ஞாயிறு, 13 அக்டோபர், 2019

இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை: அமைச்சர் நடவடிக்கை!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை: அமைச்சர் நடவடிக்கை!மின்னம்பலம் : கமல் நடத்தும் பிக்பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சி பிரபலமான ஒன்று. பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பல்வேறு புகார்கள் சென்றதால் நிகழ்ச்சிக்கு தடை விதிப்பது குறித்து ஆய்வறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளதாக மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.இந்தியில், கலர்ஸ் தொலைக்காட்சியில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் பிக்பாஸ் 13 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இத்தொடர் ஆரம்பித்ததிலிருந்து தொடர்ந்து சர்ச்சைகளை சந்தித்து வருகின்றது.
சில நாட்களுக்கு முன்பு, கர்னி சேனா அமைப்பு இந்நிகழ்ச்சியை தடை செய்யக் கோரியது. இந்த நிகழ்ச்சி இந்து கலாச்சாரத்தை அவமதிப்பதாக கர்னி சேனா அமைப்பு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியிருந்தது. இந்த அமைப்பு ‘நிகழ்ச்சியில் லவ் ஜிஹாத் விளம்பரப்படுத்தப்படுகிறது, அதில் இவ்வளவு அநாகரிகம் இருப்பதால், முழு குடும்பமும் ஒன்றாக அமர்ந்து பார்க்க முடியாது’ என அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது.

முஸ்லீம் அல்லாத சமூகத்தைச் சேர்ந்த பெண்களை இலக்காகக் கொண்டு முஸ்லீம் ஆண்கள் மேற்கொள்ளப்படும் காதல் முயற்சி லவ் ஜிஹாத் என அழைக்கப்படும். 2009 ஆம் ஆண்டில் இந்தியாவில் தேசிய கவனத்திற்கு வந்த, இந்த லவ் ஜிகாத், முதலில் கேரளாவிலும் பின்னர் கர்நாடகாவிலும் அதிகமாக பரவியது. அச்சமயம் இது பல்வேறு விதமான சர்சைகளையும், இந்து மத அமைப்பினரின் கடுமையான எதிர்ப்பையும் இது பெற்றது.
சல்மானுக்கு விடப்பட்ட மிரட்டல்
இதனால், கர்னி சேனா அமைப்பு பிக் பாஸ் 13 நிகழ்ச்சி நடைபெறும் வீட்டிற்கு முன் ஆர்பாட்டங்களை நடத்தி வருகின்றது. பிக் பாஸ் 13 தடைசெய்யப்படாவிடில் சல்மான் கானின் தபாங்க் 3 திரைப்படம் வெளியாகாது என மிரட்டல் விடுத்துள்ளது. இதனையடுத்து மும்பையிலுள்ள சல்மான் வீட்டிற்கு முன் மும்பை காவல்துறையினர் பலத்த காவலில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதே நேரத்தில், அகில் பாரதி அகதா கவுன்சில் நிகழ்ச்சியின் உள்ளடக்கம் குறித்து அதிருப்தி தெரிவித்ததோடு, அதைத் தடை செய்யக் கோரியது. இந்நிலையில், இந்தியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை கோரி உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ நந்த் கிஷோர் குஜ்ஜார் புகார் ஒன்றை சமீபத்தில் அளித்திருந்தார். அதில் நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆபாசமான காட்சிகள் இடம்பெறுவதாகவும் சமூக பொறுப்பற்ற வகையில் உள்ள ஒளிபரப்புக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
நேற்று(அக்டோபர் 12) மும்பையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது, இதுபற்றிய கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், அமைச்சக அதிகாரிகளிடம் இதுகுறித்த அறிக்கை வழங்க கேட்டுக் கொண்டுள்ளதாகவும், இவ்வார இறுதியில் அறிக்கையை பெற்ற பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கூறினார்.
இது இந்திய அளவில் பல்வேறு மொழிகளில் வெளியாகும் பிக் பாஸுக்கும் பொருந்துமா என்பது குறித்து அமைச்சர் தெளிவுபடுத்தவில்லை.

கருத்துகள் இல்லை: