புதன், 12 ஜனவரி, 2022

தென் தமிழக தொழில் வளர்ச்சிக்கு பிரேக்: மெகா நிலவேட்டைக்காரரா கிருஷ்ணப்பிள்ளை?

தென் தமிழக தொழில் வளர்ச்சிக்கு பிரேக்: மெகா நிலவேட்டைக்காரரா கிருஷ்ணப்பிள்ளை?
மின்னம்பலம் : தமிழ்நாட்டின் தூத்துக்குடி. கன்னியாகுமரி மாவட்டங்களில் காற்றாலை மின்சார ஆலைகள் இயங்குவதற்கு ஏற்ற நிலப்பரப்புகள் அதிகம் இருக்கின்றன.
ஆனால் சமீப காலமாக இம்மாவட்டங்களில் காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்யும் ஆலைகளில் முதலீடு செய்ய பல நிறுவனங்கள் தயங்குகின்றன என்றும், இங்கிருந்து வட இந்தியாவுக்கு சென்றுவிடுகிறார்கள் என்றும் தொழில் துறை வட்டாரங்களில் கூறுகிறார்கள்.
காற்றாலை மின் ஆலைகளுக்கு இங்கே என்ன பிரச்சினை? அவர்கள் ஏன் வெளிமாநிலங்களைத் தேடி ஓடுகிறார்கள் என்பதற்கும், திருநெல்வேலியைச் சேர்ந்த தொழிலதிபர் வளன் குமார் ஒரு குறிப்பிட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில்  போட்ட ரிட் மனுவுக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது.

இதுகுறித்து திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் வளன்குமாரிடமே பேசினோம்.

“நான் தென் மாவட்டங்களில் அமைந்துள்ள காற்றாலை மின்சார நிலையங்களுக்கு மெட்டீரியல்ஸ் சப்ளை செய்து வருகிறேன். எனவே இத்தொழிலைப் பற்றி எனக்கு நன்கு தெரியும். கடந்த சில பத்தாண்டுகளில் வெளிநாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களை விட்டு வேறு வேறு மாநிலங்களைத் தேடி ஓடுகிறார்கள். இதற்குக் காரணம் இங்கே பல ஆண்டுகளாக நடந்த நில மோசடிகள்தான்”என்றவரிடம், “விரிவாகச் சொல்லுங்கள்”என்றோம்.

“பிஏசிஎல் என்ற பப்ளிக் லிமிடெட் நிறுவனம் 1996 இல் வட இந்திய இயக்குனர்களால் தொடங்கப்படுகிறது. பொதுமக்களிடம் இருந்து பங்குகளைப் பெற்று அதன் மூலம் ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுப்பதற்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை இந்த நிறுவனம் தூத்துக்குடி மாவட்டத்தில் வாங்குகிறது. இந்தியா முழுதும் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் நிலங்களை இந்த நிறுவனம் வாங்குகிறது.

சென்னையிலும் நிறைய இடங்களை இந்த நிறுவனம் வாங்கியிருக்கிறது. தூத்துக்குடியிலும் ஏக்கர் 5 ஆயிரம் போன்ற அப்போதைய விலையில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை இந்த நிறுவனம் வாங்குகிறது. ஒரு கட்டத்தில் இந்த கம்பெனி ஷேர் ஹோல்டர்களுக்கு இடையிலான பிரச்சினைகளால் கொலாப்ஸ் ஆகிறது. இந்த விவகாரத்தில் சிபிஐ இந்த கம்பெனியின் சொத்துகளை பறிமுதல் செய்தது. வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு சென்றது. பொதுமக்களை ஏமாற்றி விட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் இந்த நிறுவனத்தின் மொத்த நிலங்களும் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி லோதா தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு கமிட்டியின் நிர்வாகத்தில் கொண்டுவரப்பட்டது. இந்த லோதா கமிட்டி ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தை, இந்த பொது லிமிடெட்டில் முதலீடு செய்த பொதுமக்களுக்கு திரும்பக் கொடுக்க வேண்டும் என்று 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.

இந்தியா முழுக்க இருக்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களையும் கையாள வேண்டிய பொறுப்பு லோதா கமிட்டிக்கு இருக்கிறது. அதனால் ஒட்டுமொத்த நிலங்களையும் கண்காணித்து கவனிக்க முடியவில்லை.

இந்த சூழலில்தான் தூத்துக்குடியில் அந்த அட்டகாசம் ஆரம்பிக்கிறது. அந்த நிறுவனத்தின் பேரில் உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை மறைத்து... அந்த நிறுவனத்தின் வட இந்திய இயக்குனர்களின் பெயரில் போலி ஆவணங்கள் தயார் செய்து, தூத்துக்குடியில் குல்ஃபி விற்கும், பானிபூரி விற்கும் வட இந்திய இளைஞர்களுக்கு நிறுவன அதிகாரிகள் போல மேக்கப் போட்டு பதிவாளர் அலுவலகம் அழைத்துச் சென்று லோக்கலில் ஒரு நபர் மீது பவர் வாங்குவது. அந்த பவரை இன்னொரு கம்பெனி பேரில் ரிஜிஸ்டர் செய்ய வேண்டியது. சில மாதங்களில் அந்த நிலத்தை காற்றாலை நிறுவனம், சோலார் நிறுவனங்களுக்கு பல லட்சங்களுக்கு விற்றுவிட வேண்டியது. மோசடி ஆவணங்கள், மோசடி முகவரி ஆவணம் இப்படி உச்ச நீதிமன்ற நீதிபதி லோதா கமிட்டியின் கண்காணிப்பில் இருந்த நிலங்களே மோசடியாக விற்கப்பட்டுள்ளன.

நான் காற்றாலை மின் நிலையங்களுக்கு மெட்டீரியல்ஸ் சப்ளை செய்யும் தொழில் செய்கிறேன். என் அனுபவத்தில் இப்படி மோசடி ஆவணங்களை நம்பி நிலங்களை நம்பி ஏமாந்து போன காற்றாலை மின் நிலையங்கள் பல உற்பத்தியை நிறுத்தியுள்ளன. இதனால் என் தொழிலும் பாதிக்கப்படுகிறது. இது ஏன் என்று ஒன்றரை வருடமாக நான் ஆராய்ந்தபோதுதான் இந்த மெகா நில மோசடியை கண்டுபிடிக்க முடிந்தது.

அதை விட அதிர்ச்சி என்னெவென்றால் இப்படிப்பட்ட நில மோசடிகள் மூலம் பல பன்னாட்டு நிறுவனங்களை ஏமாற்றியவர் கிருஷ்ணப்பிள்ளை என்ற கல்லூரி அதிபர் என்ற தகவல் கிடைக்கிறது. உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழுவின் கண்காணிப்பில் இருந்த நிலங்கள் சுமார் 1400 ஏக்கர் நிலத்தை இதுபோல போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்திருக்கிறார் கிருஷ்ணப்பிள்ளை என்பதை ஆவணங்கள் மூலம் கண்டுபிடித்தேன். திருநெல்வேலி மாவட்டம் லெவிஞ்சிபுரத்தில் உள்ள கேப் தொழில்நுட்ப கல்லூரியின் தலைவர் தான் கிருஷ்ணப்பிள்ளை. முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா கமிட்டியின் கட்டுப்பாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுமார் 1,400 ஏக்கர் நிலத்தில் எஸ்பி இன்ப்ராஸ்ட்ரக்சர்ஸ் மற்றும் அரினா சோலார் கம்பெனி ஆகிய நிறுவனங்களுக்கு விற்பனை செய்த சுமார் 700 ஏக்கர் நிலங்கள் போக மீதமுள்ள நிலங்கள் கிருஷ்ண பிள்ளையின் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான கேப் இன்ப்ராஸ்ட்ரக்சர்ஸ், கேப் எனர்ஜி, கிருஷ்வா பவர் லிமிடெட் மற்றும் அவர்களுக்கு நெருக்கமான நபர்களான சரவணன், குமார் ஆகியோர் பெயரில் உள்ளது. பல ஏக்கர் நிலங்களை போர்ஜரி ஆவணங்கள் மூலம் பரிவர்த்தனை செய்திருக்கிறார்கள் கிருஷ்ணப்பிள்ளை மற்றும் அவரது மகன் ஐயப்பா என்கிற கார்த்திக் ஆகியோர்.

இதை தமிழக போலீஸார் விசாரிப்பதை விட சிபிஐ விசாரிப்பதே சிறப்பாக இருக்கும் என்று 2021 ஜூன் மாதத்தில் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தேன். முதலில் மதுரை உயர் நீதிமன்றம், ‘ நீங்கள் ஏன் சிபிஐ விசாரணையை கோருகிறீர்கள்? தமிழக போலீஸ் விசாரித்தால் என்ன என்று கேட்டு என் மனுவை தள்ளுபடி செய்தது.

பின் இதை சிபிஐ விசாரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து மீண்டும் ஒரு மனுவை மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தேன். ‘தமிழ்நாடு போலீஸ் மீது நம்பிக்கை இல்லாமல் சிபிஐ விசாரணை கோரவில்லை. ஏற்கனவே பி.ஏ. சி.எல் நிறுவன வழக்கு சிபிஐ விசாரணையில் இருக்கிறது. அதனால் அந்த நிறுவனம் தொடர்பான நில மோசடி என்பதால் சிபிஐ விசாரணை நடத்துவதே சிறந்ததாக இருக்கும்’ என்று அந்த மனுவில் குறிப்பிட்டேன். அப்போது கிருஷ்ணப்பிள்ளையின் மோசடி பற்றிய ஆவணங்களை நீதிமன்றத்திடம் ஒப்படைத்தேன். இதுகுறித்து சிபிஐக்கு டைரக்‌ஷன் கொடுக்க உயர் நீதிமன்றம் முடிவு செய்த நிலையில்... கிருஷ்ணபிள்ளைக்காக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி.குமார் ஆஜரானார்.

இந்த வழக்கில் கடந்த 2021 அக்டோபர் மாதம் சிபிஐ தாக்கல் செய்த பதில் மனுவில், ‘சிபிஐ கடந்த 14-5-2018 அன்றே தமிழ்நாடு அரசின் வருவாய் துறையின் முதன்மைச் செயலாளருக்கு, ’பிஏசில் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் நிலங்கள் தற்போது நீதிபதி லோதா கமிட்டியின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில்... அந்த நிலங்களை லோதா கமிட்டியின் அனுமதி இல்லாமல் வேறு நபர்களுக்கு பரிமாற்றம் செய்ய அனுமதிக்கக் கூடாது’என்று கடிதம் எழுதியிருக்கிறது.

இந்த வகையில் லோதா கமிட்டியின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்கள் வேறு பெயர்களுக்கு மாற்றப்பட்டிருந்தால் மாநில அரசே முழு நடவடிக்கை எடுக்கலாம். மாநில அரசே இதில் புலனாய்வு செய்யலாம்’என்று பதிலளித்திருக்கிறது. ஆனால் நாங்கள் இந்த விவகாரத்தை சிபிஐயே விசாரிக்க வேண்டும் என்று தொடர்ந்து வாதாடி வருகிறோம். இந்த வழக்கு மதுரை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது”என்று மூச்சு முட்ட விளக்கம் கொடுத்த வளன் குமார் தொடர்ந்தார்.

“இவ்வளவு பெரிய நிலமோசடியை மேற்கொண்டிருக்கும் கிருஷ்ணபிள்ளையால் தனி நபர்கள் முதல் தென் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி வரை பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தியின் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளோம். இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்ய குழு அமைக்கப்படும் என்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். இந்த பிஏசிஎல் நிலம் மட்டுமல்ல, வேறு பல நிறுவனங்களையும் மோசடியான நில பரிவர்த்தனைகள் மூலம் கிருஷ்ணப்பிள்ளை ஏமாற்றியுள்ளார். இதேபோல பட்டா இல்லாத நிலங்களை எல்லாம் கான்வேல்டு (CONVALT) என்ற நிறுவனத்துக்கு விற்பனை செய்துகொடுத்து அதன் பின் ஏற்பட்ட சட்ட சிக்கல்களால் அந்த நிறுவனம் தூத்துக்குடி மாவட்டத்தில் காற்றாலையை தொடங்கவே முடியவில்லை.

எவர்கிரீன் என்ற எரி சக்தி நிறுவனம் தன்னை ஏமாற்றியதாக கிருஷ்ணப்பிள்ளை மீது வழக்குத் தொடுத்துள்ளது. அதில் உச்ச நீதிமன்றம் சென்று ஜாமீன் வாங்கி இப்போது ஜாமீனில்தான் வெளியே இருக்கிறார் கிருஷ்ணப்பிள்ளை. இவர் மீது எடுக்கப்படும் நடவடிக்கையில்தான் தென் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி இருக்கிறது”என்று முடித்தார் வளன்.

நம்மிடம் பேசிய தென் மாவட்ட சமூக ஆர்வலர்கள், “கிருஷ்ணப்பிள்ளை என்பவர் தனி மனிதர் அல்லர். இவர் பின்னால் கடந்த பத்தாண்டுகளாக பெரும் கூட்டமே இருந்திருக்கிறது. உச்ச நீதிமன்ற நீதிபதி லோதா தலைமையிலான கமிட்டியின் கண்காணிப்பில் இருக்கும் 1,400 ஏக்கர் நிலங்களுக்கு போலி ஆவணம் மூலம் பதிவு செய்வதற்கு மிகப்பெரிய துணிச்சல் வேண்டும். பதிவுத் துறையின் உயரதிகாரிகள் துணையில்லாமல் இது நடந்திருக்க முடியாது.

2018 ஆம் ஆண்டில்தான் சிபிஐ தமிழக வருவாய் துறை முதன்மைச் செயலாளருக்கு லோதா கமிட்டியின் அனுமதி இல்லாமல் அந்த நிலங்களை விற்கக் கூடாது என்று கடிதம் எழுதியிருக்கிறது. ஆனால் அந்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகி மதுரை நீதிமன்றத்தில் வழக்கை சந்தித்து வரும் கிருஷ்ணப்பிள்ளை கடந்த ஆட்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளார். தென் மண்டல போலீஸ் ஐஜி அன்புவுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டுள்ளார். எனில் இவரது அரசியல் பின்புலத்தையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

மேலும் கிருஷ்ணப்பிள்ளைக்கு முக்கூடல், ஊத்துமலை, சுரண்டை, கங்கைகொண்டான் ஆகிய பதிவாளர் அலுவலகங்கள்தான் ஃபேவரைட். எந்த பகுதியில் நிலங்களை பரிவர்த்தனை செய்தாலும் அந்த லிமிட்டில் இருக்கும் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யாமல் மேற்குறிப்பிட்ட பதிவாளர் அலுவலகங்களில்தான் பதிவு செய்வார். இந்த பதிவாளர் அலுவலகங்களில் இவர் நடத்திய பரிவர்த்தனைகளை விசாரணைக்கு உட்படுத்தினாலே பல விஷயங்கள் கிடைக்கும்.

தற்போதைய தொழில் துறை

கருத்துகள் இல்லை: