திங்கள், 10 ஜனவரி, 2022

ஓபன்னீர்செல்வம் மீதும் மகன் ரவீந்திரநாத் மீதும் வழக்குப்பதிவு!

 மின்னம்பலம் : அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது மகனும் எம்.பி.யுமான ரவீந்திரநாத் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட ரவீந்திரநாத் மற்றும் போடி தொகுதியில் போட்டியிட்ட ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் வேட்புமனுவில் சொத்து விபரங்களை மறைத்து தவறான தகவல்களை அளித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக தேனி மாவட்ட திமுக முன்னாள் இளைஞரணி செயலாளர் மிலானி என்பவர் தேனி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

அதில், 2019 தேர்தலின்போது ரவீந்திரநாத் எம்பி. தாக்கல் செய்த வேட்பு மனுவுடன் கூடிய பிரமாண பத்திரத்தில் அவர், தனது சொத்து உள்ளிட்ட விவரங்களைத் தவறாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதுபோன்று 2021 தேர்தலுக்குத் தாக்கல் செய்த வேட்பு மனுவில் ஓ பன்னீர் செல்வமும் தவறாக குறிப்பிட்டுள்ளார். அவர் தாக்கல் செய்த தேர்தல் அறிக்கையில் வங்கியில் கடனாக வாங்கப்பட்ட பண கணக்குகளும் தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட கணக்குகளும் மற்ற விவரங்களும் தவறாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கில் தேனி நடுவர் குற்றவியல் நீதிமன்றம் ஓபிஎஸ் மற்றும் ரவீந்திரநாத் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தவும், விசாரணை அறிக்கையைப் பிப்ரவரி 7ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவின்படி நேற்று (ஜனவரி 9) ஓபிஎஸ் மற்றும் ரவீந்திரநாத் மீது தேனி மாவட்டம் குற்றப்பிரிவு போலீசார், இபிகோ 156(3) பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: