வியாழன், 6 ஜூன், 2024

நிதி, உள்துறை, பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளை கேட்கும் நிதிஷ் நாயுடு கட்சிகள்

சோலை மலர் : மக்களவை தேர்தல் வாக்குகள் கடந்த 4-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) எண்ணப்பட்டன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் கூறியது போல பாஜக-வுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. கூட்டணியாக 293 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தனிக்கட்சியாக 240 இடங்களை கைப்பற்றியுள்ளது.
ஆட்சி அமைப்பதற்கு 272 இடங்கள் தேவை. இதனால் 32 இடங்களுக்கு கூட்டணி கட்சிகளை நம்பி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தெலுங்குதேசம் (16), ஐக்கிய ஜனதா தளம் (12), ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா (7), சிராக் பஸ்வான் கட்சி (5) முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்த நான்கு கட்சிகளும் 40 இடங்களை பெற்றுள்ளது. 40 இடங்களை தவிர்த்தால் பாஜக கூட்டணியில் 253 இடங்கள்தான் இருக்கும் ஆட்சி அமைக்க முடியாது. கடந்த இரண்டு முறை தனி மெஜாரிட்டி பெற்றதால் பாஜக கொடுத்த இலாகாக்களை கூட்டணி கட்சிகள் பெற்றுக் கொண்டன.

தற்போது இந்த நான்கு கட்சிகளில் நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோர் கிங் மேக்கராக திகழ்கின்றன. இருவரையும் பகைத்தால் பாஜக ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் மந்திரி சபையில் முக்கியமான இலாகாக்களை இரண்டு கட்சிகளும் குறிவைத்துள்ளன. நிதி, ரெயில்வே, உள்துறை, வெளியுறவுத்துறை என தாங்கள் விரும்பிய இலாகாக்களை பெற விரும்புகின்றன. அதுவும் கேபினட் அந்தஸ்து இலாகாக்களை கேட்கிறது. அதனுடன் சபாநாயகர் பதவி மேலும் கண் வைத்துள்ளன.
ஆனால்  இந்த துறைகளை கொடுத்தால் பாஜகவின் அதிகாரம் பறிபோகும் என்று என பாஜக நினைக்கிறது.

சபாநாயகர் பதவி
இரு கட்சிகளும் சபாநாயகர் பதவிக்கு அடி போடுகின்றன. தற்போது மெஜாரிட்டி இல்லாத நிலையில் சபாநாயகர் பதவியை கூட்டணி கட்சிக்கு வழங்கினால் அது பேராபத்தாக முடியும் என நினைக்கிறது. இதனால் சபாநாயகர் பதவி கொடுக்க முடியாது என்பதில் உறுதியாக இருக்கும்.

போக்குவரத்து, நெடுஞ்சாலை அல்லது நலத்திட்டம் தொடர்பான இலாகாக்களை கொடுத்தால் ஏற்கனவே காண்ட்ராக்டுகள் கொடுத்த விவகாரங்களில் பல பிரச்சனைகளை சந்திக்கும் பாஜக இதையும் கொடுப்பதற்கு தயங்குகிறது.

தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி ஏழை, பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகிய நான்கும்தான் ஜாதிகள் என குறிப்பிட்டார். இதனால் இது தொடர்பான துறைகளை கையில் வைத்துக் கொள்ள முயற்சிக்கும்.

நிதின் கட்கரி வசம் உள்ள சாலை மற்றும் நெடுஞ்சாலை துறை கொழுத்த வருமானம் உள்ள ஒரு துறையாகும் எனவே இந்த வாய்ப்பையும் கூட்டணி கட்சிக்கு விட்டுக்கொடுக்க விரும்பாது.

ரெயில்வே துறை

ஐக்கிய ஜனதா தளம் ரெயில்வே துறையை கேட்கிறது. . இதையும் கூட்டணியிடம் கொடுக்க பாஜக விரும்பவில்லை..

கடந்த இரண்டு முறையும் கூட்டணி கட்சிகளுக்கு உணவுத்துறை, கனரக தொழில்துறை போன்ற துறைகளை ஒதுக்கியது. ஆனால் தற்போது கூட்டணி ஆட்சி என்பதால் சில துறைகளை கொடுக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இருந்த போதிலும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு பஞ்சாயத்து, கிராமப்புற வளர்ச்சி போன்ற துறைகளை அளிக்க முன்வரலாம்.

இணை அமைச்சர் பதவிகள்

தெலுங்குதேசம் கட்சிக்கு விமானத்துறை, ஸ்டீல் துறை போன்ற இலாகாக்கள் வழங்க முன்வரலாம். அதேவேளையில் நிதி மற்றும் பாதுகாப்பு துறையில் இணை அமைச்சர் பதவியை பெற கூட்டணி கட்சிகள் முயற்சி மேற்கொள்ள வாய்ப்புள்ளது.

சுற்றுலா, திறன் வளர்ச்சி, அறிவியல் மற்றும் புவியியல் துறைகளை ஒதுக்க பாஜக முன்வரும். இதனால் இலாகாக்கள் தொடர்பான விசயத்தில் ஒருமித்த கருத்து நிலவுவதில் இன்னும் சஸ்பென்ஸ் நீடித்து வருகிறது.

கருத்துகள் இல்லை: