மின்னம்பலம் : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் கூட்டத்தை கூட்டியிருந்தார். இந்தக் கூட்டத்தில் மாநில நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
ராமதாஸின் மகன் அன்புமணியும் அவரது ஆதரவாளர்களும் ஒட்டுமொத்தமாக இந்தக் கூட்டத்தை புறக்கணித்துவிட்டனர். மேலும் வன்னியர் சங்கத்தின் தலைவராக பேரன் முகுந்தனை நியமிக்கும் திட்டமும் தவிடுபொடியானதால், பாமக கையைவிட்டுப் போய்விட்டதே என ராமதாஸ் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளாராம்.
அப்படி என்னதான் இன்றைய பாமக கூட்டத்தில் நடந்தது?
பாமக கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் நம்மிடம் கூறுகையில், 102 மாவட்டங்களில் 12 மாவட்ட செயலாளர்கள், 10 மாவட்டத் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இவர்களுடன் மாநில நிர்வாகிகள் 8 பேர், அணி பொறுப்பாளர்கள் 28 பேர் என சுமார் 60-க்கும் மேற்பட்டவர்கள்தான் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் ராமதாஸ், கவுரவத் தலைவர் ஜிகே மணியை அழைத்து, ஏன் யாரும் வரலையே? என கேட்டிருக்கிறார். இதற்கு, எல்லோருக்கும்தான் அழைப்பு விடுத்தோம் அய்யா என மணி பதில் தந்த உடனே, மறுபடியும் போனை போடுங்க என கூறியதுடன் தம்முடைய பிஏவையும் அழைத்து நீங்களும் போன் போட்டு பேசுங்க என சொல்லி இருக்கிறார்.
தைலாபுரம் தோட்டத்தில் இருந்து ஜிகே மணி, ராமதாஸ் பிஏ ஆகியோர் இடைவிடாத முயற்சித்த போதும் பாமக மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் பலர் போனை அட்டென்ட் செய்யவே இல்லையாம்; சிலரது செல்போன்கள் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தனவாம்.
இந்த தகவல் ராமதாஸுக்கு சொல்லப்பட அவர் ரொம்பவே விரக்தி அடைந்துவிட்டாராம். இதனைத் தொடர்ந்து கூடியிருந்த சொற்பமான நிர்வாகிகளிடம், நீங்கள் யாரும் எதைப் பற்றியும் கவலைப்படாதீங்க.. என்னை எப்போதும் போல சந்திக்கலாம். என்னை சந்திக்க யாரும் குறுக்க இருக்கமாட்டாங்க.. உங்களுக்காக இந்த தைலாபுரம் தோட்டத்து கதவு திறந்தே இருக்கும் என்று சொல்லிவிட்டு செய்தியாளர்களை சந்திக்கப் போய்விட்டாராம் ராமதாஸ்.
பாமக மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் கூட்டம் என்று அறிவித்திருந்தாலும் மாநில நிர்வாகிகள், அணி பொறுப்பாளர்கள் என பலரையும் ராமதாஸ் அழைத்ததே, அறிவிக்கப்படாத பொதுக்குழுவை இன்று எப்படியும் நடத்திவிட வேண்டும்; அதில் அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்குவதற்கு ஒப்புதல் பெற்றுவிட வேண்டும் என்பதுடன் பேரன் முகுந்தனை, வன்னியர் சங்கத்தின் புதிய தலைவராகவும் அறிவிக்க வேண்டும் என்பதற்காகத்தானாம். ராமதாஸின் இந்தத் திட்டத்தை அன்புமணி, செல்போன் மிஸ்டு கால் மூலமாகவே தவிடுபொடியாக்கிவிட்டார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
அது என்ன செல்போன் மிஸ்டு கால் திட்டம்? என நாம் அன்புமணி ஆதரவாளர்களிடம் கேட்ட போது, இன்றைய ராமதாஸின் கூட்டத்துக்கு யாரும் போய்விடக் கூடாது என்பதற்காகவே நேற்று இரவே அனைத்து பாமக மாவட்ட தலைவர்கள், செயலாளர்களுக்கு அன்புமணி உதவியாளர்களிடம் இருந்து போன் மூலமாக தகவல் போயிருக்கிறது; அந்த தகவலில், அன்புமணியின் செல்போனில் இருந்து மிஸ்டு கால் வந்தால் யாரும் கூட்டத்துக்கு போகக் கூடாது என சொல்லப்பட்டிருந்ததாம். இதனைத் தொடர்ந்து நேற்று மாலை முதல் இரவு வரை பாமகவின் மாவட்ட தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஒருவரைக் கூட விட்டு வைக்காமல் அனைவருக்கும் அன்புமணியின் செல்போனில் இருந்து மிஸ்டு கால் போனதாம். இதனால்தான் அவரது ஆதரவாளர்கள் ஒட்டுமொத்தமாக, இன்றைய ராமதாஸின் அறிவிக்கப்படாத பொதுக் குழுவுக்கு போகவும் இல்லை என்கின்றனர்.
தற்போதைய நிலையில் தாம் உருவாக்கிய பாமக, தமது கைகளை விட்டுப் போய்விட்டதே என்கிற விரக்தியில் ராமதாஸும், பாமகவை முழுவதுமாக தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டோம் என்கிற நிம்மதியில் அன்புமணியும் இருப்பதுதான் நிலவரம் என டைப் செய்துவிட்டு Sent மெசேஜ் பட்டனை தட்டியது வாட்ஸ் அப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக