில் சீனா பணம் கொடுக்காமல் ஆயுதங்களை வழங்க வேண்டும் என்பது தான் இந்த ஒப்பந்தத்தின் பின்னணியாகும். இந்த ஒப்பந்தப்படி சீனாவிடம் இருந்து ஈரான் HQ-9B வான்வெளி பாதுகாப்பு அமைப்பை வாங்கியது.
You May Also Like
ஈரானை அடித்தால் இந்தியாவுக்கு வலிக்கும்..மிகப் பெரிய வாய்க்கா தகராறு! இது நடந்தால் மொத்தமும் போச்சு!
இந்த அமைப்பு சீனா ஏரோஸ்பேஸ் சயின்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி கார்ப்பரேஷன் எனும் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு வருகிறது. ரஷ்யாவின் எஸ்-300பிஎம்யூ மற்றும் அமெரிக்காவின் பேட்ரியாட்பிஏசி-2 உள்ளிட்டவற்றை அடிப்படையாக வைத்து எச்க்யூ-9பி தயாரிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2006ம் ஆண்டில் சீனாவால் சோதனை செய்யப்பட்டது. அதன்பிறகு கடந்த 10 ஆண்டுகளாக சீனா பயன்படுத்தி வருகிறது.
இந்த எச்க்யூ-9பி வான்வெளி பாதுகாப்பு அமைப்பு 260 கிலோமீட்டர் தொலைவில் வரும் ட்ரோன்கள், போர் விமானங்கள், ஏவுகணைகளை கண்காணித்து சிக்னல்களை வழங்கும். அதோடு 50 கிலோமீட்டர் உயரம் வர ஏவுகணைகளை ஏவி எதிரிகளின் விமானங்கள், ஏவுகணைகளை வானிலேயே அழிக்கும் தன்மை கொண்டது. ஆக்டிவ் ரேடார் ஹோமிங் மற்றும் பாஸிவ் இன்ஃப்ராரெட் சீக்கர் தொழில்நுட்பம் உள்ளது. இதனால் ரேடாரில் சிக்காமல் தாக்குதல் நடத்தும் விமானங்களையும் இதனால் தாக்க முடியும். ஒரே நேரத்தில் 6 முதல் 8 டார்க்கெட்டுகளை தாக்குவதோடு, 100 டார்க்கெட்டுகளை கண்காணிக்கும் திறன் கொண்டது.
இந்த எச்க்யூ-9பி வான்வெளி பாதுகாப்பு அமைப்புக்கு பக்கப்பலமாக ஈரான் ஏற்கனவே வைத்திருக்கும் ரஷ்யாவின் S-300PMU-2, பவார்-373, கோர்டாட்-15, ராட் , டோர்-M2, பான்ட்ஸிர்-S1, ஸோல்ஃபகர், MANPADS ஆகியவை பக்கபலமாக இருந்தன. நதான்ஸ் அணுசக்தி வளாகம், ஃபோர்டோ அணுசக்தி வளாகம், ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தயாரிப்பு தளங்கள், தலைநகர் டெஹ்ரான், இஸ்பஹான் உள்ளிட்ட இடங்களில் உள்ள விமான தளங்கள் உள்ளிட்ட இடங்களில் ஈரான் சீனாவின் HQ-9B நிலைநிறுத்திருக்கலாம் என்று கூறப்பட்டது.
ஆனால் இந்த எச்க்யூ-9 பி சரியாக செயல்படவில்லை. இதனால் அமெரிக்கா, இஸ்ரேலின் போர் விமானங்கள், ஏவுகணைகளை அந்த அமைப்பு கண்டுபிடித்து அழிக்கவில்லை. இந்த அமைப்பு தோல்வியடைய 2 காரணங்கள் கூறப்படுகிறது. ஒன்று எச்க்யூ - 9 பி வான்வெளி பாதுகாப்பு அமைப்பில் ஏதேனும் குறைபாடு இருந்திருக்கலாம். இல்லாவிட்டால் பதற்றத்துக்கு நடுவே அவசர கதியில் அமைக்கப்பட்ட எச் -9பி வான்வெளி பாதுகாப்பை அமைப்பை அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஒருங்கிணைந்த நவீன தொழில்நுட்ப ஏவுகணைகள் முறியடித்து இருக்கலாம். இருப்பினும் இந்த 2 விஷயத்தில் என்ன நடந்து இருந்தாலும் அது சீனாவின் எச்க்யூ -9பி வான்வெளி பாதுகாப்பு அமைப்பின் தோல்வியாகவே பார்க்கப்படுகிறது.
சீனாவின் இந்த எச்க்யூ-9பி வான்வெளி பாதுகாப்பு அமைப்பு தோல்வியடைவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு நம் நாடு பாகிஸ்தானை ‛ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் அதிரடி தாக்குதல் நடத்தியது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின்போது நம் நாட்டின் ஏவுகணைகள், ட்ரோன்கள் துல்லியமாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள், விமான தளம், ராணுவதளங்களை தாக்கி அழித்தது. அப்போது நம்நாட்டின் தாக்குதலில் இருந்து தப்பிக்கவும், ஏவுகணைகளை கண்காணித்து தடுக்கவும் பாகிஸ்தானும், சீனாவின் HQ-9B வான்வெளி பாதுகாப்பு அமைப்பை தான் பயன்படுத்தியது. ஆனால் அந்த அமைப்பு சரியாக செயல்படாததால் நம் நாடு பாகிஸ்தானை பந்தாடியது. அதேபோல் தான் அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் இருந்து ஈரானை காப்பதில் சீனாவின் எச்க்யூ-9பி வான்வெளி பாதுகாப்பு அமைப்பு தோல்வியடைந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக