செவ்வாய், 23 ஜூன், 2020

உடுமலை சங்கர் கொலை வழக்கு தீர்ப்பு முன்பே எதிர்பார்க்க பட்டதா?


சாவித்திரி கண்ணன் : எதிர்பாராத எதுவும் உடுமலை சங்கர் கொலை வழக்கு தீர்ப்பில் வந்து விடவில்லை!
ஒரு மேல்முறையீடு வழக்கு மூன்று வருடமாக இழுத்தடிக்கப்பட்டதிலேயே அரசு தரப்பில் வெளிப்பட்ட அலட்சியம் புரிந்தது.
இன்றைய மத்திய,மாநில ஆட்சியாளர்களின் மனோபாவத்திற்கேற்பத் தான் வழக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்தப்படியே தீர்ப்பும் பெரும்பான்மை சாதிகளின் மக்கள் மகிழ்ச்சியடையும் வண்ணம் வந்துள்ளது.
கொலையின் சூத்திரதாரியான கெளசல்யாவின் தந்தை விடுதலை செய்யப்பட்டது நியாயப்படுத்தவே முடியாத அநீதி! இன்று தண்டிக்கப்பட்டவர்களுக்கும் உடுமலை சங்கருக்கும் எந்தவித முன் விரோதமும் கிடையாது. மூலவர்களை விட்டுவிட்டு, ஏவப்பட்டவர்கள் மட்டும் தண்டிக்கப்படுவது பேரவலம்!
ஒரு உயிரை எடுக்கும்படியான திட்டமிட்ட கொலைக்கு தண்டனை இல்லையென்றால், இனி குற்றங்கள் பெருகவே இது வாய்ப்பாகும். அந்த வகையில் இந்த தீர்ப்பு சமூக தளத்தில் ஏற்படுத்த போகும் எதிர்கால விளைவுகளை நினைத்தால் கவலையளிக்கிறது!
இந்த விவகாரத்தில் கெளசல்யா காட்டிவரும் உறுதி பிரமிக்க வைக்கிறது.
சமூக தளத்தில் பார்க்கும் போது அவரது நிலைபாடு முற்றிலும் சரியானது.
ஆனால், தார்மீக வழிமுறையில் பார்த்தால், இந்த நிலைபாடு அவரை பொருத்தவரை ஏற்புடையது அல்ல!
 ’தன்னை பெற்றெடுத்து ஊட்டி வளர்த்த, தாயும்,தகப்பனும் தூக்கில் தொங்கியே ஆக வேண்டும்! அவர்களை தண்டிக்காமல் விடமாட்டேன்’ என்று நான்காண்டுகள் கடந்த நிலையிலும் ஒரு மகளால் பேசமுடியுமா…? உண்மையில் இது எனக்கு ஆச்சரியத்தையே தருகிறது!

ஆறுவது சினம்
மாறுவது மனம்
சேருவது இனம்
என்பதே யதார்த்தம்! இதற்கு வெகு சிலரால் மட்டுமே விதிவிலக்காக இருக்கமுடியும். அந்த வெகு சிலரில் கெளசல்யாவும் இருக்கிறார் என்பதை நம்புவதா? நம்பாமல் இருப்பதா என்று தெரியவில்லை!
ஏனெனில், ’மாறுவது மனம்’ என்ற வகையில் தான், அவர் மறுமணம் செய்துள்ளார்! அந்த வகையில் மனமாற வாழ்த்துகிறேன்.அதில் எந்த தயக்கமும் இல்லை!
ஆனால்,அவர் கைபிடித்த ’சக்தி’ என்ற இளைஞர்,சில பெண்களை நம்ப வைத்து ஏமாற்றிவர் என்பது நிருபிக்கப்பட்ட பின்னரும், தன்னளவில் அவனை மன்னித்து ஏற்றுக் கொண்டார் கெளசல்யா!
ஆக,அவருக்கு மன்னிக்கும் இயல்பும் இருக்கிறது. தன் சாதியை சேர்ந்தவரையே அவர் காதலித்து கைபிடித்தையும் தவறாக கருத இடமில்லை! சாதி பார்த்து தான் காதலிக்க வேண்டும் என்று கட்டளையிட யாருக்கும் உரிமையில்லை!
கெளசல்யாவிற்கு ஒரு விஷயத்தை சொல்லவேண்டும் என்று தோன்றுகிறது. அதை ஏற்பதும் மறுப்பதும் உன் விருப்பம்!
காதல் என்பது உயிரின் தேவை! மானுட இயற்கை! உன் வாழ்நாள் முழுக்க நீ கைபிடித்தவனை காதலித்து சந்தோஷமாக வாழ்வாயாக!
உன் பெற்றோர் உலகத்தின் பார்வையில் கொலைக் குற்றவாளிகள்! உண்மையும் அதுவே! அதே சமயம் அவர்கள் உன்னை அன்பை கொட்டி, பாசமாக வளர்த்த பெற்றோர்கள்! அதற்கான நன்றிக்கடனை நீ வெளிப்படுத்த முடியாவிட்டாலும் மனதளவில் காட்டியே ஆக வேண்டும்.
ஆத்திரத்தில் கொலைக் குற்றம் புரிந்திருந்தாலும், அவர்கள் உன் பெற்றோர்கள் என்பதை மறவாதே! அவர்கள் ரத்தம் தான் உன் உடலில் ஓடுகிறது என்பதும்,உன் சித்தத்தில் இருந்து நீ அவர்களை முற்றிலும் அகற்றிவிட முடியாது என்பதும் தான் யதார்த்தம்.
ஆனால், சமூக தளத்தில் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்களே! அதை அதற்கான இயக்கங்களும், அமைப்புகளும் பார்த்துக் கொள்ளட்டும். அவர்களுக்கு உன் ஒத்துழைப்பை நீ அமைதியாகவும்,உறுதியாகவும் கொடுக்கலாம்!
ஆனால், நீயும் உன் பெற்றோர்களைப் போல பழிவெறியோடு இருக்காதே! மனதளவில் அவர்கள் மீது இருக்கும் வெறுப்பையும், கோபத்தையும் முற்றிலும் தூக்கி எறிந்துவிடு!
 மனதளவில் உன் பெற்றோர்களை மன்னிப்பதே தார்மீக ரீதியாக உனக்கு நன்மை தரும்!

கருத்துகள் இல்லை: