ஞாயிறு, 21 ஜூன், 2020

கொரோனாவால் உயிரிழந்த விஜயா மருத்துவ மனை இயக்குனர் சரத் ரெட்டி .... ஜெ.அன்பழகன், ர் ஏ.எல்.ராகவன் ..

கொரோனாவால் உயிரிழந்த பிரபலங்கள்!  மின்னம்பலம் :  கொரோனா தொற்றால் விஜயா மருத்துவமனை இயக்குனர் சரத் ரெட்டி, பார்சன்ஸ் சுந்தரம் நிறுவனத்தின் பாலகிருஷ்ணன் ஆகியோர் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. பிரபலங்களான திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன், பிரபல பாடகர் ஏ.எல்.ராகவன் ஆகியோர் கொரோனாவால் உயிரிழந்தது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருந்தது.
இந்த நிலையில் சென்னையில் பிரபலமான வடபழனி விஜயா மருத்துவமனை இயக்குனர் சரத் ரெட்டி கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, விஜயா மருத்துவமனையிலேயே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவசர சிகிச்சை பிரிவில், தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். சரத் ரெட்டியின் உடலை சுகாதாரத் துறையினரே அடக்கம் செய்தனர்.

சொந்தமாக மருத்துவமனை வைத்திருந்தாலும் கொரோனா பாதித்தால் மீள்வது கடினம் என்பதைத்தான் சரத் ரெட்டியின் மரணம் நமக்கு உணர்த்துகிறது. ஆகவே, பொதுமக்கள் கொரோனாவுக்கு எதிராக தகுந்த வழிமுறைகளை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர் வல்லுனர்கள்.
இதேபோல டிவிஎஸ் குழுமத்தைச் சேர்ந்த சுந்தரம் ஃபாஸ்ட்னர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான நாராயணசாமி பாலகிருஷ்ணன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். 65 வயதான இவர், 2008 ஆம் ஆண்டு ஃபாஸ்ட்னர்ஸ் சுந்தரம் நிறுவனத்தில் இணைந்து, 12 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். சென்னை ஐஐடியில் எம்.டெக் படிப்பை முடித்த இவர், பாரத் போர்ஜ் நிறுவனத்திலும் பணியாற்றியுள்ளார்.
எழில்

கருத்துகள் இல்லை: