புதன், 11 செப்டம்பர், 2019

வைகோ ஆட்கொணர்வு மனு :பாரூக் அப்துல்லாவை காணவில்லை .. உச்ச நீதிமன்றத்தில் .

பரூக் அப்துல்லாவை காணவில்லை: தேடும் வைகோமின்னம்பலம் : ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை கண்டறிந்து தருமாறு உச்ச நீதிமன்றத்தில் வைகோ ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, அம்மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி ரத்துசெய்யப்பட்டது. காஷ்மீரில் போராட்டங்கள் நடைபெறுவதை தடுக்க முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட தலைவர்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே மதிமுக சார்பில் சென்னை நந்தனத்தில் நடைபெறவுள்ள பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவில், பரூக் அப்துல்லா கலந்துகொள்வார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவிப்பு வெளியிட்டார்.

விழாவுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் உச்ச நீதிமன்றத்தில் வைகோ தரப்பிலிருந்து இன்று (செப்டம்பர் 11) ஆட்கொணர்வு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதில், “அண்ணா பிறந்தநாள் மாநாட்டில் கலந்துகொள்ள காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா ஒப்புக்கொண்டார். ஆனால், அதற்கான அழைப்பிதழை பரூக் அப்துல்லாவிடம் எங்களால் அளிக்க இயலவில்லை. அவர் எங்கு இருக்கிறார் என்றும் தெரியவில்லை. காஷ்மீர் விவகாரம் மிகப்பெரிய பிரச்சினையாக இருந்துவரும் சூழலில், அங்கு அரசியல் தலைவர்கள் சட்டத்திற்கு புறம்பாக சிறை வைக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “பரூக் அப்துல்லா வீட்டுக் காவலில் வைக்கப்படவில்லை என்று உள் துறை அமைச்சர் சொன்னாலும் கூட அவரை எங்களால் இதுவரை தொடர்புகொள்ள முடியவில்லை. அவர் எங்கு இருக்கிறார் என்ற கேள்வியும் எங்களுக்குள் எழுந்துள்ளது. எனவே பரூக் அப்துல்லாவை உச்ச நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்றும் வைகோவின் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இம்மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி ரமணா அமர்வின் முன்பு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், புதிய மனுக்களை விசாரிப்பது தொடர்பாக தலைமை நீதிபதிதான் முடிவு செய்வார். எனவே அவரிடம் முறையிடுங்கள் என்று ரமணா அமர்வு தெரிவித்துவிட்டது. தலைமை நீதிபதி அமர்வில் முறையிடும் பட்சத்தில் இவ்வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: