திங்கள், 14 அக்டோபர், 2019

காமராஜர் ஆட்சியில் தமிழ் நாடு பெயர் மாற்றத்துக்காக 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த சங்கரலிங்கனார்.. 13.10.1956 உயிர் நீத்த நாள்!

"தமிழ் நாடு" பெயர் மாற்றத்துக்காக 76 நாட்கள்
உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த சங்கரலிங்கனார் : சொத்துக்களை பள்ளிக்கு எழுதி வைத்த தியாகி!
இன்றைக்கு உணர்ச்சி பொங்க 'தமிழ்நாடு' என பெருமிதத்தோடு போகுமிடமெல்லாம் மார்தட்டிச் சொல்லி வருகிறோமே, இந்தப் பெயர் கிடைக்க நடத்திய போராட்டம், இழந்த உயிரிழப்பை நினைவுகூற வேண்டிய நாள் இன்று! ஆம். இதே நாளில்தான் 'தமிழ்நாடு' பெயர் மாற்றம் வேண்டி உண்ணாவிரதம் இருந்து தன் 76-ஆம் நாளில் இன்னுயிர் நீத்தார் சங்கரலிங்கனார்! உலகிலேயே ‌அதிக
நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார் என்ற பெருமையும் இவருக்கு உண்டு!
சங்கரலிங்கனார் மதராசு மாநிலம் (மெட்ராஸ் ஸ்டேட்) என்று அழைக்கப்பட்ட பகுதிக்கு ”தமிழ்நாடு” என்று பெயர் வைக்கச் சொல்லி உண்ணாவிரதமிருந்து
உயிர்விட்ட ஒரு போராளி. இவர் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர்.
இவர் விருதுநகரை அடுத்த மண்மலை மேடு என்ற ஊரைச் சார்ந்தவர்.
கர்மவீரர் காமராசர் படித்த பள்ளியில் படித்த இவர் வணிகராக இருந்ததோடு காங்கிரசில் மிகுந்த ஈடுபாட்டுடனும் இருந்தார். நாடார் சமூகத்திற்காக அபிவிருத்திச் சங்கத்தையும் துவக்கிய இவருக்கு ராஜாஜி உட்படப் பலருடன் தொடர்பு ஏற்பட்டது. கதர் விற்பனையில் ஆர்வம் செலுத்திய சங்கரலிங்கம் காந்தியுடன் தண்டியாத்திரையிலும் பங்கு கொண்டிருக்கிறார். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்கும் சென்று இருக்கிறார்.

பின்னர் பம்பாயில் வாழ்ந்த அவர் குடும்பத்தினரைப் பிரிந்து தனித்து வாழ்ந்ததோடு தன்னுடைய சொத்துக்களை விருதுநகரில் உள்ள பள்ளிக்கும் எழுதி வைத்துவிட்டார். பிறகு விருதுநகர் ஆலக்கரையில் ஒரு ஆசிரமத்தை அமைத்துத் தங்கியிருந்தார்.
அப்போதுதான் பொட்டி சிறீராமுலு ஆந்திராவில் 'மெட்ராஸ் மனதே' என்று உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்திருந்தார்.அந்த உண்ணாவிரதம் ஏற்படுத்திய பாதிப்பிலும், ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகம், சென்னை மாகாணத்திற்குத் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டுவதற்காகப் போராட்டம் நடத்தியதின் தூண்டுதலிலும் உண்ணாவிரதத்தை நடத்தத் திட்டமிட்டார் சங்கரலிங்கனார்.
காங்கிரஸ் அரசின் முன்பாக 1956 ஜூலையில் 12 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தார் அவர். தனியாக மொழிவழி மாகாணம் வேண்டும், சென்னை மாகாணத்திற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்ட வேண்டும்,அரசியல் தலைவர்கள் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சாதாரண மக்களைப் போல் வாழ வேண்டும்,தேர்தல் முறையில் மாற்றம் வேண்டும்,தொழில்கல்வி, இந்தியா முழுவதும் மதுவிலக்கு முதலான பன்னிரெண்டு கோரிக்கைகளுடன் ஜூலை 27-ஆம்தேதி சூலக்கரை மேட்டில் தனியாளாக உண்ணாவிரதத்தைத் துவக்கினார்.

அப்போது அந்த இடம் விருதுநகரிலிருந்து தூரத்தில் ஆட்கள் நடமாட்டமில்லாத பகுதியாக இருந்ததால் பொதுவுடமைக் கட்சியினர் இடத்தை மாற்றுமாறு ஆலோசனை வழங்கினர். அதன்பேரில் விருதுநகர் தேசபந்து மைதானத்தில் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.அப்போதிருந்த காங்கிரஸ் அரசு சங்கரலிங்கனாரின் கோரிக்கைகளை ஏற்கவில்லை.
அதற்குள் சங்கரலிங்கனாரின் உண்ணாவிரதம் பல சலசலப்புகளை ஏற்படுத்த ஆரம்பித்துவிட்டது. ம.பொ.சிவஞானம்,அண்ணா, காமராசர், ஜீவானந்தம், கக்கன் உட்படப் பல தலைவர்கள் உண்ணாவிரதத்தை கைவிடச் சொல்லிக் கோரிக்கை விடுத்தனர். இருந்தும் உண்ணாவிரதம் நிறுத்தப்படவில்லை.நாளாக நாளாகச் சங்கரலிங்கனாரின் உடல்நிலை மோசமானது. விருதுநகருக்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசினார் அண்ணா. அப்போது தொடர்ந்து மூன்று கடிதங்களை அவருக்கு எழுதினார் சங்கரலிங்கனார்.

“பொதுஜனங்களின் விருப்பத்திற்கு மாறாகத் தவறான வழியில், கண்மூடித்தனமாகப் போய்க் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி ஒழிந்தே தீரும். அறிவுத் திறன் இருந்தால் திருத்திக்கொள்ளட்டும்” என்று ‘எச்சரிக்கையுடன்’ எழுதியிருக்கிறார் அவற்றில். 76 நாட்கள்வரை அவருடைய உண்ணாவிரதம் தொடர்ந்தது. தமிழகத்தில் அப்போதிருந்த தின இதழ்களில் இதுகுறித்த செய்திகள் தினமும் வெளிவந்து கொண்டிருந்தன.

அக்டோபர் 10-ஆம் தேதி அன்று நிலைமை மோசமாகி சங்கரலிங்கனார் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். 13.10.1956 அன்று அவருடைய உயிர் பிரிந்தது.அப்போது சென்னை மாகாணத்தில் இந்தச் செய்தி பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சென்னை நகரக் கல்லூரி மாணவர்கள் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தனர். மதுரை எர்ஸ்கின் மருத்துவமனையிலிருந்த சங்கரலிங்கனாரின் உடல் மதுரை தத்தனேரியில் அடக்கம் செய்யப்பட்டபோது பல கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். இறந்தபின் தன் உடலைப் பொதுவுடமைக் கட்சியிடம் ஒப்படைத்து இறுதிமரியாதை செய்ய வேண்டும் என்று தெளிவாகக் கூறி இருந்தார் சங்கரலிங்கனார். அதையொட்டி அவரை அடக்கம் செய்வதில் துணை நின்றவர்கள் ஜீவா உட்பட பொதுவுடமைக் கட்சித் தலைவர்கள்.

சங்கரலிங்கனாரின் ‘தமிழ்நாடு’ பெயர் சூட்டுவது குறித்த கோரிக்கைக்கு அவருடைய மறைவுக்குப் பிறகு அழுத்தம் கொடுக்கப்பட்டு பல இயக்கங்கள் அந்தக் கோரிக்கைகளை முன்வைத்தன.சட்ட மன்றத்தில் உணர்ச்சி மிகுந்த நீண்டதொரு உரையை ஆற்றினார் ஜீவா.
1957ஆம் ஆண்டு ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்பதை ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்ற வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டுவந்தது திமுக. தீர்மானத்துக்கு ஆதரவாக வெறும் 42 வாக்குகளே கிடைத்தன. எதிர்த்து 127 வாக்குகள் பதிவாகின. அப்போது காமராஜர் முதலமைச்சராக இருந்தார். (1954–1963)

திமுகவின் முதல் தீர்மானம் முழுமையாகத் தோல்வியடைந்த நிலையில் கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் பூபேஷ் குப்தா தமிழ்நாடு பெயர் மாற்றம் கோரி தனித் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தார் . இதனை ஆதரித்து அண்ணா தமிழ்நாடு என ஏன் பெயர் மாற்றப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் உரையாற்றினார் . ஆனால் அந்தத் தனித் தீர்மானமும் நிறைவேறவில்லை.

காமராஜருக்குப் பிறகு பக்தவத்சலம் முதல்வராக இருந்த காலகட்டத்திலும் திமுக தமிழ்நாடு பெயர் மாற்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தது. 'மெட்ராஸ் ஸ்டேட் என்றால் அனைவருக்கும் பரிட்சயம் , தமிழ்நாடு என்பதை இனிதான் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் .சர்வதேச அரங்கிலும் மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரே அனைவரிடமும் அறியப்பட்டுள்ளது' என்றெல்லாம் ஐயப்பாடுகள் எழுப்பப்பட்டு, விவாதத்தோடே அந்தத் தீர்மானத்திற்கு முட்டுக்கட்டை போடப்பட்டது.

1967 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியைப் பிடித்து அண்ணா முதல்வரானார் . அப்போது தமிழ்நாடு பெயர் மாற்றத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. முதலில் அண்ணா செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை ஏப்ரல் 14,1967- இல் ஒரு தீர்மானம் வாயிலாக ‘தமிழக அரசு’ என மாற்றினார். அதன் தொடர்ச்சியாக 1968 சூலை 18இல் சென்னை மாநிலத்தை ‘தமிழ்நாடு’ ஆகப் பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.( 23.11.1968இல் தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.)

தமிழ்நாடு என்று பெயர் சூட்டக்கோரி, உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகி சங்கரலிங்கனாரின் பங்களிப்பையும் ம.பொ.சிவஞானம் போன்றோரின் தொடர் முயற்சிகளையும் நினைவு கூர்ந்தார் முதலமைச்சர் அண்ணா. அண்ணா ''தமிழ்நாடு'' என்று சட்டமன்றத்தில் மூன்று முறை முழங்க உறுப்பினர்கள் ''வாழ்க'' என்று ஓங்கிக் குரல் எழுப்பினார்கள். அந்தக் குரல் காற்றில் கரைந்து சட்டமன்றத்துக்கு எதிரே இருக்கும் வங்கக் கரையில் உணர்ச்சிப் பொங்க எதிரொலித்தது  முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை: