திங்கள், 14 அக்டோபர், 2019

ராதாபுரம் ....அப்பாவு கோரிக்கை நிராகரிப்பு!

ராதாபுரம் ரிசல்ட்: அப்பாவு கோரிக்கை நிராகரிப்பு!மின்னம்பலம் : ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை வழக்கு தொடர்பாக அப்பாவு வைத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
2016 சட்டமன்றத் தேர்தலில் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் அதிமுக சார்பாக இன்பதுரையும், திமுக சார்பில் அப்பாவுவும் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை முடிவில் இன்பதுரை 69,590 வாக்குகள் பெற்றதாகவும். அப்பாவுவிற்கு 69,541 வாக்குகள் கிடைத்ததாகவும், அப்பாவுவை விட 49 வாக்குகள் அதிகம் பெற்ற இன்பதுரை வெற்றிபெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில், தபால் வாக்குகளையும் 19,20,21 ஆகிய சுற்றுகளில் எண்ணப்பட்ட வாக்குகளையும் மீண்டும் எண்ண வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, கடந்த 4ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது.

ஆனால், இதனை எதிர்த்து அன்றைய தினத்திலேயே உச்ச நீதிமன்றம் சென்றார் இன்பதுரை. மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட தடை விதித்த உச்ச நீதிமன்றம், வழக்கையும் வரும் 23ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது. அத்தோடு அப்பாவு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியும் உத்தரவிட்டது.
இந்த நிலையில் ஒருவார காலம் விடுமுறை முடிந்து இன்று (அக்டோபர் 14) காலை உச்ச நீதிமன்றம் செயல்பட தொடங்கியது. அப்போது, அப்பாவு தரப்பிலிருந்து ஆஜரான வழக்கறிஞர் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பாக இன்பதுரை தொடர்ந்த வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், இந்தக் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், வழக்கு பட்டியலிட்ட பிறகு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்துவிட்டனர்.
வழக்கு வரும் 23ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் பட்சத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தல் முடிவுகளுடன், ராதாபுரம் தொகுதியின் மறுவாக்கு எண்ணிக்கை முடிவும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கின் விசாரணை நீளும் பட்சத்தில் மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகத் தாமதமாகலாம்.
இதுதொடர்பாக திமுக வழக்கறிஞர்கள் வட்டாரத்தில் விசாரித்தபோது, “இந்த வழக்கை இழுத்தடிக்க வேண்டும் என்பதுதான் அதிமுகவின் நோக்கம். இல்லையெனில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றம் சென்றிருக்க மாட்டார்கள். வரும் 23ஆம் தேதி விசாரணைக்கு வந்தாலும் அந்த வழக்கை அதிமுகவினர் இழுத்தடிக்க நினைத்து அவகாசம்தான் கோருவர். ஆகவேதான், முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என தற்போது கோரிக்கை விடுத்திருக்கிறோம். ஆனாலும், எங்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுவிட்டது. எனினும் 23ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தால், இதனை குறிப்பிட்டு நாங்கள் வழக்கை விரைவில் முடிக்கக் கோருவோம்” என்று தெரிவித்தனர்

கருத்துகள் இல்லை: