சனி, 27 ஜூன், 2020

திமுக எம் எல் ஏ ஆர் டி அரசு கொரோனா தொற்று பாதிப்பு .. மருத்துவமனையில்


இன்னொரு திமுக எம்.எல்.ஏ.வுக்கு வைரஸ் தொற்று! மின்னம்பலம் :  திமுகவின் செய்யூர் சட்டமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் மருத்துவ அணி மாநில துணைச் செயலாளருமான ஆர்.டி. அரசு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக இன்று (ஜூன் 27) அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் அரசு, ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம் பலருக்கும் நிவாரணப் பணிகளை செய்து வந்தார். அரசு பல் மருத்துவர், அவரது மனைவி மருத்துவர். சென்னை போரூரில் வசித்து வருகிறார். இந்நிலையில் சில நாட்களாக தனக்கு காய்ச்சல் அடிப்பதால் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்று சோதித்துக் கொண்டார்கொரோனா பாசிட்டிவ் என்று ரிசல்ட் வரவே, உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

தகவல் அறிந்து திமுக தலைவர் ஸ்டாலின் உடனடியாக அரசுவிடம் பேசியிருக்கிறார். ‘தைரியமா இருக்கேன் அண்ணன்’ என்று சொல்லியிருக்கிறார் அரசு.
இந்நிலையில் தனது ட்விட்டர் பதிவில், “கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கழகத்தின் செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி. அரசு அவர்கள் விரைந்து நலம் பெற விழைகிறேன்.
மக்கள் பணியில் அவருக்குள்ள அக்கறையும், தன்னம்பிக்கையும், தொடர்ந்து மேற்கொண்டு வரும் சிகிச்சையும் அவரை மீண்டும் வழக்கம்போல பணியாற்றச் செய்திடும்” என்று தெரிவித்துள்ளார்.
ஆர்.டி. அரசு தலைமைக் கழகத்தில் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோரோடு நெருக்கமாக பழகி வருபவர்.
எனவே அரசுவோடு பழகிய தலைமைக் கழக நிர்வாகிகளையும் எச்சரிக்கையாக இருக்கும்படி ஸ்டாலின் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
-வேந்தன்

கருத்துகள் இல்லை: