திங்கள், 3 ஜூன், 2024

கலாஷேத்ரா பாலியல் வழக்கில் பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணா நிபந்தனை ஜாமின்

 மாலை மலர் : சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா அறக்கட்டளை வளாகத்தில் உள்ள கல்லூரியில் படித்த முன்னாள் மாணவி ஒருவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு தன்னை முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணா பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார் அளித்திருந்தார்.
அப்பெண்ணிடம் அடையாறு மகளிர் போலீசார், வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை மேற்கொண்ட நிலையில், கடந்த ஏப்ரல் 22ம் தேதி நீலாங்கரை போலீசாரால் ஸ்ரீஜித் கிருஷ்ணா கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீஜித் கிருஷ்ணா மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது. வெளிநாடு செல்ல வேண்டுமென்றால் விசாரணை நீதிமன்றத்தில் உரிய அனுமதி பெற வேண்டுமென ஸ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

தற்போது ஸ்ரீஜித் கலாஷேத்ராவில் பணியாற்றவில்லை. தனியாக நடனப்பள்ளி அமைத்து மாணவிகளுக்கு நடனம் கற்றுக்கொடுத்து வருகிறார்.

கடந்தாண்டு இதே கல்லூரியில் பணியாற்றிய நடனத்துறை உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மீது மாணவிகள் கொடுத்த பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: