வியாழன், 25 ஜூன், 2020

சுந்தரம் ஆசாரி மகன் மகேந்திரன்.. சாத்தான்குளம் போலீஸ் செய்த இன்னொரு கொலை

பத்து நாட்களுக்கு முன்னால் பேய்க்குளத்தில் சுந்தரம் ஆசாரி மகன் மகேந்திரன் என்பவரை சாத்தான்குளம் போலீஸார் அடித்து படுகொலை செய்துவிட்டார்கள். அந்த வீட்டைச் சேர்ந்தவர்களிடம் பயம் காட்டி அவர்களை மிரட்டி புகார் கொடுக்காமல் செய்துவிட்டார்கள்
மின்னம்பலம் : சாத்தான்குளம் போலீஸ் செய்த இன்னொரு கொலை?தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலைய போலீஸால் தாக்கப்பட்ட ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் மரணம் அடைந்த விவகாரம் மேலும் பல விவகாரங்களை கிளறிவிட்டிருக்கிறது. இதே சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் பேய்க்குளத்தைச் சேர்ந்த இன்னொருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார் என்று புதிய புகாரை எழுப்பியுள்ளனர்.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், மகன் பென்னீக்ஸ் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்று விசாரணையின் பேரில் இருவரையும் கடுமையாகத் தாக்கியதில் ஜெயராஜும், பென்னீக்ஸும் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த சம்பவத்தைக் கண்டித்து ஊரடங்கிலும் சாத்தான்குளத்தில் ஐநூறுக்கும் மேற்பட்டோர் கூடி போராட்டம் நடத்தினதிமுக, காங்கிரஸ், பாஜக என்று பல கட்சிப் பிரமுகர்களும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர். இதில் ஜூன் 23 ஆம் தேதி போராட்டத்தின் இடையே சாத்தான்குளம் காங்கிரஸ் பிரமுகர் மகேந்திரன் ஊடகங்களிடம் பேசினார். அப்போது அவர்,
“சாத்தான்குளம் போலீசாரால் மிருகத் தனமாக தாக்கப்பட்ட ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கோவில் பட்டி சப்ஜெயிலில் மரணம் அடைந்துவிட்டார்கள். அவர்கள் இருவரையும் மிருகத் தனமாக தாக்கிக் கொலை செய்த சாத்தான்குளம் போலீசார் மீது உடனே கொலை வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகள் அனைவரையும் உடனே கைது செய்ய வேண்டும். அதோடு மட்டுமல்ல அவர்களை உடனே காவல்துறை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும். மேலும் இந்த வழக்கு கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்.

இதேபோன்று பத்து நாட்களுக்கு முன்னால் பேய்க்குளத்தில் சுந்தரம் ஆசாரி மகன் மகேந்திரன் என்பவரை சாத்தான்குளம் போலீஸார் அடித்து படுகொலை செய்துவிட்டார்கள். அந்த வீட்டைச் சேர்ந்தவர்களிடம் பயம் காட்டி அவர்களை மிரட்டி புகார் கொடுக்காமல் செய்துவிட்டார்கள். பேய்க்குளத்தைச் சேர்ந்த மகேந்திரன் படுகொலை செய்யப்பட்டதற்கும் சேர்த்து வழக்குப் பதிவு செய்து அந்த வழக்கையும் சிபிஐ நடத்த வேண்டும்.
இந்தக் கோரிக்கையை நிறைவேற்றா விட்டால் எங்களின் போராட்டம் எத்தனை நாட்களானாலும் தொடர்ந்து நீடிக்கும்” என்று கூறியுள்ளார் காங்கிரஸ் பிரமுகர் மகேந்திரன்.
இதனால் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் நடந்த விசாரணைகள் பற்றி முழு அளவில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
-வேந்தன்

கருத்துகள் இல்லை: