ஞாயிறு, 21 ஜூன், 2020

’’எந்த நாடும் இந்தியாவிற்குள் ஊடுருவவில்லை’.....இந்த நடிப்பு சுதேசிகளை நினைத்தால்

சாவித்திரி கண்ணன் : இந்த நடிப்பு சுதேசிகளை நினைத்தால் வேதனை தான் மிஞ்சுகிறது. இரு
நாட்டு ஆட்சியாளர்களின் ஆக்கிரமிப்பு ஆசைக்கு பலியான இரு தரப்பினதும் அந்த எளிய ராணுவவீரர்களுக்கு தலைசாய்த்து வணக்கம் செய்கிறேன்!
இந்தியாவின் ஆட்சியாளர்களும் ’அகண்டபாரதம்’ என்ற சாத்தியமில்லாத லட்சியக் கனவில் சாத்தியமாகியுள்ள அமைதியை சீர்குலைக்க துடிப்பவர்கள்!
சீனாவின் ஆட்சியாளர்களும் ஏற்கனவே தீபெத்தையும், ஹாங்கங்கையும் ஆக்கிரமித்து அராஜகத்தை அரங்கேற்றி வருபவர்கள்!
பிரச்சினைக்குரிய இந்திய-சீன எல்லை தாவாவிற்கு காரணம் அன்றைய பிரிட்டிஷ் பேரரசின் பேராசை தான்! பிரிட்டிஷ் அரசில் பிரிட்டிஷ் ராணுவ அதிகாரியாகவும்,பின்னாளில் வெளியுறவுத் துறை செயலாளராகவும் இருந்தவர் மெக்மோகன் என்பவர்.இவர் தான் இன்றைய இந்தியா உரிமை கொண்டாடும் 15,106.7 கீ.மீ நீள எல்லைக் கோட்டை வரைந்து தீர்மானித்தவர்! அப்படி தீர்மானித்து அதற்கு இசைவு தெரிவித்து கையெழுத்திடும்படி அவர் சீனாவையும்,தீபெத்தையும் 1914 ல் அழைத்து கேட்டார்!
ஆனால், சம்மந்தப்பட்ட இடம் பல நூறுவருடங்களாக திபெத்தின் அங்கமாக அறியப்பட்ட பெளத்ததிற்கு பேர் போன ’தாவாங்’ பகுதி என்பதால் தீபெத் தயக்கம் காட்டியது.ஆயினும் பிரிட்டிஷ் பேரரசின் ராணுவபலம் கருதி கையெழுத்திட்டு தந்தது. ஆனால்,சீனாவோ தன்னுடைய சிலபகுதிகளை பிரிட்டிஷ் எடுத்துக் கொண்டதாக அன்றே கடுமையாக எதிர்த்தது.
ஆனால்,அதன் எதிர்ப்பு அன்றைய பிரிட்டிஷ் அரசிடம் எடுபடவில்லை.
இதை இந்தியா சுதந்திரமடைந்த பிறகு நட்பு முறையில் பேசி பெற்றுவிட முடியும் என சீனா நம்பியது. சூ இன் லாய் இந்தியாவிற்கே வந்து மிக இணக்கமான வகையில் பேசிப் பார்த்தார்.
ஆனால், இந்தியாவோ சுதந்திரம் கிடைத்த போது தனக்கிருந்த நிலப்பரப்பில் எதையும் விட்டுத் தருவது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு கூட உடன்பட மறுத்துவிட்டது. மறுப்பதன் மூலம் காலப்போக்கில் சீனா மறந்துவிடும் என இந்தியா நினைத்தது.
இந்தியாவின் நம்பிக்கை பொய்த்தது. ’’தர மறுத்ததை தட்டி பறிப்பேன்! இழந்ததை தான் எடுக்கிறேன். இந்தியாவிற்கானதை ஒன்றும் எடுக்கவில்லை’’ என வியாக்கியானம் சொன்னது.ஆயினும் கூட ஆக்கிரமித்த கொஞ்ச பகுதியை எடுத்துக் கொண்டு, கொஞ்ச பகுதியை விட்டுக் கொடுத்து தானே போர் நிறுத்த அறிவிப்பை தந்து விலகியது.
இதே போல காஷ்மீர் எல்லையான ’அக்சாய்சீன்’ பகுதியை இந்தியாவோடு சேர்த்து வரைந்து தந்தவர் ஜான்சன் என்ற ஆங்கில அரசின் நிலவரையாளர்! இவர் வரைந்ததை அர்டாக் என்ற பிரிட்டிஷ் இந்திய ராணுவ அதிகாரியும் அங்கீகரித்தார்.சீனா அதை அன்றே எதிர்த்தது.இது ஒரு பனிமலை பகுதி! வாழ தகுதியற்ற பகுதி.ஆனால்,ராணுவ ரீதியில் ஒரு கேந்திரமாக இருக்கும் என்ற ரீதியில் தான் இந்தியாவும்,சீனாவும் மோதுகின்றன!
உண்மையில் நமக்கு பாகிஸ்தானை விட சீனா தான் பலமடங்கு ஆபத்தை விளைவிக்க கூடிய பலமான எதிரி! பாகிஸ்தான் விஷயத்தில் பாய்ந்து, பாய்ந்து தாக்கும் நமது பிரதமரும்,உள்துறை அமைச்சரும் சீனா விஷயத்தில் எவ்வளவு அடக்கி வாசிக்கிறார்கள் என்பதற்கு பிரதமர் தன் உரையில் ஒரு முறை கூட சீனா என்ற பெயரைக் கூட உச்சரிக்காமல் தவிர்த்தார் என்பதே உதாரணம்.
’’எந்த நாடும் இந்தியாவிற்குள் ஊடுருவவில்லை’’ என்று பிரதமர் உறுதியளித்த பிறகு நாம் என்ன முடிவுக்கு வருவது…? எனில், இந்தியா ஊடுருவியதால் தான் அவர்கள் இந்திய வீரர்களை பிடித்து வைத்துக் கொண்டு விடுவித்தனர் போலும் என்று தான் நினைக்க தோன்றுகிறது.
இந்தியாவை பொருத்தவரை அது பல துறைகளில் சீனாவை தொழில் நுட்ப ரீதியாக பெரிதும் நம்பியுள்ளது. சீனாவிடமிருந்து அத்தியாவசியமான மருந்து,உரம் உள்ளிட்ட பல ஆயிரக்கணக்கான நுகர்வு பொருட்களில் சார்ந்து இருக்கிறது.
இந்த வகையில் இந்தியாவிடமிருந்து பெரும் பொருளாதார அனுகூலங்களை பெறுகிற சீனா தேவையில்லாமல் கடந்தகால நிலத் தகராறை இப்போது எடுத்து வைத்து இருக்கும் இணக்கத்தை கெடுக்கத் துணியாது, சும்மா சீன் காட்டி இந்தியாவை அச்சுறுத்தும் அவ்வளவே என்று நாம் ஓரளவு நம்பலாம்! ஆனால்,சீனாவின் கோபத்திற்கு முக்கிய காரணம் அமெரிக்காவுடனான இந்தியாவின் அதீத நெருக்கமே என நான் நம்புகிறேன்.
இந்தியா அமெரிக்காவுடன் அதிகமாக நெருங்குவது எந்த அளவுக்கு அனுகூலமோ,அந்த அளவுக்கு அதில் ஆபத்தும் இருக்கிறது.ஆகவே அமெரிக்கா,சீனா இரண்டுமே தவிர்க்கமுடியாத பெரும் சக்திகள். ஆகவே, இருவரையும் சம தூரத்தில் வைத்து பழகுவது தான் இந்திய நலனுக்கு நன்மை தருவதாக அமையும்!
சாவித்திரி கண்ணன்
பத்திரிகையாளர்

கருத்துகள் இல்லை: