வெள்ளி, 7 ஜூன், 2024

நியாயமான முறையில் தேர்தல் நடந்திருந்தால் நிச்சயம் பிஜேபி கூட்டணி படுதோல்வியை சந்தித்திருக்கும்.

May be an image of 2 people

Karthikeyan Fastura  :   நியாயமான முறையில் தேர்தல் நடந்திருந்தால் நிச்சயம் பிஜேபி கூட்டணி படுதோல்வியை சந்தித்திருக்கும்.
ஆரம்பத்தில் இருந்தே இவர்கள் முடிந்த அளவிற்கு அனைத்துவித தேர்தல் ஊழல்களையும் செய்ய ஆரம்பித்து இருந்தார்கள்
சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு தலைமை தேர்தல் கமிஷனர் அதிகாரியாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜிவ்குமாரை நியமிக்கிறார்கள்.
தேர்தல் ஆணையத்தின் கமிஷனர் அருண் கோயல் திடீரென்று மார்ச் மாதம் தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக அறிவிக்கிறார்.
அவருக்கு பதிலாக சுக்பீர்சிங் சாந்து நியமிக்கப்படுகிறார்.



இன்னொரு எலக்சன் கமிஷனராக இருந்த அனுப்சந்திர பாண்டே இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பதவி விலக அவருக்கு பதிலாக தியானேஷ் குமார் பதவிக்கு வருகிறார்.
இப்படியாக இரண்டு தேர்தல் கமிஷனர்கள் ஒரு பெரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு சற்று முன்பாக நியமிக்கப்படுகிறார்கள்.
இது எதிர்க்கட்சிகளுக்கு மத்தியில் சந்தேகத்தையும் சலசலப்பையும் ஏற்படுகிறது.
நியாயமான முறையில் தேர்தல் நடக்குமா என்ற கேள்வி எழுகிறது.
எதிர்க்கட்சிகளின் இந்த சந்தேகத்தை உறுதிப்படுத்தும் விதமாக அடுத்தடுத்த காட்சிகள் நிகழ்கின்றன.

சூரத் மற்றும் இந்தூர் தொகுதிகளில் பிஜேபி வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட அவலம் நடந்தது.
சூரத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரின் மனுவை கடைசி நிமிடத்தில் தள்ளுபடி செய்தது தேர்தல் ஆணையம்.
மற்ற வேட்பாளர்கள் குதிரை பேரத்தில் மடிந்து ஒவ்வொருவராக வேட்பு மனுவை திரும்ப பெற்றார்கள்.
இந்தூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரே குதிரை பேரத்தில் மடிந்து வேட்பு மனுவை கடைசி நிமிடத்தில் திரும்ப பெற்றார்.
மற்ற வேட்பாளர்களும் திரும்பப் பெற்றனர். இந்த ஜனநாயக படுகொலைக்கு தேர்தல் ஆணையம் துணை நின்றது.

இப்படியான சூழலில் ஒரு நாள் கூடுதலாக ஒதுக்கலாம். ஒரு மணி நேரம் ஒதுக்கி இருந்தாலும் எதிர்க்கட்சிகள் இன்னொரு நபரை அந்த இடத்தில் நிறுத்தி இருக்கும்.
EVM மீதான சந்தேகம் பல காலமாக எழுப்பப்பட்டு வந்த போதிலும் தேர்தல் ஆணையத்தால் அதனை சரிவர நிவர்த்தி செய்ய முடியவில்லை.
சமீபத்தில் VVPAT என்ற ஓட்டு ஒப்புகை சீட்டு எல்லா எண்ணிக்கைகளிலும் கணக்கிடப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது அது சாத்தியமில்லை என்று கூறி தள்ளுபடி செய்து விட்டார்கள்.
வாக்குப்பதிவு எந்திரம் வருவதற்கு முன்பு ஒரே நாளில் வாக்குப்பதிவு நடந்து கொண்டிருந்தது.
இன்று கிட்டத்தட்ட இரண்டரை மாதங்கள் வாக்குப்பதிவு ஏழு கட்டமாக நடத்த வேண்டிய அவசியம் என்ன? வாக்கு எண்ணிக்கைகள் இணையதளத்தில் சரிவர ஏற்றப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டிற்கும் தேர்தல் ஆணையத்தால் பதில் சொல்ல இயலவில்லை.

தேர்தல் நடைமுறைகள் ஆளுங்கட்சிகளால் சரிவர பின்பற்றப்படாத சூழலிலும் அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. ஒரு நாட்டின் பிரதமராக இருக்கும் தலைவரே தேர்தல் விதிகளுக்கு முரணாக மத துவேச கருத்துக்களை கூறிக் கொண்டே இருக்கிறார் எதிர்க்கட்சிகள் அதனை கண்டிக்கச் சொல்லி தேர்தல் ஆணையத்தை வற்புறுத்துகிறார்கள் ஆனால் தேர்தல் ஆணையம் மௌனமாக இருக்கிறது. கடைசி கட்ட தேர்தல் நடக்கும்போது தேர்தல் விதிகளுக்கு முரணாக பிரதமர் தியானம் என்ற பெயரில் கடைசி நிமிடம் வரை பிரச்சாரம் செய்கிறார். அதையும் எதிர்க்கட்சிகள் சுட்டிக் காட்டுகின்றன. தேர்தல் ஆணையம் மௌனமாக இருக்கிறது.
இன்றும் எண்ணற்ற வாக்கு எண்ணிக்கை தளங்களில் இருந்து குற்றச்சாட்டுகள் வந்த போதும் தேர்தல் ஆணையம் விளக்கம் கொடுக்கவில்லை. அங்கு பல கட்ட குதிரை பேரங்கள் நடந்திருக்க அதிக வாய்ப்புண்டு. அதுபோக வாக்கு பதிவு அன்று கணக்கிடப்பட்ட பதிவான வாக்குகளை விட கூடுதலாக ஆறு சதவீதம் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் கணக்கு காட்டியுள்ளது. இதற்கான காரணத்தை எழுப்பிய போதும் தேர்தல் ஆணையம் மௌனம் சாதித்துள்ளது.

தேர்தலுக்கு முன்பு அமலாக்கத்துறை மூலம் பல கட்சித் தலைவர்களையும் மிரட்டி, உருட்டி எண்ணற்ற வேலை பார்த்தார்கள்.
ஒரு மாநிலத்தின் முதலமைச்சரையே போலியான குற்றச்சாட்டில் சிறையில் தள்ளி இன்று அந்த மாநிலத்தில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
இப்படி அனைத்து அரசு அமைப்புகளையும் கைக்குள் போட்டுக் கொண்டு, அரசு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி பெரும் தேர்தல் ஒன்றை நடத்தி இருக்கிறார்கள்.

இதனால் மக்களுக்கு இந்த தேர்தலில் மீது இருந்த நம்பிக்கை குறைந்திருக்கிறது.
வடகிழக்கு மாநிலங்களிலும், உத்தர் பிரதேசத்திலும் குறைவான வாக்கு எண்ணிக்கை சதவீதம் பதிவாகி இருக்கிறது.
இத்தனை குளறுபடிகளுக்கு மத்தியில் இந்தியா கூட்டணி 235 தொகுதிகளில் வந்திருப்பது மிகப்பெரும் வெற்றியாக தான் பார்க்கிறேன்.

இது நியாயமாக 300 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று இருக்க வேண்டும்.
காங்கிரஸ் கவனக் குறைவாக இருந்த அல்லது அதீத தன்னம்பிக்கையுடன் திகழ்ந்த கர்நாடகா, ஓடிஸா, சட்டீஸ்கர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ளடி வேலைகள் நிறைய நிகழ்ந்திருக்க வேண்டும்.

அதனால் தான் இத்தகைய மார்ஜினல் வெற்றி பாஜகவிற்கு கிடைத்திருக்கிறது.
இருந்த போதும் இந்தியா கூட்டணிக்கு இது வெற்றி தான்.
பிஜேபி அறுதிப்பெரும்பான்மை பெற முடியாமல் ஆட்சி அமைக்க போகிறது.

நிதீஷ் குமார், சந்திரபாபு நாயுடு உடனான பிஜேபி கூட்டணி என்பது உறுதியான ஒன்றாக கருத முடியாது. இந்த நிலையில் காங்கிரஸ் அவர்கள் இருவரையும் அழைத்துப் பேசி வருகிறது.
இருந்த போதிலும் பிஜேபியின் முன்னாள் எம்எல்ஏவான ஜனாதிபதி முர்மோ பிஜேபியை தான் ஆட்சி அமைக்க அழைப்பார்.

ஆட்சி அமைத்த பின் ராகுல் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து நிதீஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு உடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க வாய்ப்பு இருக்கிறது.
மேலும் தன் இஷ்டத்திற்கு ஆடிய ஆட்டத்தைப் போல் இம்முறை ஆட முடியாது.

இஷ்டத்திற்கு சட்ட திருத்தம் கொண்டு வர முடியாது என்பதே இப்போதைய ஆறுதல். வாஜ்பாய்க்கு பிறகு இரண்டு முறை தொங்கும் பாராளுமன்ற ஆட்சி நிகழ்ந்து அதன் பிறகு காங்கிரஸ் பெரும்பான்மையுடன் இரு முறை ஆட்சிக்கு வந்தது. வரலாறு திரும்புகிறதோ என்று தோன்றுகிறது.

பிஜேபியின் தேய்பிறை காலம் தொடங்கிவிட்டது. தன் கடந்த கால தவறுகளை உணர்ந்து திருத்திக்கொண்டு சித்தாந்த அரசியல் பாதையில் காங்கிரஸ் ராகுல்காந்தியின் கீழ் வளர ஆரம்பித்துவிட்டது. இனி அடுத்தடுத்த தேர்தல்கள் நல்ல மாற்றத்தை நோக்கி நகரும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது.

தேர்தல் அரசியலை விட சித்தாந்த அரசியல் வலுவானது என்பதற்கு எடுத்துக்காட்டாக தமிழ்நாடு திகழ்ந்திருக்கிறது. இது பிற மாநிலங்களுக்கு ஒரு பாடமாகவும் இருக்கும். மக்கள் அதனை நோக்கி இன்னும் வலுவாக நகர்வதற்கு மக்கள் விரோத RSS சித்தாந்தத்தின் ஆட்சி காலம் இன்னும் கொஞ்சம் செல்லட்டும்

கருத்துகள் இல்லை: