புதன், 5 ஜூன், 2024

ராகுல் காந்தி : ஆட்சி அமைக்க எங்களிடம் வியூகம் உள்ளது!

 மாலை மலர்  :  புதுடெல்லி பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி 230-க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ராகுல் காந்தி கூறியதாவது:
அரசியல் அமைப்பு நிறுவனங்கள் மீதான மோடி, அமித்ஷாவின் தாக்குதலுக்கு எதிரான போர் இது. அரசியல் சாசனத்தைக் காப்பாற்றுவதற்கான தேர்தலாகவே இந்த தேர்தல் அமைந்துள்ளது.
அரசு எந்திரங்களை தவறாகப் பயன்படுத்தியதற்கு எதிரான தேர்தல் இது. பா.ஜ.க. மட்டுமின்றி சி.பி.ஐ, அமலாக்கத் துறையை எதிர்த்து நின்று வென்றுள்ளோம்.



இது அரசியல் சாசனத்தைக் காப்பதற்கான போராட்டம். அரசியல் சாசனத்தைக் காக்க மக்கள் எங்களுக்கு ஓட்டுப் போடுவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது.

அரசியல் கட்சிகளை உடைக்கும் வேலையை நாடு முழுவதும் பா.ஜ.க. செய்தது. தெளிவான பார்வையுடன் மக்கள் முன் எங்கள் கொள்கைகளை முன்வைத்தோம். பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் ஒலிக்கும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

மோடிக்கு எதிரான போரில் காங்கிரசுடன் இணைந்து செயல்பட்ட கூட்டணி கட்சிகளை மதிக்கிறோம். அரசியல் சாசனத்தைக் காப்பாற்றும் வேலையை விவசாயிகள், ஏழை எளிய மக்கள் செய்துள்ளனர். நாடு மோடியை புறக்கணித்து விட்டது. 10 ஆண்டாக ஆட்சி நடத்திய விதம் சரியல்ல என்பதை தேர்தல் முடிவு உணர்த்துகிறது என தெரிவித்தார்

கருத்துகள் இல்லை: