புதன், 7 ஜூலை, 2021

முடிதிருத்தும் பட்டதாரி பெண் சீதா தங்கவேலு

May be an image of 5 people, beard, people sitting and indoor
May be an image of 2 people

பாண்டியன் சுந்தரம்  : சரியாக பத்து ஆண்டுகளுக்கு முன்பு இதுதான் நிலை.
அவர் முதலில் கத்தரிக்கோலையும் கத்தியையும் தன் கைகளில் எடுத்தபோது,
​​எந்த மனிதனும் சுழலும் நாற்காலியில் உட்கார்ந்து தன்னுடைய தலை அல்லது கன்னங்களை அவருக்குக் காட்ட மாட்டான்.
அதற்குப் பதிலாக, 'உங்கள் தந்தை எங்கே, எப்போது திரும்பி வருவார்?'என்று அவர்கள் கேட்பார்கள்.
கோவைக்கு அருகிலுள்ள பல்லடம் என்ற சிறிய நகரத்தில் உள்ள சிறிய தங்கம் டீலக்ஸ் கடைக்கு வந்த ஆண்கள் அவரை ஏளனம் செய்வார்கள்.
சிலர் கடைக்குள் அவரைப் பார்க்கும் தருணத்தில் அந்த இடத்தை விட்டே வெளியேறுவார்கள்.
ஆனால் இப்போது, ​​புவனேதேவி சிகை அலங்காரக் கடைக்கு வெளியே ஒரு நீண்ட வரிசை காத்துக் கிடக்கிறது.
ஏனென்றால் அவர் உள்ளே இருக்கிறார்... தேவி தங்கவேலு! தனது 20 வயதுகளின் பிற்பகுதியில், பல்லடத்தில் இந்த நாட்களில் மிகவும் விரும்பப்பட்ட முடிதிருத்தும் நிபுணர்  இவர். 20 அடிக்கு 20 அடி புவனேதேவி முடி திருத்தும் கடையில் 2 சுழலும் நாற்காலிகளும், மற்றும் 4 நெகிழி நாற்காலிகளும் எல்லா நேரங்களிலும் இப்போது நிரம்பி வழிகின்றது....


ஞாயிற்றுக்கிழமைகளில், பல்லடத்தில் குறைந்தது 50 இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் 'அஜித் சிகை அலங்காரம்' மற்றும் 'சிங்கம் சூர்யா ஸ்டைல்' ஆகியவற்றிற்காக அவரது சலூன் கடைக்கு வருகை தந்து காத்துக்கிடத்தல் உண்டு.

தேவி தனது குடும்பத்தை, பொருளாதார கஷ்டத்திலிருந்து காப்பாற்ற தனது தந்தையின் தொழிலை, தன் கைகளில் ஏந்திக்கொண்டபோது முதலில் அனைவராலும் கேலி செய்யப்பட்டார். பல்லடத்தில் ஆண்களும் பெண்களும் தங்கள் மகளை ஒரு ஆணின் வேலையைச் செய்ய அனுமதித்ததற்காக அவரது பெற்றோரை திட்டித் தீர்த்தனர்.

“நான் பத்து வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்தபோது, ​​ஒரு மனிதர் கூட எங்கள் கடைக்கு வரமாட்டார். நானும் என் தந்தையும் அந்த நாட்களில் சும்மாவே உட்கார்ந்திருப்போம். நான் முடி வெட்டவும், ஷேவிங் செய்யவும் ஆரம்பித்ததும் எனது தந்தையின் வழக்கமான வாடிக்கையாளர்கள் கூட வராமல் விலகிவிட்டார்கள் ”என்று தேவி அந்தக்காலத்தை நினைவு கூர்ந்தார்.

தேவி ஒரு பி.காம் பட்டதாரி. திருப்பூரில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் வெளிநாட்டு வர்த்தகம் முக்கிய படிப்பாக உள்ளது. அதில் தேவி தனது பட்டப்படிப்பை முடித்தபோது, ​​மற்ற பெண்களைப் போலவே அவரும் ஒரு மதிப்புமிக்க வேலையைப் பார்க்கவே விரும்பினார்.
ஆனால் ஒரு அதிர்ஷ்டமான அல்லது துரதிர்ஷ்டவசமான நாளில் எல்லாம் மாறிவிட்டது. ஒரு வாடிக்கையாளர் வந்து அவருக்கு பாதி சவரம் பண்ணிக் கொண்டிருந்த போது, அவரது தந்தை தாழ் சர்க்கரை நிலையால் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்.தேவி விரைவாகத் தந்தையின் வாயில் சீனியைக் கொட்டி, அவரை நிலைக்குக் கொண்டு வந்து விட்டு அதே வினாடி, தனது தந்தையின் காலணிகளுக்குள் நுழைந்து, தனது தந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்கு முன்பு, ஷேவிங் முடிக்க முகம் மழிக்கும் கத்தியைப் பிடித்தார். "நான் உதவியற்றவளாக திக்குத் தெரியாத காட்டில் விட்டது போல் அப்போது நின்றேன். ஆனால் விரைவாக என் புத்திசாலித்தனம் விழித்துக் கொண்டது. உபயோகித்துப் பாதி முடிக்கப்பட்ட வேலையை முடிக்க கத்தியை முதன் முதலில் எடுத்தேன்" என்று தேவி சொன்னார்.

சில மாதங்களுக்குள், தேவி தனது தந்தையுடன் சேர்ந்து, தொழிலைக் கற்றுக்கொண்டு விட்டார். தேவியின் தந்தை தங்கவேலு மேலும் அதிக நோய்க்கு ஆளானபோது, ​​குடும்பம் பொருளாதார ரீதியாக மிகுந்த சிரமத்துக்கு உள்ளானது. தினமும் காலையில் தேவி தனது புதிய கணக்காளர் வேலைக்குப் புறப்படுவார். இது அவருக்கு ஒரு மாதத்திற்கு ரூ.3000 தந்தது.பின்னர் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கத்தரிக்கோல் மற்றும் கத்திகளுடன் தனது தந்தையின் வாடிக்கையாளர்களுக்கு  சலூனில் வேலை செய்யத் துவங்கினார்.

"என் மூத்த சகோதரர் இறந்த போது நாங்கள் பட்டபாடு கொஞ்ச நஞ்சமில்லை. கடன்பட்டிருந்த நாட்கள் அவை. என் தந்தையும் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் குடும்பத்தை  நகர்த்தவே முடியவில்லை.அந்த நாட்களில்  என்னை ஒரு நாளைக்கு ஒரு வாடிக்கையாளர் கூட திரும்பிப் பார்க்காமல் கூட இருந்திருக்கிறார்கள். விளக்குகள் எரிய, கைகளில் கத்தி மற்றும் கத்தரிக்கோலுடன் நான் காத்திருப்பேன். ஆனால் யாரும் வரவே மாட்டார்கள்"...இருப்பினும், தேவி அசரவில்லை.
இப்போது, ​​10 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் தனது சொந்த சலூன் புவனேதேவி முடி திருத்தகக்கடையை  அமைத்து விட்டார். பெயர் அவரது தம்பியின் முதல் பெயர் மற்றும் அவரது பெயரின் கலவையாகும். இப்போது, ​​பல்லடம் அரசு மருத்துவமனை மற்றும் பேருந்து நிலையம் அருகே மிகவும் நெரிசலான இடத்தில் முடிதிருத்தகத்தை தேவி வைத்திருக்கிறார். அவர் ஒரு நாளைக்கு 20 வாடிக்கையாளர்களுக்கும் குறையாது வேலை பார்க்கிறார்.

ஞாயிற்றுக்கிழமைகளில் எண்ணிக்கை 50 ஐத் தாண்டி விடும். “2013 ஆம் ஆண்டு, என் தந்தை நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையான பிறகு நான் எனது சொந்தக் கடையை அமைத்தேன். அதன்பிறகு அப்பா உடல்நிலை தேறி எழுந்து வந்தார். இப்போது நானும் என் தந்தையும் சேர்ந்து கடையை கவனித்துக்கொள்கிறோம், ”என்கிறார் தேவி.
அவர் எந்தவொரு தொழில்முறை பயிற்சியும் பெறவில்லை. “குழந்தை பருவத்திலிருந்தே நான் என் ஓய்வு நேரத்தை என் தந்தையின் கடையில் கழித்தேன்.அவர் வேலை செய்வதைக் கவனித்தேன். அவர் ஒருவரின் கன்னங்களில் நுரை தடவுவதைப் பார்ப்பது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் தனது இடது உள்ளங்கையில் கத்தியைத் தேய்த்து பின்னர் ஷேவ் செய்வார். அவரைப் பார்ப்பது உற்சாகமாக இருந்தது. ஆனால் ஒரு நாள் நான் அவருக்குப் பின் வருவேன் என்று  நினைத்துப் பார்த்தது கூட இல்லை, ”என்று அவர் மேலும் கூறுகிறார்.
 

ஒரு வருடம் காத்திருப்பு மற்றும் போராட்டத்திற்குப் பிறகு, தேவி தனது தொழிலைத் தேர்ந்தெடுப்பது குறித்து இன்னும் உறுதியாக இருந்தார்.மேலும் ஆண்கள் மற்றும் குழந்தைகள் அவருடைய கடைக்கு வரத் தொடங்கினர். குறிப்பிட்டபடி முடி மற்றும் முக மழிக்கும் பாணிகளுக்கான கோரிக்கைகள் வந்தன. இப்போது, ​​தேவி பல்லடத்தில் மிகவும் விரும்பப்படும் முடிதிருத்துனராக நகர் முழுக்க வாடிக்கையாளர்கள் நிறைய கொண்டவராக விளங்குகிறார்...
இதற்கிடையில், புவனேதேவி முடி திருத்தகக் கடையில் காதல் மலர்ந்தது. தனது முகநூல் பக்கத்திலிருந்து தேவியைப் பற்றி அறிந்த சேகர், கடைக்கு அடிக்கடி வரத் தொடங்கினார். “அவர் எனது வாடிக்கையாளர். முடி வெட்டுவதற்கும் ஷேவிங் செய்வதற்கும் அவர் ஒவ்வொரு வாரமும் எனது சலூனுக்கு வருவார். முடி திருத்த மட்டுமல்ல, என்னைச் சந்தித்து அரட்டையடிக்கவும் காலப்போக்கில் வரத் தொடங்கினார். பின் நடந்தேறியது எங்கள் காதல் திருமணம், ”என்று வெட்கப்பட்ட புன்னகையுடன் காதல் வயப்பட்ட கதையைச் சொல்கிறார் தேவி.
 

தேவிக்கு  45 நாட்கள்வரை ஒரு ஆண் குழந்தை பிறந்து இருந்தபோது, கடைக்கு  வர முடியவில்லை. இது தங்களது வாடிக்கையாளர்களை மிகவும் வருத்தப்படுத்தியதோடு, திரும்பப் போகவும் வைத்தது என்று அவரது தந்தை கூறுகிறார்: “அவர்கள் அவளையே எங்கே என்று கேட்கிறார்கள். ஆனால் நான் வருபவர்களுக்கு முடி திருத்த, முகம் மழிக்க  முயற்சி செய்வேன். நீங்கள் செய்வதைவிட உங்கள் மகள் இன்னும் நன்றாக முடி திருத்தி விடுவார். அவர் வரட்டும் என்று சொல்லி பலர் திரும்பியே போய்விடுவார்கள். பிறகு தேவி வரும் வரை காத்திருந்து முடிவெட்ட வருவார்கள்"
ஆணுக்குப் பெண் இங்கே இளைப்பில்லை காண் என்பதற்கு உதாரணமாக பட்டதாரியாக இருந்தாலும்
தன் தந்தையின் தொழிலில் பட்டொளி வீசிப் பறக்கிறார் தேவி....வாழ்த்துகள்
!

கருத்துகள் இல்லை: