சனி, 19 மார்ச், 2022

தமிழக தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தை தடை செய்க: நாராயணன் திருப்பதி

 மின்னம்பலம் : கர்நாடக மாநிலத்தில் பள்ளி மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடை செல்லும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த மார்ச் 15ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு ஆளும் கட்சியான பிஜேபி ஆதரவு அளித்தாலும், பெரும்பாலானவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதை எதிர்த்து நேற்று கர்நாடகாவில் முழு கடை அடைப்பு போராட்டத்தில் இஸ்லாமிய அமைப்புகள் ஈடுபட்டன.
அதற்கு முன்னதாகவே, இந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரி தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது.


சென்னை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், மதுரை உள்ளிட்ட சில இடங்களில் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தின.
அந்த வகையில் நேற்று மதுரையில் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது மத்திய அரசு மற்றும் கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், பயங்கரவாதத்தை பரப்பும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தை தடை செய்ய வேண்டும். இல்லையேல், மதவாத, பயங்கரவாத இயக்கத்தினால் ஏற்படும் பயங்கர விளைவுகளுக்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டி வரும் என்று பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “மோடியை கண்டும், யோகியை கண்டும், சாவை கண்டும் அமித் ஷாவை கண்டும் அஞ்சாத கூட்டம் இது. அல்லாஹ்விற்கு மட்டுமே அஞ்சுகிற கூட்டம் இது. நிறுத்தி கொள். நிறுத்தி கொள். எங்கள் பொறுமை குணம் மாறும் முன் நிறுத்தி கொள். பொறுமையை நாங்கள் இழந்து விட்டால், நீ இருக்க மாட்டாய்.

புரிந்து கொள் என்றும் உணர்ச்சி வசப்படுகிற மக்கள் இருக்கிறார்கள். இஸ்லாமியர்களின் நம்பிக்கைக்கு எதிராக நீதிபதிகள் தீர்ப்பு கொடுத்தால், உச்சநீதிமன்ற நீதிபதிகள் எங்காவது ஒரு பெரும் சம்பவத்திற்கு உள்ளாவார்களேயானால், ஏதாவது ஒரு விபத்து, ஏதாவது ஒரு அசம்பாவிதம், ஏதாவது ஒரு கொலை, போன்ற சம்பவத்திற்கு உள்ளாவார்களேயானால் அதற்கு தீர்ப்பு கொடுக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளே பொறுப்பு என்றும் நேற்று மதுரையில் நடைபெற்ற தமிழக தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டும், பேசப்பட்டும் உள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன், தமிழக தவ்ஹீத் ஜமாஅத் திட்டமிட்டுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி மறுக்க வேண்டும் என்று நான் கோரியிருந்த நிலையில், பிரதமரையும், உள்துறை அமைச்சரையும், உச்சநீதி மன்ற நீதிபதிகளையும் கொலை செய்வோம் என்று அந்த கூட்டத்தில் பேசப்பட்டும் தமிழக அரசும், தமிழக காவல்துறையும் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

மத அடிப்படைவாத சக்திகள் வெளிப்படையாக பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுப்பது தமிழகத்தின் சட்ட ஒழுங்கை, அமைதியை, மதநல்லிணக்கத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. நீதிபதிகளை கொலை செய்து விடுவோம் என்று இந்த இயக்கம் வெளிப்படையாக கூறியிருப்பது மத அடிப்படைவாத சக்திகளின் கோரமுகத்தை தமிழகத்தில் இயங்குகின்றன என்பதை வெளிப்படையாக காட்டுவதோடு, இந்த இயக்கங்கள் நீதியின் மீதும், ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கையின்றி தீவிரவாத, பயங்கரவாத பாதையில் வேகமாக சென்று கொண்டிருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

இப்போதே இந்த தீய சக்திகளை இரும்புக்கரம் கொண்டு அடக்காவிடில், விரைவில் பயங்கரவாதம் தமிழகத்தை மையம் கொள்ளும் என்பதை தமிழக அரசு உணர வேண்டும். தமிழக முதல்வர் மற்றும் தமிழக காவல்துறை, அந்த கூட்டத்தில் கொலை மிரட்டல் விடுத்த அடிப்படைவாத பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்களை கைது செய்ய உத்தரவிடுவதோடு பயங்கரவாதத்தை பரப்பும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தை தடை செய்ய வேண்டும். இல்லையேல், மதவாத, பயங்கரவாத இயக்கத்தினால் ஏற்படும் பயங்கர விளைவுகளுக்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டி வரும்” என்று தெரிவித்துள்ளார்.

-வினிதா

கருத்துகள் இல்லை: