வெள்ளி, 18 மார்ச், 2022

இன்று தமிழ்நாடு பட்ஜெட் .. மக்கள் எதிர்பார்த்த அந்த அறிவிப்பு வரும்?

 Shyamsundar  - e Oneindia Tamil :  சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இதில் முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு சட்டசபையில் 2022-2023-ம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இன்று காலை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மூலம் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இதை முன்னிட்டு இன்று காலை நிதி அமைச்சர் பிடிஆர் மூலம் நிதி நிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட உள்ளது. தமிழ்நாடு அரசின் உண்மையான நிதி நிலை என்ன, என்னென்ன திட்டங்களை இதன் மூலம் நிறைவேற்றலாம் என்று தெரிவித்துவிடும்.
தமிழ்நாடு பட்ஜெட்: குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 அறிவிப்பு வெளியாகிறதா? யாருக்கெல்லாம் கிடைக்கும்? தமிழ்நாடு பட்ஜெட்: குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 அறிவிப்பு வெளியாகிறதா? யாருக்கெல்லாம் கிடைக்கும்?

தமிழ்நாடு அரசின் நிதிநிலை கடந்த 10 மாதங்களில் வெகுவாக சீரடைந்து உள்ளது. அதே சமயம் ஜிஎஸ்டி இழப்பீடு இன்னும் முழுமையாக வராத காரணத்தால் பொருளாதார ரீதியாக இன்னும் சிக்கல் நிலவி வருகிறது. இதனால் திமுக அரசு அறிவித்த பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் திணறி வருகிறது. இதையடுத்து இன்று பல்வேறு வரி சீரமைப்பு அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பத்திரப்பதிவு, வணிகவரி, ஆயத்தீர்வை தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியமாக சுரங்கத்துரை தொடங்கி பல்வேறு துறைகளில் தமிழ்நாடு அரசுக்கு கடுமையான வரி இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து வரி இழப்பு ஏற்படாத வகையில் பல்வேறு சீர்திருத்தங்கள் இன்று அறிவிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. முன்னதாக பட்ஜெட்டை முன்னிட்டு கடந்த மார்ச் 5ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு அமைச்சர்கள் தங்கள் துறை ரீதியான கோரிக்கைகளை வைத்தனர்.

இதில் மின்சாரத்துறை சார்பாக, மாதம் ஒருமுறை மின் அளவு கணக்கீடு செய்யும் திட்டம் பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. இப்போது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின்சாரம் கணக்கிடப்படுகிறது. இதனால் மக்கள் சிலர் தங்களுக்கு அதிக பில் வருவதாக குறிப்பிட்டு வந்தனர். அதே சமயம் மாதம் ஒரு முறை பில் கணக்கீடு செய்தால் அதனால் அரசுக்கும் இழப்பு ஏற்படலாம் என்று கணக்கீடு செய்யப்படுகிறது.

கடந்த முறை அமைச்சரவை கூட்டத்தில் இதை பற்றிய விவாதத்தில் முதல்வர் ஸ்டாலின்.. இது சரிப்பட்டு வருமா.. அரசுக்கு இழப்பு ஏற்படுமா? மக்களுக்கு சுமை குறையுமா என்று கேட்டு இருக்கிறாராம். இதையடுத்து இதில் முறையான ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து இன்று மின் கட்டண கணக்கீடு முறை மற்றும் மின்சார கட்டணத்தில் புதிய மாற்றம் செய்யப்பட்டு அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாதம் ஒருமுறை மின்சார கட்டணத்தை கணக்கிடும் முறை அமலுக்கு வந்தால் மின் கட்டணம் வெகுவாக குறையும் வாய்ப்புகள் உள்ளன.

கருத்துகள் இல்லை: