ஞாயிறு, 11 செப்டம்பர், 2022

பாகிஸ்தான் வெள்ளம்; பசியால் 6 வயது சிறுமி உயிரிழப்பு: போராட்டம் வெடித்தது

தினத்தந்தி   : பாகிஸ்தானில் வெள்ள சூழலில் 6 வயது சிறுமி நிவாரண உதவி கிடைக்காமல் உயிரிழந்த சம்பவத்தில் 200 குடும்பங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
பாகிஸ்தானில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டு கோடிக்கணக்கான மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது. இதில், சிந்த் மாகாணமும் ஒன்று. அதன் சுக்கூர் நகரில் வசித்து வரும் பல குடும்பத்தினர் கனமழை மற்றும் வெள்ளத்தில் வீடுகளை இழந்து உள்ளனர்.
இதில், ஒரு பகுதியினர் பத்னி பகுதியில் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் தற்காலிக கூடாரத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், நிவாரண உதவிகள் கிடைக்காமல் முகாமில் தங்கியிருந்த 6 வயது சிறுமி உயிரிழந்து உள்ளார்.
இதுபற்றி சிறுமி ரசியாவின் தந்தை காலித் கோசோ கூறும்போது, எங்களது குழந்தை பசியால் தவித்தபோது, ரோரி நகரில் உள்ள முக்தியார்கர் அலுவலகத்திற்கு உதவி கேட்டு சென்றோம். எங்களுக்கு உணவோ, கூடாரமோ வழங்கவில்லை. இந்த சூழலில் சிறுமி பசியாலும், நோயாலும் உயிரிழந்து விட்டார் என கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து, வெள்ளம் பாதித்த 200 குடும்பத்தினர் சுக்கூர் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அதிகாரிகள் உணவு மற்றும் பிற நிவாரண பொருட்களை தேவையான நேரத்தில் கொடுக்காமல் தவறியதில் சிறுமி உயிரிழந்து உள்ளார் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கனமழை மற்றும் வெள்ளத்தில் அனைத்தும் அடித்து செல்லப்பட்டு விட்ட பின்னர், சுக்கூரில் இருந்து ஜகோபாபாத் மாவட்டத்திற்கு நாங்கள் வந்தோம். அதிகாரிகளின் உதவிக்காக காத்திருந்தோம்.

ஆனால், விவரங்களை சேகரிக்கவே வந்த அதிகாரிகள், எங்களுக்கு உணவு, கூடாரம், கொசு வலை மற்றும் பிற தேவையான நிவாரண பொருட்கள் எதனையும் வழங்கவில்லை. இதனால், பசியால், நோயால் பாதிக்கப்பட்ட எங்களது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரை பாதுகாக்க முடியவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை: