tamil.oneindia.com - Vishnupriya R : சென்னை: மாநிலங்களவை தேர்தலில் திமுக வேட்பாளர்கள் யார் யார் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
மொத்தம் 4 இடங்களில் 2 இடங்களில் திமுகவும் தலா ஒரு இடத்தை காங்கிரஸ், தேமுதிகவுக்கு கொடுக்க திமுக முடிவு செய்துள்ளது. ஒரு வேளை சட்டசபை தேர்தலில் கூட்டணியை காங்கிரஸ் இறுதி செய்யாவிட்டால் 3ஆவது வேட்பாளராக யார் நிறுத்தப்படுவர் என்பதையும் திமுக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
தமிழகத்தில் இருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் காலியாகின்றன. இந்த 6-ல் சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கேற்ப திமுகவுக்கு 4 இடங்களும் அதிமுகவுக்கு 2 இடங்களும் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
இந்த 6 பதவிகளுக்கும் வரும் 16 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுதாக்கல் வரும் 5ஆம் தேதிக்குள் செய்ய வேண்டும். வரும் சட்டசபை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வரும் காங்கிரஸ் கட்சி, மாநிலங்களவை தேர்தலில் தங்களுக்கு இடம் ஒதுக்க கோரிக்கை விடுத்திருந்தது.
அதன்படி காலியாகும் 4 இடங்களில் ஒன்றை காங்கிரஸுக்கும், மற்றொன்றை தேமுதிகவுக்கும் கொடுக்க திட்டமிட்டுள்ளது. மீதமுள்ள இரண்டில் திமுக போட்டியிடுகிறது. திமுக சார்பில் திருச்சி சிவா, கான்ஸ்டடைன் ரவீந்திரன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளை ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சி தங்களுக்கு 35 இடங்களை ஒதுக்க வேண்டும் என கேட்டு, திமுக கொடுக்கும் 25 இடங்களை மறுத்து வருகிறது. இதனால் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது. காங்கிரஸின் தாமதத்தால் மற்ற கட்சிகளுக்கும் தொகுதிகளை ஒதுக்க முடியவில்லை.
இந்த 35 இடங்கள் கிடைக்காவிட்டால் திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேறவும் ஆலோசனை நடத்தி வருகிறது. இதனால் கூட்டணி பேச்சுவார்த்தையை இனியும் நீடிக்க வேண்டாம் என கருதிய திமுக, காங்கிரஸ் கட்சிக்கு கெடு விதித்துள்ளது.
மாநிலங்களவை தேர்தலுக்கு வேட்புமனு தாக்கலை 5 ஆம் தேதிக்குள் செய்ய வேண்டும் என்பதால் காங்கிரஸ் கட்சிக்கு இன்று வரை கெடு விதிக்கப்பட்டுள்ளது. இன்றைக்குள் கூட்டணியை காங்கிரஸ் இறுதி செய்யாவிட்டால், அக்கட்சிக்கு ஒதுக்கப்படும் மாநிலங்களவை சீட்டை திமுகவே எடுத்துக் கொள்ள முடிவு செய்துள்ளது.
அதன்படி 3ஆவது வேட்பாளராக இனி அறிவிக்கப்படுவார் என திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனவே காங்கிரஸ் கட்சி என்ன முடிவை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் தேமுதிக சார்பில் எல்.கே.சுதீஷ் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என சொல்லப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக