செவ்வாய், 15 அக்டோபர், 2019

ஜாதி .. தொல்காப்பிய / சங்க இலக்கியத்தில் இல்லாத 'ஜாதி'

Kalai Selvi : எவ்வளவுதான் படித்திருந்தாலும், தனக்குச் சாதி கடந்த மனநிலை என்று வாயால் சொல்லிக் கொண்டாலும்... அது, அடுத்த சாதிகளை, நான் தாழ்த்த மாட்டேன் என்பதோடு தான் நிற்கிறதே தவிர, ' சுயசாதி விமர்சனம்' என்று வரும்போது, படித்த பலராலேயே தாங்கிக்கொள்ள முடிவதில்லை.
'சாதி' என்ற சொல், தமிழகத்தில் கூச்சச்சொல் ஆகிவிட்டதால், 'சமூகம்' என்று மாற்றுப் பெயர் கொடுத்துக் கொள்கிறார்கள்.
ஆதி தமிழில், சாதி உண்டா!
ஆதி தமிழில் மதமும் இல்லை, சாதியும் இல்லை.
ஜா = ஜனித்தல் ( பிறத்தல் ); ஜனனம் என்ற சொல்லில் வருவது ஜாதி!
பத்ம + ஜா = பத்மத்தில் (தாமரையில்) பிறந்தவள்.
ஷைல + ஜா = சைலத்தில் (மலையில்) பிறந்தவள்
பூர்வ + ஜா = முன்பு பிறந்தவள்/ன்
சுப்ர + ஜா = நன்கு பிறந்தவள்/ன்
ஜாதி / जाति = சமஸ்கிருதச் சொல்! அச்சொல்லை, பகவத் கீதை ' அத்தியாயம்' 1:42 சுலோகத்திலேயே நாம் காணலாம்.
'உத்ஸாதயந்தே ஜாதி தர்மா சாஸ்வத'
ஜா என்ற வடசொல், ஜனித்ததால் வருவதையே குறிக்கும்! தமிழில் கிரந்தம் நீக்கி எழுதுவதால், ஜா = சா ஆகி, சாதி என்று எழுதுகிறோம்.
ஆனால், நம் தமிழில் கூட ஒரு 'சாதி' உண்டு! ஆனால் அது ஜாதி அல்லாத சாதி; சாதிமல்லி, சாதிக்காய், சாதிமுத்து, சாதிப்பொன் - இவையெல்லாம் என்ன சாதி?

நீர் வாழ் சாதியும் அது பெறற்கு உரிய
( தொல்காப்பியம் மரபியல் 42)
கடுப்பு உடை பறவை சாதி அன்ன ( பெரும்பாணாற்றுப்படை 229 )
நீர் வாழும் மீன்களுக்கு ஏது சாதி? பறவைகளுக்கு ஏது சாதி? சாதி மரம் என்று தேக்கு மரத்தைத் சொல்வது ஏன்? சாதிக்காய் எனும் பெயர் ஏன்?
தமிழில், சாதி = அஃறிணைச் சிறப்பைக் குறித்து வரும் சொல்!
சாதித்தல் = சிறப்பை அடைதல் அல்லவா?
அதுபோலவே, சிறப்பான காய் = சாதிக்காய்; சிறப்பான மல்லி = சாதிமல்லி, நீர் வாழ் சாதியில், சிறப்பான முத்து = சாதி முத்து!
அறிக: தமிழ்ச்சாதி (அஃறிணை) வேறு; சமஸ்கிருத ஜாதி (உயர்திணை) வேறு! ஆனால் வடநெறி, தமிழகத்தில் ஊறியபின், ஜாதி = சாதி ஆகிவிட்டது.
நால் வகை சாதியும், நலம் பெற நோக்கி - ( சிலப்பதிகாரம், வேனில் காதை 41)
நாமம் சாதி.. கிரியையின் அறிவது ஆகும் -
( மணிமேகலை, சமயக் கணக்கர் 23 )
தொல்காப்பிய / சங்க இலக்கியத்தில் இல்லாத 'ஜாதி' , சிலம்பின் காலத்தில் வரத் துவங்கிவிட்டது. சாதி என்ற பழைய அஃறிணைச் சொல் 'ஜாதி / சாதி' என்ற புதிய உயர்திணைச் சொல்லாகவும் மாறிவிட்டது. சிலம்பின் காலம் = தமிழகத்தில் வைதீக நெறி, புகத் துவங்கிவிட்ட காலம். ஆனால் ஆசீவகம், சமணம் & பௌத்தம் இருந்த காலமும் கூட!
பக்தி இலக்கிய காலம் = தமிழகத்தில் வைதீக நெறி, நிறுவப்பட்டுவிட்டகாலம் ; சமண பௌத்தங்கள் போயே போய்விட்ட காலம்.
மேலதிக விவரங்களுக்கு... முனைவர் கண்ணபிரான் ரவிசங்கர் எழுதிய, அறியப்படாத தமிழ்மொழி என்ற நூலை வாசிக்கவும்.
Thirunavukkarasan Manoranjitham .

கருத்துகள் இல்லை: