திங்கள், 9 செப்டம்பர், 2019

அமித் ஷா : சட்ட விரோதமாக குடியேறிய ஒருவர் கூட இருக்க முடியாது!

யாரின் பெயரும் இல்லை tamil.oneindia.com  :டெல்லி: இந்தியாவில் சட்ட விரோதமாக குடியேறிய ஒருவர் கூட இருக்க முடியாது, எல்லோரும் வெளியேற்றப்படுவார்கள் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
1968ல் வங்கதேசம் உருவாகும் முன் அங்கு இருந்த கிழக்கு பாகிஸ்தானில் திடீர் மதக்கலவரம் ஏற்பட்டது. இதனால் அப்போது அங்கிருந்து அதிக அளவில் இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்கள் இந்தியாவில் குடியேறினார்கள்.
இந்தியாவிற்கு (பெரும்பாலும் அசாம்) வந்த அவர்கள் அகதிகளாக தங்களை பதிவு செய்து கொண்டனர். 1951ல் உருவாக்கப்பட்ட குடிமக்களின் தேசிய பதிவேட்டில் (National Register of Citizens) இந்திய மக்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டது. இந்த நிலையில் இதன் புதுப்பிக்கப்பட்ட பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.
இந்த புதிய பட்டியலில் அசாமில் குடியேறி இருக்கும் வங்கதேச அகதிகளின் பெயர்கள் இடம்பெறவில்லை. பல வருடங்களாக அவர்கள் இந்தியாவில் இருந்தும். குடியுரிமைக்கு விண்ணப்பித்தும் கூட அவர்களால் இந்தியாவில் குடியுரிமை பெற முடியவில்லை. மொத்தம் 3,30,27,661 பேர் குடியுரிமைக்கு விண்ணப்பித்தனர்.
ஆனால் குடிமக்களின் தேசிய பதிவேட்டில் வெறும் 3,11,21,004 நபர்களின் பெயர்கள்தான் இடம்பெற்று இருந்தது. 19,06,657 நபர்களின் பெயர்கள் இதில் விடுபட்டு உள்ளது. இதனால் இவர்கள் எல்லாம் இந்தியாவில் விரைவில் கட்டப்படும் அகதிகள் முகாமில் அடைக்கப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள். கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி இந்த புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

 இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சரும் வடகிழக்கு மாநில கவுன்சில் தலைவருமான அமித் ஷா பேட்டி அளித்தார். அதில், தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து பலர் பல்வேறு விதமான கேள்விகளை எழுப்பினார்கள். நான் அவர்களுக்கு எல்லாம் ஒன்றுதான் சொல்ல விரும்புகிறேன்.
இந்தியாவில் சட்ட விரோதமாக குடியேறிய ஒருவர் கூட இருக்க முடியாது. எல்லோரையும் நாங்கள் வெளியே அனுப்ப தயார் ஆகிவிட்டோம். அதற்காக தீவிரமாக உழைத்து வருகிறோம்.
தேசிய குடிமக்கள் பதிவேடு, நேரத்தை கணக்கில் கொண்டு வேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக குடியேறியவர்கள் இதன் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளனர், என்று அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: