ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

700000 ரயில்வே தொழிலாளர்கள் .. தனியார் மய எதிர்ப்பு போராட்டம் . ஊடகங்கள் இருட்டடிப்பு!

        Karthikeyan Fastura : நாடெங்கும் 700000 ரயில்வே தொழிலாளர்கள் ரயில்வே துறையை தனியார் மயமாதல் குறித்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள் ஆனால் அது குறித்து எந்தவிதமான செய்தியும் எந்தவிதமான பத்திரிக்கையிலும் மீடியாக்களிலும் வெளியில் வரவில்லை. மாநிலங்களுக்கு தரவேண்டிய ஜிஎஸ்டி தொகையின் பங்கு எதுவும் தரப்படாமல் அதற்கு பதிலாக ரிசர்வ் பேங்க் இடமிருந்து கடன் வாங்கிக் கொள்ளுங்கள் என்று மத்திய நிதியமைச்சர் கொஞ்சமும் பொறுப்புணர்வு அற்று கூறியிருக்கிறார். 

அதை எதிர்த்து ஏழு மாநில முதல்வர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்கிறார்கள். அது பற்றிய செய்தி வணிக செய்தியாக மட்டும் சுருங்கிவிட்டது. உண்மையில் அது இந்தியாவை உடைக்க கூடிய மாநில உரிமையை பறித்த ஒரு மோசமான அவசியம் அனைவரும் விவாதிக்க வேண்டிய தேசிய பிரச்சனை. நாளை வரலாற்றாய்வாளர்கள் இந்த நிகழ்வு குறித்து இன்று வெளிவந்திருக்கும் பத்திரிக்கைகளை தேடினால் அதில் ஒன்றும் இல்லாததை பார்த்து இன்றைய பத்திரிகைகள் எவ்வளவு கேவலமாக விலை போயிருக்கின்றன என்று திட்டி எழுதுவார்கள்.    

பிரதமருக்கு அடுத்தபடியாக அதிக அதிகாரங்களைக் கொண்டு இருந்த நாட்டின் உள்துறை அமைச்சர் எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அதனைப் பற்றி எந்த ஒரு செய்தி நிறுவனமும் செய்தி வெளியிடாமல் பார்த்துக் கொள்ளப்படுகிறது.

உண்மையில் இங்கு இருக்கும் செய்தி நிறுவனங்களை கட்டுப்படுத்துவது யார்? எந்த செய்தி வர வேண்டும்? எது வரக்கூடாது என்று முடிவு செய்யப்பட்டு ஆளும் அரசுதான் கட்டுபடுத்துகிறது என்றால் மக்கள் விரோத சர்வாதிகார அரசுதான் இங்கு நடைபெறுகிறது.

மிச்சமிருப்பது சமூக ஊடகம் மட்டுமே. அதிலும் அரசுக்கு எதிரான பதிவுகளை அதை எழுதும் பதிவர்களை கட்டுப்படுத்துகிறது என்று வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிடுகின்றன.

இந்திய நாடும் அதன் மக்களும் உண்மையில் சுதந்திர நாடாகவும் சுதந்திர மக்களாகவும் தான் இருக்கிறார்களா

கருத்துகள் இல்லை: