சனி, 5 செப்டம்பர், 2020

ஜியோ டெலிகாமின் கதை ! முகேஷ் அம்பானியும் ஊடகங்களும் ”சொல்லாமல் மறைத்த கதை” JIO....

Narain Rajagopalan : · சொல்ல மறந்த கதை +++++      1995 அந்த மனிதர்
சுக்ராமினை பார்க்கிறார். சுக்ராம், அப்போது இந்திய ஒன்றியத்தின் தொலை தொடர்பு துறை அமைச்சர். 9 வட்டங்களுக்கான தொலைத் தொடர்பு ஒப்பந்தம் அவருக்கு போகிறது, ஆனாலும் அந்த ஒப்பந்தத்தினை நிறைவேற்ற முடியவில்லை. திரும்பவும் சுக்ராம் உள்ளே நுழைந்து, குழப்பி, கட்டிங் வாங்கி, பின்னாளில் சுக்ராம் ஊழல் என்கிற
பெயரோடும் நிறைய சுகரோடும் செத்து போனார். 2010

அந்த நிறுவனம் தொலை தொடர்பு துறை ஏலம் எடுக்க வருகிறது. அது குறிப்பிடும் தொகை பழம் தின்று கொட்டை போட்ட நிறுவனங்களுக்கே அதிர்ச்சியை தருகிறது. 12,848 கோடிகள். யாரும் அவ்வளவு விலை கொடுத்து அந்த அலைக்கற்றையை எடுக்க மாட்டார்கள். ஏலத்தின் முடிவில் இந்தியா முழுமைக்குமான BWA (Broadband Wireless Access) தொலை தொடர்பு அந்த நிறுவனத்துக்கு போகிறது. இந்திய ஒன்றிய அரசு ஒப்புதல் கொடுத்த அதே நாள் மாலையில் அந்த நிறுவனத்தின் 95% பங்கினை ஒருவர் வாங்குகிறார். அதற்கு அவர் கொடுக்கும் விலை 4,800 கோடிகள்.

சரி இதிலென்ன தவறு ? ஏலம் எடுத்த நிறுவனத்தை பற்றிய Telecom Regulatory Authority of India (TRAI) சொல்வது இது தான். அந்த நிறுவனத்தின் மொத்த முதலீட்டு தொகை வெறும் 2.51 கோடிகள். ஏலம் எடுப்பதற்கு முன்பாக அதன் வங்கி கணக்கில் இருந்த தொகை 18 இலட்சம். இந்தியாவின் ISPகளில் 150-வது இடத்தில் ஒரே ஒரு வாடிக்கையாளரை மட்டுமே கொண்டு இருந்த நிறுவனம் அது.

2020

இந்திய தொலை தொடர்பு துறையின் நம்பர் 1 நிறுவனம். கூகிள், பேஸ்புக், அபுதாபி அரசு, பல ப்ரைவேட் ஈக்விட்டி நிறுவனங்கள் அதில் முதலீடு செய்கின்றன. தனியாக ஒரு நிறுவனத்தையே இந்த பணத்தினை வாங்குவதற்காக அந்த தொலை தொடர்பு நிறுவனம் உருவாக்குகிறது. அதன் பங்குதாரர் சந்திப்பில் “கடனில்லாத நிறுவனம்” என்று பெருமிதத்தோடு அறிவிக்கிறார்.

இப்போது சில பெயர்கள்.

Himachal Futurestic Communications Ltd (HFCL) என்பது தான் 1995ல் விளங்காமல் போய் உண்டகட்டி வாங்கி தின்ற நிறுவனம். அதன் உரிமையாளர் திரு. மகேந்திர நஹாதா.

Infotel Broadband Services Private Limited (IBSPL) தான் TRAI காறி துப்பிய, ஆனாலும் 12,848 கோடிகள் ஏலத்தை வெறும் 18 இலட்ச ரூபாய் வங்கியில் வைத்து எடுத்த நிறுவனம். அதன் உரிமையாளர் திரு. ஆனந்த் நஹாதா. ஆனந்த், மகேந்திராவின் மகன்.

ஆனந்திற்கு பின்புலமாய் இருந்து ஒட்டு மொத்த இந்திய உரிமையையும் எடுத்த பிறகு, அந்த நிறுவனத்தை 4,800 கோடிகள் கொடுத்து வாங்கிய அந்த பரம ஏழை முகேஷ் அம்பானி. 2020-இல் அந்த அலைக்கற்றையை மூலதனமாக வைத்து உருவாக்கிய ஜியோவினை வைத்து, 1.5 இலட்சம் கோடிகள் எல்லாரிடத்திலும் முதலீடாக பெற்று, தன்னுடைய எல்லா கடன்களையும் அடைத்தார்.

ஆனால் நாம் இன்னமும் ஆ.ராசா என்பவர் 1.76 இலட்சம் கோடிகள் ஊழல் செய்தார் என்பதை நம்பி கொண்டு திரிவோம். ஊழல் என்பது நிரூபிக்கப்படாத விஷயத்தை நம்புவது மட்டுமே கிடையாது. பாலிசி முடிவுகளையும், இந்திய அரசியல் அமைப்பு கம்பெனிகளின் சட்டங்களின் ஓட்டைகளை பயன்படுத்தி கொண்டு அதன் ஓட்டைகளை பெரியதாக்கி, ஒரே ஒரு குடும்பம் உலகின் நான்காவது பெரிய பணக்காரர் ஆவது தான் இந்தியாவின் மிகப் பெரிய ஊழல்.

“நேர்மைன்னா என்னம்மா”

“முகேஷ் அம்பானிடா கண்ணா”

முகேஷ் அம்பானியும், இந்தியாவின் ஊடகங்களும் ”சொல்லாமல் மறைத்த கதை” தான் ஜியோ டெலிகாமின் கதை

கருத்துகள் இல்லை: