புதன், 24 ஜூன், 2020

சீக்கிரம் முடிச்சுக் கொடுத்துடுங்க சார். முடியாமப் போச்சுன்னா பிரயோஜனம் இல்லாம போயிடும்

டிஜிட்டல் திண்ணை: ஆட்சி போகும் போக்கு...!
டிஜிட்டல் திண்ணை: ஆட்சி போகும் போக்கு...!மின்னம்பலம் :
“ஒவ்வொரு ஆட்சிக்கும் ஐந்தாண்டு காலம் என்பது நமது அரசியல் அமைப்பு சட்டம் விதித்திருக்கும் கட்டளை. ஐந்தாண்டுகளை முடிக்கும் தருவாயில், ஒவ்வொரு ஆட்சியைப் பற்றியும் அந்த ஆட்சியின் தூண்களாக இருந்து பணியாற்றும் ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ஒரு பிக்சர் கிடைக்கும். முழு ஆண்டு தேர்வுக்கு முன்னதாகவே மாணவர்கள் பற்றி அந்தந்த சப்ஜெக்ட் ஆசிரியர்களுக்கு எப்படி ஒரு கணிப்புச் சித்திரம் கிடைக்குமோ அதுபோல இந்த ஆட்சியைப் பற்றிய ஒரு சித்திரம் அதிகாரிகளுக்கு வந்துவிடும், ஆட்சி பற்றிய இந்த பிராக்ரஸ் ரிப்போர்ட்டின்படிதான் அதிகாரிகளின் கடைசி வருட நடவடிக்கைகள் இருக்கும். ஆட்சி மீது மக்கள் அதிருப்தியாக இருக்கிறார்கள் என்று அதிகாரிகள் முடிவு செய்துவிட்டால் அந்த போக்கு அதிகாரிகளிடத்திலும் எதிரொலிக்க ஆரம்பிக்கும். இப்படித்தான் அதிமுக அரசின் இந்த நான்காண்டுகள் பற்றிய ஒரு பிராக்ரஸ் ரிப்போர்ட்டை வைத்துக் கொண்டு ஐஏஎஸ் அதிகாரிகளும், ஐபிஎஸ் அதிகாரிகளும் தத்தமது வட்டாரங்களில் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
எப்படி உளவுத்துறை போலீஸாரும், காவல்துறை அதிகாரிகளும் மக்களிடம் இருந்து தகவல்களைப் பெற்று அதை மேலிடத்துக்கு அனுப்பி வைக்கிறார்களோ, அதேபோல அரசின் நிர்வாகச் சங்கிலி மூலம் மக்களிடையே இருக்கும் மனப்பான்மை பற்றி ஐஏஎஸ் அதிகாரிகளான துறைச் செயலாளர்கள் வரை கருத்துகள் செல்லும்.


அதாவது கிராம நிர்வாக அதிகாரி, வட்டார வளர்ச்சி அலுவலர், தாசில்தார், கலெக்டர், துறைச் செயலாளர் என்று நாட்டின் அடிமட்டத்தில் இருந்து கிடைக்கும் மக்களின் கருத்துகள் நிர்வாகச் சங்கிலியின் மூலம் மேல் மட்டத்துக்கு செல்லும். இதை சில துறைச் செயலாளர்கள் ஆட்சி மேலிடத்துக்கும் கொண்டு செல்வார்கள். அவர்கள் கொண்டு செல்வதற்கு ஆட்சியாளர்களிடம் இருந்து கிடைக்கும் ரியாக்‌ஷனைப் பொறுத்து இது தொடரும். சில சமயம் தொடராது.
இப்படிப்பட்ட சூழலில் துறைச் செயலாளர்களில் பலர் இந்த ஆட்சியின் மீதான விமர்சனப் பார்வையோடே இருக்கிறார்கள். இந்த ஆட்சியில் வளமை அடைந்தவர்களால் கூட அரசின் மீது விமர்சனங்கள் வைக்கப்படுகிறது என்பதுதான் இதில் கவனிக்கப்பட வேண்டியது.

கோட்டையில் இருக்கும் துறைச் செயலாளர்கள் தங்களுக்குள் ஒரு வாட்ஸ் அப் க்ரூப் வைத்திருக்கிறார்கள். இந்த குரூப்பில் சமீப காலமாக அரசின் தவறான முடிவுகள் பற்றிய விமர்சனங்களும், அரசு போகும் போக்கு பற்றிய அதிருப்திக் குரல்களும் அதிகரித்திருக்கின்றன என்கிறார்கள் அந்த க்ரூப்பில் உள்ள சில அதிகாரிகளே. அரசு புரோட்டாகால்படி எல்லா துறைச் செயலாளர்களுக்கும் தலைமைச் செயலாளர்தான் அட்மின். ஆனால் இந்த குரூப்பில் தலைமைச் செயலாளர் இல்லை என்பதால் பல துறைச் செயலாளர்கள் இந்த ஆட்சி மீதான தங்களின் எடைபோடும் விமர்சனங்களை சுதந்திரமாக முன் வைத்து வருகிறார்கள். இந்த விமர்சனங்கள் ஆட்சித் தலைமையின் கவனத்துக்கு சென்றாலும் கவலையில்லை என்ற கண்ணோட்டத்துடன் தான் அவர்கள் இதைச் செய்கிறார்கள்.

சமீபத்தில் காற்றாலை மின்சாரம் தொடர்பாக மத்திய அரசின் கேள்விகளுக்கு பதிலளித்த ஒரு அதிகாரி திடீரென மாற்றப்பட்டார். மத்திய அரசு இப்படி கேள்வி கேட்பதும், அதற்கு பதில் கோப்பு அனுப்புவதும் வழக்கமான நிர்வாக நடவடிக்கைதான் என்றாலும் அந்த அதிகாரி மாற்றப்பட்டது அதிகாரிகள் வட்டாரங்களில் முணுமுணுப்பை ஏற்படுத்தியது.
மேலும், அமைச்சர்கள் தங்களது மாவட்டங்களில் நடக்க வேண்டிய வேலைகளுக்காக தங்களது துறை அல்லாத பிற துறைச் செயலாளர்களிடம் நேரடியாகவே சென்று, ‘சார் அதை சீக்கிரம் முடிச்சுக் கொடுத்துடுங்க சார். முடியாமப் போச்சுன்னா பிரயோஜனம் இல்லாம போயிடும்’ என்று நேரடியாகவே கேட்டு வைக்கிறார்கள். இப்படி ஆட்சி முடியும் தருவாயில் அமைச்சர்கள் எதற்கும் தயாராய் இருப்பதும் அதிகாரிகளிடம் பேசுபொருளாகியுள்ளது.

இத்தகைய பின்னணியில்தான் அரசின் மீதான விமர்சனப் போக்கை துறைச் செயலாளர்கள் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிகப்படுத்தியிருக்கிறார்கள். கோட்டையில் இருந்து புறப்பட்டிருக்கும் இந்த விமர்சனம் ஐந்தாம் ஆண்டு அதிமுக ஆட்சியின் மீது முக்கிய தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதே இப்போதைய நிலைமை” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை: