சனி, 14 செப்டம்பர், 2019

ரணில் விக்கிரமசிங்கவுடன் கனிமொழி சந்திப்பு: மீனவர் பிரச்னைக்குத் தீர்வு காண வலியுறுத்தல்

தினமணி : இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை வெள்ளிக்கிழமை
சந்தித்த மக்களவை உறுப்பினர் கனிமொழி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன்  உள்ளிட்டோர். இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நாடாளுமன்ற திமுக குழு துணைத் தலைவர் கனிமொழி வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பின்போது தமிழக மீனவர் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் இலங்கை அரசின் கடினமான சட்டங்களைத் தளர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனிமொழி வலியுறுத்தினார். இலங்கை அமைச்சரும், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைவருமான  ரவூப் ஹக்கீம் மகளின் திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக மதுரையிலிருந்து வியாழக்கிழமை விமானம் மூலம் கனிமொழி இலங்கை சென்றிருந்தார். இந்த நிலையில், இலங்கையில் வெள்ளிக்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை கனிமொழி சந்தித்துப் பேசினார்.
அப்போது, கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு மலரையும் அவரிடம் வழங்கினார். அதன்பிறகு, தமிழக மீனவர் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் இலங்கை அரசின் கடுமையான சட்டங்களைத் தளர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இரு நாட்டு மீனவர் பிரச்னையை மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும் என்றும், இந்திய மீனவர்களை விடுதலை செய்யும்போதும் அவர்களின் படகுகளையும் சேர்த்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரினார். மேலும், இருநாட்டு மீனவப் பிரதிநிதிகளுடன் ஒரு சந்திப்பை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் திலிப் வெதாராச்சியையும் சந்தித்துப் பேசினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீனும் உடனிருந்தனர்

கருத்துகள் இல்லை: