புதன், 7 ஜூலை, 2021

ஒன்றிய அரசுப் பணிகளுக்கு பொதுத் தகுதித் தேர்வு! 22 ஆம் ஆண்டுமுதல்

 மின்னம்பலம் : 2022ஆம் ஆண்டு முதல் மத்திய அரசுப் பணிகளுக்கு பொதுத் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
குடிமைப் பட்டியல் 2021 எனப்படும் ஐஏஎஸ் அதிகாரிகள் குறித்த மின் புத்தகத்தை நேற்று (ஜூலை 6) பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளி துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் வெளியிட்டார்.
அப்போது பேசிய அவர், மத்திய அரசுப் பணிக்கு இளைஞர்களைத் தேர்வு செய்யும் முறையை எளிமைப் படுத்துவதற்காக பொது தகுதித் தேர்வு நடத்தப்படும்.
இந்த சீர்திருத்தம் என்பது இளைஞர்கள் மீது பிரதமர் மோடி வைத்திருக்கும் அக்கறையின் பிரதிபலிப்பாகும். நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்குச் சமமான வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்காக இந்த முறை கொண்டு வரப்படுகிறது. பொது தகுதித் தேர்வை நடத்துவதற்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுடன் தேசிய ஆட்சேர்ப்பு முகமை அமைக்கப்பட்டுள்ளது.



மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், ரயில்வே தேர்வு வாரியம் மற்றும் வங்கி பணியாளர் தேர்வாணையம் ஆகியவற்றால் அரசுத் துறைகளுக்கு நடத்தப்படும் தேர்வுகளுக்குப் பதிலாக பொது தகுதித் தேர்வைத் தேசிய ஆட்சேர்ப்பு முகமை நடத்தும்.

இந்த சீர்திருத்தத்தின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு தேர்வு மையம் அமைக்கப்படும். இது தொலைதூர பகுதிகளில் வாழும் தேர்வர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறினார். .-பிரியா

கருத்துகள் இல்லை: