வெள்ளி, 9 ஜூலை, 2021

சேப்பாக்கம் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது எப்படி? - உதயநிதி ஸ்டாலின் MLA விளக்கம்!

kalaignarseithigal - Janani : சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி சார்பாக ஏழை எளிய மாணவர்கள் கல்வி உதவித்தொகை டெகான் அறக்கட்டளை சார்பில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். அதனை தொடர்ந்து லேப்டாப், டேப் உள்ளிட்ட பொருட்களை மாணவர்களுக்கு கல்வி பயில உதவியாக வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சிற்றரசு, பகுதி செயலாளர்கள் காமராஜ், மதன்மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

உதயநிதி ஸ்டாலின் மேடைப்பேச்சு:-

முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், பொறுப்பேற்ற நாள் முதல் தொகுதியின் அனைத்து பகுதிகளுக்கு சென்று வருகிறேன். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் 100 மனுக்கள் வந்தால் அதில் 60 மனுக்கள் கல்வி உதவித்தொகை தொடர்பாக வருகிறது.

இந்த தொகுதியில் பெறப்படும் மனுக்கள் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்ற பிறகு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெறவில்லை. எனவே இந்த கூட்டத்தை நன்றி தெரிவிக்கும் கூட்டமாக நினைத்து திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

வருங்காலத்திற்கு எப்படி கல்வி முக்கியமோ அது போன்று கொரோனாவை வெல்வதற்கு தடுப்பூசி முக்கியம். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசு அதிகமான தடுப்பூசி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்க சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் எப்போதும் திறந்து வைத்திருக்கும் என பேசினார்.

உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு:-

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், தமிழக அரசுக்கு உரிமை உள்ளது என்பதுதான் எங்களின் எண்ணம். நீட் வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து அமைக்கப்பட்டுள்ள குழுவல்ல நீட் தேர்வினால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய்வதற்காக நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பிலும் நீட் தேர்வினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மனு அளித்துள்ளோம். திமுக தேர்தல் அறிக்கையிலும் நீட் தேர்வு குறித்து தெரிவித்திருந்தோம். மாணவர்கள், பெற்றோர்களுக்கு குழப்பத்தை உருவாக்க விரும்பவில்லை. நீட் தேர்வு குறித்து விரைவில் முதலமைச்சர் நல்ல முடிவை அறிவிப்பார்.

தடுப்பூசி தட்டுப்பாடு இருக்கும் போது, சேப்பாக்கம் தொகுதியில் மட்டும் எப்படி செலுத்துகிறார்கள் என்று யாரோ தேவையில்லாத செய்திகளை பரப்புகின்றனர். பல தனியார் மருத்துவமனைகள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் இந்த தொகுதிக்கு மருந்துகளை அளித்து வருவதாக கூறினார். மேலும் தடுப்பூசியை பெற்றுத்தர முடியாதவர்கள் தான் இதுபோன்று பேசி வருவதாக கூறினார்.

பின்னர் காயத்ரி - கமலகண்ணன் என்பவரின் பெண் குழந்தைக்கு கலையரசி என உதயநிதி ஸ்டாலின் பெயர் சூட்டினார்.

கருத்துகள் இல்லை: